அங்கேயுமா? திண்டுக்கல்லில் வெடிசப்தம் கேட்ட அதேநேரத்தில் அதிர்வுகளால் அதிர்ந்த நாமக்கல்!
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் திடீரென நில அதிர்வுகள் உணரப்பட்டதால் பொதுமக்கள் அச்சம அடைந்தனர். அதேநேரத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் பயங்கர வெடிசப்தமும் கேட்டதால் இரண்டுக்கும் ஏதேனும் தொடர்பிருக்கலாமோ என்கிற சந்தேகமும் எழுப்பப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று மீண்டும் பயங்கர வெடிசப்தம் கேட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் பல முறை இதேபோல பயங்கர வெடிசப்தங்கள் கேட்பதும் மாவட்ட நிர்வாகம் மழுப்பலான பதிலைத் தருவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு சட்டசபையில் வேடசந்தூர் எம்.எல்.ஏ. காந்திராஜன் இது தொடர்பாக கேள்வி எழுப்பி இருந்தார்.

ஆனாலும் திண்டுக்கல் மாவட்டத்தில் அடிக்கடி கேட்கப்படும், பீதியில் உறைய வைக்கும் இந்த மர்ம சப்தங்களின் காரணம் அல்லது பின்னணி தெரியவில்லை. இன்று திண்டுக்கல்லில் வெடிசப்தம் கேட்ட அதேநேரத்தில் நாமக்கல் மாவட்டத்திலும் கடும் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்டத்தின் மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த நில அதிர்வுகள் உணரப்பட்டிருக்கின்றன. இது நில அதிர்வா? அல்லது வேறு ஏதேனும் ஒன்றா? என்பது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் கரூர் எல்லையில் ரெங்கமலை, கருமலைப் பகுதிகளில் மத்திய அரசு நடத்துகிற ஆய்வுகள் மீதுதான் பொதுமக்கள் சந்தேகம் எழுப்புகின்றனர். ரெங்கமலை, கருமலை பகுதிகளில் பூமிக்கு அடியில் ஏதேனும் ரகசிய ஆய்வுகளை மத்திய புவியியல் துறையினர் மேற்கொள்கின்றனரா? என்பதும் பொதுமக்களின் கேள்வி.
திண்டுக்கல் புறநகரில் முகாமிட்டிருக்கும் மத்திய புவியியல் துறை அதிகாரிகள் நீண்டகாலம் வேடசந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனிமவளம் தொடர்பாக ஆய்வுகள் நடத்தி அறிக்கைகளை மத்திய அரசுக்கு அனுப்பி வருகின்றனர். இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஏதேனும் ஆய்வு நடத்தப்பட்டதா? என்கிற சந்தேகமும் முன்வைக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications