ஒற்றை போட்டோ.. வாடகை வீடு டூ சொந்த வீடு! வேலம்மாள் பாட்டி நிலையை மாற்றிய ஜாக்சன் ஹெர்பியின் சோக கதை
நாகர்கோவில்: முதலமைச்சரின் ரூ.2,000 நிதியுதவி திட்டத்திற்காக புகைப்படக் கலைஞர் ஜாக்சன் ஹெர்பி எடுத்த புகைப்படத்தின் மூலம் வேலம்மாள் பாட்டிக்கு சொந்த வீடு கிடைக்க வழிவகை செய்து இருக்கிறார்.
கையில் 2000 ரூபாய் பணம்.. மஞ்சள் பை.. சிவப்பு நிற மாஸ்க்.. பற்கள் இல்லாத பொக்கை வாயுடன் அழகான சிரிப்பு. வேலம்மாள் பாட்டி என்றவுடன் தமிழ்நாடு மக்களின் நினைவுக்கு வரும் காட்சி இது. அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாத இந்த புகைப்படத்தை எடுத்தவர் ஜாக்சன் ஹெர்பி.
கொரோனா 2 வது அலையால் பாதிக்கப்பட்டிருந்த தமிழ்நாடு மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.4,000 நிதியுதவி மற்றும் மளிகை பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை அறிவித்தார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் 2 வது தவணையாக ரூ.2,000 பணம் மற்றும் மளிகை பொருள் தொகுப்பு வழங்கப்பட்டது.

வேலம்மாள் பாட்டியின் சிரிப்பு
கொரோனா ஊரடங்கால் வேலையிழந்து வருமானமின்றி பசியில் வாடிய மக்கள் மன நிறைவோடு இதனை பெற்றுச் சென்றனர். ரேசன் கடையில் ரூ.2,000 பணத்தையும் மளிகை பொருள் தொகுப்பையும் பெற்ற வேலம்மாள் பாட்டிக்கு ஒரே சிரிப்பு. அதை கச்சிதமாக படம் பிடித்தார் அப்போது நாகர்கோவில் மாநகராட்சியின் புகைப்படக் கலைஞராக இருந்த ஜாக்சன் ஹெர்பி.

முதலமைச்சர் பாராட்டு
இந்த திட்டம் தொடர்பான செய்தியை வெளியிட்ட ஊடகங்கள் அனைத்தும் ஜாக்சன் ஹெர்பி எடுத்த வேலம்மாள் பாட்டியின் படத்தையே பயன்படுத்தின. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே தனது ட்விட்டர் பக்கத்தில் வேலம்மாள் பாட்டியின் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அரசின் கொரோனா நிவாரண உதவி திட்டத்தை ஒற்றை படத்தில் மக்கள் முன் கொண்டு சென்ற ஜாக்சன் ஹெர்பியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்தே பாராட்டினார்.

வேலை இழந்த ஜாக்சன் ஹெர்பி
இந்த அங்கீகாரத்தின் மூலம் புகைப்படத்துறையில் முன்னேறிவிடலாம் என்று நினைத்த ஜாக்சன் ஹெர்பிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி காத்திருந்தது. மாநகராட்சி புகைப்படக் கலைஞர் பணியை அவர் இழக்க, பொருளாதார தேவைக்காக தனி நபர் கேமராமேனாக பணியாற்றி வருகிறார். அதே நேரம் தனது திறமைக்கு அங்கீகாரம் கிடைக்க காரணமாக இருந்த வேலம்மாள் பாட்டியை அவர் மறக்கவில்லை.

வீடு வழங்க கோரிக்கை
தனிமையில் வாடகை வீட்டில் வறுமையில் வாடிய பாட்டியை அடிக்கடி சென்று பார்த்து நலம் விசாரித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஜாக்சன் ஹெர்பி வேலம்மாள் பாட்டி பேசும் வீடியோ ஒன்றை வெளியிட்டார் "முதலமைச்சர் ஐயா! நீங்க வீடு தாங்க என்று சொன்னேன். கலெக்டரை பார்க்க சென்றேன். அவரும் தருவதாக சொன்னார். இதுவரை தரவில்லை. தெருவில் நிக்கிறேன் ஐயா!" என்று வேலம்மாள் பாட்டி வேதனை தெரிவித்தார்.

இடிபடப்போகும் வீடுகள்
கடந்த மார்ச் மாதம் கன்னியாகுமரி வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னை சந்தித்தபோது சொன்னதை குறிப்பிட்டு வேலம்மாள் பாட்டி இவ்வாறு சொன்னார். இது தொடர்பாக நாம் ஒன் இந்தியா தமிழ் சார்பாக ஜாக்சன் ஹெர்பியிடம் பேசியபோது, பாட்டி தங்கி இருக்கும் வாடகை வீடு புறம்போக்கு நிலத்தில் இருப்பதால் அது இடிக்கப்பட இருப்பதாகவும் வீடு வழங்கினால் அவருக்கு உதவிகரமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

கிடைத்தது வீடு
இதனை நாம் செய்தியாக வெளியிட்ட சில நிமிடங்களிலேயே அது அதிகளவில் பகிரப்பட்டு அரசு மற்றும் கவனத்தையும் ஈர்த்தது. நேரடியாக முதலமைச்சரே மாவட்ட ஆட்சியரிடம் தொடர்புகொண்டு பேசி பாட்டிக்கு வீடு வழங்க உத்தரவிட்டிருக்கிறார். அதன்பேரில் இன்று கோட்டாட்சியர் பாட்டிக்கு குடிசை மாற்று வாரிய வீடு ஒதுக்கப்பட்டதற்கான ஆணையை வழங்கி உள்ளார்.

ஜாக்சன் ஹெர்பி வேதனை
அத்துடன் குடிசை மாற்று வாரியத்துக்கு வழங்க வேண்டிய ரூ.76,000 தொகை திமுக சார்பில் ஆட்சியரிடம் வழங்கப்பட்டுள்ளது. ஜாக்சன் ஹெர்பி வேலம்மாள் பாட்டியுடன் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து மீண்டும் வீடியோ வெளியிட்டுள்ளார். வேலம்மாள் பாட்டிக்கு புகைப்படம் மூலமாக வீடு வாங்கிக் கொடுத்த ஜாக்சன் ஹெர்பி, வேலையை இழந்து தற்போது பொருளாதார நெருக்கடியில் வாடி வருவதுதான் வேதனை.












Click it and Unblock the Notifications