துக்க வீட்டுக்கு ’மாலை’ வேண்டாமே! ரூ.200 பணமா கொடுத்திடுங்க! கட்டுப்பாடு போட்ட முன்மாதிரி கிராமம்!
நாகை : எதிர்பாராத மரணம் உள்ளிட்ட துக்க நிகழ்வுகள் வீட்டில் நிகழும் போது மாலை, பட்டாசு என தேவையில்லாத செலவு செய்வதை விட, உயிரிழந்த நபருக்கு ஊர் சார்பாக ஒரு மாலை மட்டுமே அணிவிக்க வேண்டும் மற்றவர்கள் 200 ரூபாய் பணமாக கொடுத்து விட வேண்டும் என நாகை அருகே ஒரு முன்மாதிரி கிராமத்தில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பது சமூக வலைதளங்களில் பாராட்டுகளை பெற்று வருகிறது.
வயது முதிர்வு காரணமாகவோ அல்லது எதிர்பாராத விபத்து உள்ளிட்ட காரணங்களால் ஒருவர் இறந்து விட்டால் அந்த குடும்பமே சோகத்தில் மூழ்கிவிடும். மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ஒரு குடும்பத் தலைவரை இறந்தவர்களின் நிலை சொல்லி மாளாது.
ஒருவர் இறக்கும்போது மாலைகள், மலர் வளையங்கள், பட்டாசுகள் என வெடித்து தேவையில்லாமல் செலவு செய்யும் பழக்கம் நகர்ப்புறங்களில் குறைந்து இருந்தாலும் கிராமப்புறங்களில் இன்னும் அதிக அளவில் இருக்கிறது,
துக்க நிகழ்ச்சி
உறவினர்கள் இப்படி செய்தாலும் குடும்பத்தின் ஒருவரை இழந்த குடும்பத்தினருக்கு மிகப்பெரிய இழப்பு. பணக்காரர்களுக்கு ஒரு பெரிய பிரச்சனை இல்லை என்றாலும் அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதற்காக குடும்பத் தலைவரை நம்பி இருப்பவர்கள் நபரை இழந்துவிட்டால் பொருளாதார ரீதியில் மிகுந்த சிக்கலை சந்திக்க வேண்டும். இறுதிச் சடங்குக்கும் குறிப்பிட்ட ஒரு தொகை தேவைப்படும் கிராமப்புறங்களில் தற்போது துக்க வீடுகளில் சேலை நெல் உள்ளிட்டவற்றை வழங்கும் பழக்கம் இன்னமும் இருக்கிறது. அதனால் பெரிய அளவில் நன்மை கிடைக்கப் போவதில்லை.
ஆச்சர்ய கிராமம்
பணமாக கிடைக்கும்போது அவர்களுக்கு ஆறுதலாகவும் பொருளாதார ரீதியாக பெரிய உதவியாகவும் இருக்கும். அப்படி ஒரு முடிவு எடுத்து ஆச்சரியத்தில் மூழ்க வைத்திருக்கின்றனர் ஒரு கிராமத்தினர். வேறு எங்கும் இல்லை தமிழகத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆயக்காரன்புலம் கிராமத்தில் தான் இந்த அதிரடி மற்றும் ஆச்சரிய முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. வேதாரணியம் வட்டம் ஆயக்காரன்புலம் இரண்டாம் சேத்தி ஊராட்சியில் சாந்தன்வெளி அகரம் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.
மாலைகளுக்கு செலவு
அந்தப் பகுதியில் துக்கம் நடக்கும் போதெல்லாம் ஆயிரக்கணக்கில் மாலைகளுக்கு மட்டும் செலவு செய்து வீணாவது வழக்கம். இந்த நிலையில் தான் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் உயிரிழந்த நபர்களுக்கு இறுதி மரியாதை செய்வது தொடர்பாக சமீபத்தில் கூட்டம் ஒன்றை நடத்தி இருக்கின்றனர்.அந்தக் கூட்டத்தில் கிராமங்களில் யாராவது மரணம் அடைந்தால் கிராமத்தில் வசிக்கும் மக்கள் சார்பாக ஒரே ஒரு மாலை மட்டும் அணிவித்து இறுதிச் சடங்குகள் செய்ய வேண்டும் இறப்பு செய்தியை அறிவிக்கும் போது துக்க நிகழ்ச்சிக்கு வருபவர்கள் மாலை, மலர் வளையம் உள்ளிட்டவற்றை கொண்டு வர வேண்டாம் என ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட வேண்டும் என ஊர் மக்கள் அனைவரும் முடிவு செய்து இருக்கிறார்கள்.
கட்டுப்பாடு
மாலை வாங்க வசதியற்றோர் துக்க நிகழ்ச்சிக்கு வர முடியாமல் தவிர்ப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ மாலைகள் அணிவிக்கும் போது ஏற்படும் தாழ்வு மனப்பான்மையை தவிர்க்க வேண்டும் என்பதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஊர் மக்கள் சார்பில் இறந்தவருக்கு ஒரு மாலை மட்டுமே அணிவிப்பதோடு, ட்ரம் செட் வைக்க கூடாது, மாலைக்கு பதிலாக இறந்தவரின் குடும்பத்தினருக்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்வோர் 200 வழங்க வேண்டும். அந்தத் தொகையில் இறுதிச்சடங்கு நடத்துவதோடு பிற்காலத்தில் அவர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவியாக இருக்கும் எனவும் முடிவு செய்து இருக்கிறார்கள்.
பணம் வசூல்
இறுதிச் சடங்கின் போது வசூல் செய்யப்படும் மொத்த பணத்தை வசதியாக இருப்பவர்கள் தங்களுக்கு வேண்டாம் என மறுத்து விட்டால் அந்தத் தொகையை வைத்திருந்து கிராமத்தில் வேறு ஏதாவது துக்க நிகழ்ச்சிகள் நடைபெறும்போது அந்தப் பணத்தில் இறப்புக்கு செலவு செய்யலாம் என முடிவெடுத்து இருக்கிறார்கள். இறந்த நபர்களுக்கு மாலை போடுவது தொடர்பாக இந்த கிராமத்தினர் எடுத்துள்ள முடிவு சமூக வலைதளங்களில் வெகுவாக பாராட்டுகளை பெற்றிருக்கிறது. மற்றொரு விஷயத்தையும் இந்த கிராம மக்கள் கூறியிருக்கின்றனர்.
பாராட்டு
அதாவது பட்டாசு வெடித்து நூற்றுக்கணக்கான மாலைகளை டாட்டா ஏசி வாகனங்களில் ஏற்றிக்கொண்டு வழிநெடுகிலும் தூவி செல்லும்போது விபத்துகளில் சிக்கும் நிகழ்வுகளும் ஏற்படுகிறது. இதனால் சுற்றுச்சூழலும் மாசுபடுகிறது. எனவே பல்வேறு விஷயங்களை கருத்தில் கொண்டு துக்க நிகழ்வுகளுக்கு மாலை போடுவதை தவிர்க்க முடிவு செய்திருப்பதாகவும். இதனால் ஏழை பணக்காரன் என்ற வயது வித்தியாசம் இன்றி ஒருவர் இறுதி சடங்கில் கலந்து கொள்ளலாம். அனைவரும் சமம் என்பதற்காகவே இந்த முயற்சியை நாங்கள் கையில் எடுத்துள்ளோம் என்கின்றனர் அந்த கிராம மக்கள். இதை அடுத்து பலரும் அவர்களுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.