முதல்வர் ஸ்டாலின் நிரூபிச்சிட்டார்.. இதுதான் திராவிட மாடல் ஆட்சி - மாநாட்டில் பேசிய தங்கம் தென்னரசு!
நாமக்கல் : திமுக நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, திராவிட மாடல் ஆட்சி யாரையும் புறக்கணிக்காது தோளோடு தோள் நின்று அனைவரையும் அரவணைக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சியிலும் நல்லாட்சி என்ற தலைப்பில் நாமக்கல் மாவட்டம் பொம்மைகுட்டைமேட்டில் நடைபெற்று வரும் திமுக நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டை தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார்.
உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு, ஆ.ராசா எம்.பி, திருச்சி சிவா எம்.பி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
ஒரே இடத்தில் குவிந்த மேயர்கள், கவுன்சிலர்கள்.. பிரமாண்ட மாநாட்டை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!
உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு
தி.மு.க நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு இன்று நாமக்கல்லில் நடைபெற்று வருகிது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள், துணை தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாட்டை தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்துள்ளார். இன்று மாலை முதல்வர் ஸ்டாலின் சிறப்புரை ஆற்ற இருக்கிறார்.
தங்கம் தென்னரசு சிறப்புரை
இந்த மாநாட்டில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சிறப்புரை ஆற்றினார். திராவிட மாடல் அரசின் ஓராண்டு காலம் என்ற தலைப்பில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, "மக்களுக்காக மக்களால் உருவாக்கப்பட்ட ஆட்சி தி.மு.க ஆட்சி. திராவிட மாடல் ஆட்சி என்றால் என்ன என்ற கேள்விக்கு நான் முதலமைச்சருடைய வார்த்தைகளில் இருந்து எடுத்துச் சொல்கிறேன்.
திராவிட மாடல் ஆட்சி
தந்தை பெரியார் பேசிய சமூக சீர்திருத்த கோட்பாடுகள், சீர்திருத்தக் கருத்துக்கள், அரசியல் பொருளாதாரம், கல்வி மற்றும் தொழில் வளர்ச்சி ஆகியவற்றிற்கு அடுத்த பரிணாமமாக அதைக் கொண்டு சேர்க்கக் கூடிய கட்டம். சுயமரியாதை, சமூக நீதி, மதச்சார்பின்மை, கூட்டாட்சி தத்துவம், மாநில உரிமைகள், தமிழ் மொழிக்கான வளர்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு ஆட்சி முறையை கொண்டு வருவது தான் திராவிட மாடல் ஆட்சி.
பிரிக்காது, இணைக்கும்
அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் சட்டம், திறனுக்கு ஏற்ப வேலைவாய்ப்பு, அனைவருக்கும் சம வேலைவாய்ப்புகள் என எல்லா மாவட்டத்திலும், எல்லா துறைகளிலும் உருவாக்க தூணாக நிற்கும் ஆட்சி திராவிட மாடல் ஆட்சி. திராவிட மாடல் ஆட்சி எல்லாவற்றையும் உருவாக்கும், எதையும் சிதைக்காது. சீர்தூக்கும். யாரையும் பிரிக்காது, எல்லோரையும் ஒன்று சேர்க்கும்.
நிரூபித்துள்ளார் ஸ்டாலின்
யாரையும் இந்த ஆட்சி தாழ்த்தாது, அனைவரையும் சமமாக நடத்தும். யாரையும் இந்த ஆட்சி புறக்கணிக்காது, தோளோடு தோள் நின்று அனைவரையும் அரவணைக்கும். இந்த கோட்பாடுகளைத்தான் ஆட்சிப் பொறுப்பு ஏற்று இந்த ஓராண்டு காலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து இன்று நிரூபித்து வருகிறார்." எனப் பேசினார்.