மா.செ பதவி கேட்டவருக்கு ஒ.செ பதவி.. 'அப்போ 1 ஓட்டு.. இப்போவும் கல்தா' - நாமக்கல் மேற்கில் அப்செட்!
நாமக்கல் : நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் பதவிக்கு வேட்புமனு செய்துவிட்டு பதவி கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த வெப்படை செல்வராஜுக்கு, ஒன்றிய செயலாளர் பதவி கொடுத்திருப்பது, அவரது ஆதரவாளர்களை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.
தமிழகத்தில் உள்ள 72 கழக மாவட்டங்களில் 71 மாவட்டங்களுக்கு நிர்வாகிகளை அறிவித்தது திமுக தலைமை. பிரச்சனைக்குரிய தென்காசி வடக்கு மாவட்டத்திற்கு மட்டும் இன்னும் நிர்வாகிகள் அறிவிக்கப்படவில்லை.
71ல் 7 மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். அதில் நாமக்கல் மேற்கு தொகுதியும் ஒன்று. அங்கு மாவட்ட செயலாளராக இருந்த கே.எஸ்.மூர்த்திக்கு கல்தா கொடுத்த தலைமை, மதுரா செந்திலை மா.செ ஆக்கியுள்ளது.
பள்ளிப்பாளையம் முன்னாள் ஒன்றிய செயலாளரான வெப்படை செல்வராஜ், மாவட்ட செயலாளர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அவர் மீண்டும் ஒன்றிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒன்றியச் செயலாளரும் அவரே.. மாவட்டச் செயலாளரும் அவரே.. யார் சாய்ஸ் இது? கோவை மாவட்ட திமுக ருசிகரம்!
திமுக மாவட்ட செயலாளர்கள்
திமுகவில் 15-வது உட்கட்சி தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பட்டியலை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டார். மூத்த அமைச்சர்கள் ஏற்கனவே அவர்கள் வகித்த மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பொறுப்புகளில் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். 7 மாவட்டங்களில் மட்டும் மாவட்ட செயலாளர்கள் மாற்றப்பட்டு, புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தென்காசி வடக்கு மாவட்டத்தில் நிர்வாகிகள் நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மேற்கு
நாமக்கல் மேற்கு மாவட்டத்தைப் பொறுத்தவரை மாவட்ட செயலாளர் கே.எஸ்.மூர்த்தி தொடர்பாக தலைமைக்கு பல்வேறு புகார்கள் பறந்தன. அதிமுகவின் முக்கிய மாஜியோடு இணக்கமாகச் செயல்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இதனால், கே.எஸ்.மூர்த்திக்கு மறுபடியும் தி.மு.க தலைமை, பதவி தர விரும்பவில்லை என்று தி.மு.க-வினர் மத்தியில் பேசப்பட்டது. இதனால், அடுத்து யாருக்கு பதவி கிடைக்கும் என பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.
கோதாவில் குதித்த துணை மா.செ
இந்நிலையில், பள்ளிப்பாளையம் முன்னாள் ஒன்றியச் செயலாளரான வெப்படை ஜி.செல்வராஜ், நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார். மேலும், நாமக்கல் எம்.எல்.ஏவும், நாமக்கல் கிழக்கு மாவட்ட துணை செயலாளருமான ராமலிங்கமும் கோதாவில் குதித்தார். கிழக்கு மா.செ கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் தான் என உறுதியாக தெரிந்ததால் மேற்கில் அடி போட்டார் ராமலிங்கம். உடனே, தலைமைக்கு புகார் பறந்ததால், ராமலிங்கம் கப்சிப் ஆனார்.
ஒன்றிய செயலாளர் ப்தவி
மாவட்டச் செயலாளர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்த வெப்படை ஜி.செல்வராஜுக்கு, பள்ளிப்பாளையம் ஒன்றியச் செயலாளர் பதவியைக் கொடுத்து, அவரை ஆஃப் செய்திருக்கிறது திமுக தலைமை. நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேஷ் குமாரின் ஆதரவுடன் மதுரா செந்தில் மேற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இது வெப்படை செல்வராஜ் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆதரவாளர்கள் அப்செட்
ஒன்றிய செயலாளராக இருந்த வெப்படை செல்வராஜ், திமுகவுக்காக பல ஆண்டுகளாக களத்தில் இறங்கி வேலை செய்பவர், தொண்டர்களுக்கு எந்தப் பிரச்சனை என்றாலும், உடனே வந்து தீர்த்து வைப்பார், அவருக்கு பதவி கிடைக்காதது பெரிய வருத்தம், அவர் மா.செ ஆகியிருந்தால், நாமக்கல் மேற்கில் திமுக இன்னும் வளர்ந்திருக்கும் என்கிறார்கள் செல்வராஜின் ஆதரவாளர்கள்.
ஒரே ஒரு வாக்கில்
பத்தாண்டுகளுக்கு முன்பு நாமக்கல் மாவட்டம் கிழக்கு, மேற்கு எனப் பிரிக்கப்பட்டபோதும் மேற்கு மாவட்டத்தில் மா.செ பதவிக்கு போட்டியிட்டுள்ளார் வெப்படை செல்வராஜ். அப்போது காந்திச்செல்வன் ஆதரவாளரான கே.எஸ்.மூர்த்தி ஒரே ஒரு வாக்கில் செல்வராஜை வீழ்த்தி மாவட்ட செயலாளர் ஆனார். இந்நிலையில், மீண்டும் செல்வராஜுக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் மதுரா செந்திலுக்கு வழங்கப்பட்டுள்ளது வெப்படை செல்வராஜ் தரப்பை அப்செட் ஆக்கியுள்ளது.