சுழன்று அடித்த புயல்.. டார்ச் வெளிச்சத்தில் பிரசவம்.. குழந்தைக்கு கஜஸ்ரீ என பெயர்.. நாகையில் கலகல
நாகை: கஜா புயலின் போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டார்ச் லைட் வெளிச்சத்தில் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு கஜஸ்ரீ என பெயரிடப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 15-ஆம் தேதி நாகையில் கஜா புயல் வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. அப்போது தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, திண்டுக்கல். கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதில் பலர் வீடு, கால்நடைகள், வாழ்வாதாரம் ஆகியவற்றை இழந்தனர்.
இந்நிலையில் நாகையில் கஜா புயலின்போது ஆரம்ப சுகாதார நிலையத்தில் டார்ச் வெளிச்சத்தில் பெண்ணுக்கு பிரசவம் நடைபெற்றது.
தேவூர் அரசு
நாகை மாவட்டம் தெற்களத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி மஞ்சுளா. இவர் கஜா புயலின்போது கடந்த வியாழக்கிழமை தேவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார்.
மழை நீர்
கஜா புயலின் போது பிறந்ததால் அக்குழந்தைக்கு கஜஸ்ரீ என பெயரிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மஞ்சுளா கூறுகையில் மருத்துவமனையில் என்னை சேர்த்தனர். அப்போது கனமழை பெய்தது. மருத்துவமனையில் ஜன்னல் வழியாக மழைநீர் புகுந்தது.
நண்பன்
அப்போது கரென்ட்டும் இல்லை. இதனால் டார்ச் லைட்டை அடித்து மருத்துவர்கள் பிரசவம் பார்த்தனர் என்றார் மஞ்சுளா. இவர்களுக்கு 2 வயதில் கனிஷ்கா என்ற குழந்தை உள்ளது. விஜய் நடிப்பில் வெளிவந்த நண்பன் படத்திலும் இதுபோன்ற ஒரு காட்சி வைக்கப்பட்டிருந்தது.
பிரசவ வலி
அதிலும் இரவு நேரத்தில் மழை பெய்யும் போது ஒரு கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்படும். மழையால் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டிருக்கும். அந்த பெண்ணுக்கு விஜய் பிரசவம் பார்ப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.