கல்லெறிந்து பார்த்த ஓபிஎஸ்! எடப்பாடி கொடுத்த ‘ஸ்ட்ராங்க் மெசேஜ்’! நாமக்கல் பேச்சை கவனிச்சீங்களா?
நாமக்கல் : நீண்ட நாட்களாக சேலத்தை விட்டு வேறு எந்த பகுதிகளுக்கும் பயணம் மேற்கொள்ளாத எடப்பாடி பழனிச்சாமி இன்று நாமக்கல்லில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அந்த பேச்சின் போது பல விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுத்ததோடு ஓபிஎஸ்க்கும் முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு அதிமுக நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததோடு, அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பு போர்க்கொடி தூக்கியது.
எடப்பாடி பழனிச்சாமியை இடைக்கால பொதுச்செயலாளர் பதவிக்கு நியமித்தால் கடந்த காலங்களைப் போலவே வரும் காலத்திலும் நாம் நம்பர் 2வாக தான் இருப்போம் என்பதை உணர்ந்த ஓ.பன்னீர்செல்வம் அதற்கு இடம் கொடுக்காமல் இரட்டை தலைமையே தொடர வேண்டும் என போராடி வருகிறார்.

எடப்பாடி பழனிச்சாமி
ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என பாஜக மேலிடம் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இரட்டை தலைமையை ஏற்றுக் கொண்டால் எடப்பாடி பழனிசாமியுடன் இணைய தயார் என ஓபிஎஸ் பச்சைக் கொடி காட்டினாலும், விடாப்பிடியாக இருக்கிறார் எடப்பாடி. ஓபிஎஸ் இல்லாமலேயே கட்சியை தன்னால் வழி நடத்த முடியும் எனவும், வரும் தேர்தலிலும் பலத்தை நிரூபிக்க முடியும் என கூறி வருகிறார்.

பாஜகவின் அழுத்தம்
இதனிடையே பாஜகவின் அழுத்தம் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிகரிக்கும் ஆதரவு தனது ஆதரவாளர்களுக்கு அடுத்தடுத்து வழக்குகள் மூலம் வரும் நெருக்கடியென பல்வேறு சிக்கல்களை சந்தித்து வரும் எடப்பாடி பழனிச்சாமி சொந்த ஊரில் தங்கி இருக்கிறார். கடுமையான மன உளைச்சல் காரணமாக சேலம் தவிர பிற மாவட்டங்களில் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை என அவரது நெருங்கிய ஆதரவு வட்டங்கள் கூறி வந்தன.

பொய்யாக்கிய பேச்சு
இந்த நிலையில் கடந்த கால கணிப்புகள் அனைத்தையும் பொய்யாக்கும் வகையில் நாமக்கல்லில் இன்று நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு பேசினார். தனது நெருங்கிய ஆதரவாளரான தங்கமணிக்கும் எடப்பாடிக்கும் இடையே கருத்து மோதல்கள் இருப்பதாக கூறிய நிலையில் அதனையும் பொய்யாக்கும் வகையில் பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்திருந்தார் தங்கமணி. இதில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இணைய வாய்ப்பில்லை
நிகழ்ச்சியில் பேசிய அவர் ஆதரவாளர்கள் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் அதனை தவிடு பொடியாக்கி அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என கூறியதோடு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் நாடாளுமன்றத் தேர்தலை தான் வழி நடத்தப் போவதாக ஓ பன்னீர்செல்வம் தரப்புக்கு வெளிப்படையாக மெசேஜ் கொடுத்திருக்கிறார்.

முற்றுப் புள்ளி
அதுமட்டுமல்லாமல் ஓ.பன்னீர்செல்வத்தை பி டீம் என விமர்சித்ததோடு அதிமுகவில் பிளவில்லை என பெருமையாக கூறினார். மேலும் அதிமுக பொதுக்குழுவில் எடுத்த முடிவின்படி கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்கள் தான் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என ஒரே அடியாக ஓபிஎஸ்ஐ ஒதுக்கி வைத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் காதணி விழாவில் பேசிய ஓ பன்னீர்செல்வம் அதிமுக மீண்டும் இணையும் எனக் கூறியிருந்த நிலையில் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்பது எடப்பாடி பேச்சில் தெரிவதாக கூறுகின்றனர் அரசியல் நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications