Vijay: நான் களத்துக்கு வர்றது எல்லாம் புதுசு இல்லை கண்ணா.. 14 வருஷம் முன்னாடியே வந்தாச்சு.. நாகையில் விஜய்
நாகை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று நாகை புத்தூர் அண்ணா சிலை பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய விஜய், "நான் களத்துக்கு வர்றது எல்லாம் புதுசு இல்லை கண்ணா.. மீனவர்களுக்காக நான் 14 வருஷம் முன்னாடியே பேசினேன்" என்று கூறினார். முன்னதாக நாகை வந்த விஜய்க்கு வழி நெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனால் நாகை பகுதியே தமிழக வெற்றிக் கழக தொண்டர்களால் மிதந்தது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் விக்கிரவாண்டி, மதுரை மாநாட்டை தொடர்ந்து மக்கள் சந்திப்பு பயணத்தை கடந்த வாரம் சனிக்கிழமை முதல் தொடங்கியுள்ளார். மாநாட்டில் தான் மக்கள், தொண்டர்கள் கூட்டம் அதிகமாக வந்த நிலையில், மக்கள் சந்திப்பு பயணத்துக்கும் அதிகளவு மக்கள் விஜய்யை காண குவிந்து வருகிறார்கள்.

நாகையில் குவிந்த தவெக தொண்டர்கள்
முதன் முதலாக திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 3 இடங்களில் விஜய் மக்களை சந்திக்க திட்டமிட்டு இருந்த நிலையில் திருச்சியில் விஜய்க்கு கொடுத்த வரவேற்பு காரணமாக திருச்சி மற்றும் அரியலூரில் மட்டுமே விஜய் மக்களை சந்தித்து பேச முடிந்தது. பெரம்பலூரில் நள்ளிரவு 1 மணி வரை மக்கள், தொண்டர்கள் காத்திருந்தும் விஜய்யால் அங்கு செல்ல முடியாத அளவுக்கு கூட்டம் இருந்ததால் சந்திப்பு பயணம் ஒத்தி வைக்கப்பட்டது.
இதையடுத்து விஜய் மக்கள் சந்திப்பு பயணம் 2 மாவட்டங்களாக குறைத்து மாற்றி அமைக்கப்பட்டது. அதன்படி இந்த சனிக்கிழமை விஜய், நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொண்டுள்ளார். நாகை புத்தூர் அண்ணா சிலை முன்பு தான் விஜய் மக்களிடம் பேசுகிறார். இதனால் இன்று அதிகாலையில் இருந்தே அந்த இடத்தில் தவெக தொண்டர்கள் குவியத் தொடங்கினர்.
விஜய்க்கு உற்சாக வரவேற்பு
இன்று காலையில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்த விஜய், அங்கிருந்து காரில் வந்தார். திருச்சி அம்மையப்பன் பகுதி வரை காரில் வந்து அங்கிருந்து விஜய்யின் பிரச்சார வாகனத்தில் புறப்பட்டார். வழி நெடுகிலும் விஜய்க்கு மக்கள் வரவேற்பு கொடுத்தனர். நாகைக்குள் வந்தபோதும் தொண்டர்கள் அவருக்கு வீரவாள் கொடுத்து வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து மக்கள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
விஜய் பேசியதாவது:- எல்லாரும் எப்படி இருக்கீங்க.. எல்லாரும் சாப்டீங்களா.. மீனவ நண்பர்களில் ஒருவனா நா இங்க வந்துருக்கேன்.. உழைக்கும் மக்கள் இருக்கின்ற ஊர் தான் நம்ம நாகப்பட்டினம். எங்கள் ஆட்சி தான் சாட்சி.. அப்படி இப்படின்னு அடைமொழி பேசிக்கொண்டு இருக்கீங்க.. இலங்கை கடற்படையால் நம் மீனவர்கள் தாக்கப்படுவதையும், அதற்கான காரணம் பற்றியும், மீனவர்களுடன் நிற்பது பற்றியும் பேசிக்கொண்டு இருந்தேன்.. அதற்கும் விமர்சிக்கிறாங்க..
மீன் ஏற்றுமதியில் நாகை மாவட்டம் முன்னிலை வகிக்கிறது. இதே நாகப்பட்டினத்தில் 2011இல் 14 வருடங்களுக்கு முன்னாள் மீனவர்கள் தாக்கப்பட்டதிற்காக பொதுக்கூட்டத்தில் நான் பங்கேற்றேன். விஜய் களத்துக்கு வருவது ஒன்றும் புதிதல்ல. எப்போதோ வந்து விட்டேன். இது புரிய வேண்டியவர்களுக்கு புரியும். நான் களத்துக்கு வர்றது எல்லாம் புதுசு இல்லை கண்ணா.. இவ்வாறு அவர் பேசினார்.
ஆம்புலன்ஸ்க்கு வழி விட்ட தொண்டர்கள்
முன்னதாக விஜய் பிரச்சாரம் மேற்கொள்ளும் புத்தூர் அண்ணா சிலைபகுதியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குழுமியிருந்த நிலையிலும் ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்ட நிகழ்வு அரங்கேறியது. அவ்வளவு கூட்டத்திலும் தவெக தொண்டர்கள் அனைவரும் ஒதுங்கி நின்று ஆம்புலன்ஸுக்கு வழிவிட்டனர். இதனால் எந்த சிரமமும் இன்றி ஆம்புலன்ஸ் அப்பகுதியை கடந்து சென்றது.
இதேபோன்று விஜய் பரப்புரை செய்யும் இடத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்ததால் சிலர் விஜய்யை காண்பதற்காக புத்தூர் அண்ணா சிலை பகுதியில் வீடுகள், கட்டிடங்களின் மேற்கூரையில் ஏறி நின்றனர். இதனால் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் அங்கு மின் தடை செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications