என்ன அலட்சியம்.! தேசிய கீதம் இசைக்கும்போது அவமதித்த நாமக்கல் எஸ்ஐ! பாய்ந்தது அதிரடி நடவடிக்கை
தேசிய கீதத்திற்கு உரிய மரியாதை செலுத்தாத போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
நாமக்கல்: உதயநிதி பங்கேற்ற நிகழ்ச்சியில் தேசிய கீதம் பாடும் போது காவல் உதவி ஆய்வாளர் சிவப்பிரகாசம், தேசிய கீதத்திற்கு எழுந்து உரிய மரியாதை செலுத்தாத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாம் வெள்ளையர்களிடம் இருந்து போராடிப் பெற்ற சுதந்திரத்தைப் பறைசாற்றுவது நாட்டின் தேசிய கீதம். நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்படும் போது நாம் ஒவ்வொருவரும் எழுந்து அதற்கு மரியாதை செலுத்த வேண்டும்.
ஆனால், நாமக்கல் மாவட்டத்தில் போலீஸ் அதிகாரி ஒருவரே தேசிய கீதத்திற்கு உரிய மரியாதை அளிக்காத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவர் மீது அதிரடி நடவடிக்கையும் எடுத்துள்ளது.
எம்.எல்.ஏ, அமைச்சரை எல்லாம் விடுங்க.. நான் உங்க வீட்டு செல்லப் பிள்ளை.. உங்க சகோதரன்: உதயநிதி பேச்சு
தேசிய கீதம்
இந்தியாவில் தேசிய கீதத்தைப் பாடும் போது, நாட்டின் குடிமகனாக நாம் கடைப்பிடிக்க வேண்டிய சில கடமைகள் உள்ளன. முதலில் தேசிய கீதம் பாடும் போது கட்டாயம் அனைவரும் எழுந்து நின்று அதற்கு மரியாதை செலுத்த வேண்டும். தேசிய கீதத்தை நாமும் இணைந்தே பாட வேண்டும். பள்ளிகளில் இருந்து ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் இதைச் சொல்லிக் கொடுத்து இருப்பார்கள். இருப்பினும், சிலர் இந்த கடமைகளை முறையாகச் செய்வதில்லை.
உதயநிதி நிகழ்ச்சி
அப்படியொரு சம்பவம் தான் நாமக்கல்லில் நடந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் பொம்மை குட்டை மேட்டில் கடந்த 28ஆம் தேதி அரசு சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பொதுமக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதற்காக அங்கு வெகு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்
இந்த நிகழ்ச்சியில் பலருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அமைச்சர் வருகை காரணமாக நிகழ்ச்சிக்கு போலீசார் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அங்கு நாமக்கல் ஆயுதப்படை காவல் உதவி ஆய்வாளர் சிவப்பிரகாசம் என்பவர் பாதுகாப்புப் பணியில் ஈட்டுப்பட்டிருந்தார். இந்த நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இருப்பினும், அப்போது சிவப்பிரகாசம் எழுந்து நிற்காமல் உட்கார்ந்தபடியே செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.
மரியாதை செலுத்தவில்லை
தேசிய கீதம் இசைக்கப்படும் போது, அதைக் கூட அறியாமல் அவர் மொபைலில் பேசிக் கொண்ட இருந்துள்ளார். பேசி முடித்த பின்னரே மெல்லச் சாவகாசமாக எழுந்து நின்றுள்ளார். காவல் உதவி ஆய்வாளர் சிவப்பிரகாசத்தின் இந்த செயலை அங்கிருந்த சிலர் வீடியோவாக எடுத்து, அதை இணையத்தில் வெளியிட்டனர். போலீஸ் அதிகாரி ஒருவரே தேசிய கீதத்தை மதிக்காமல் இருக்கும் வீடியோ இணையத்தில் படுவேகமாக பரவியது.
சஸ்பெண்ட்
போலீஸ் அதிகாரியின் இந்த செயலுக்கு இணையத்தில் பலரும் கடும் எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர். இந்தச் சூழலில் தேசிய கீதத்திற்கு எழுந்து மரியாதை செலுத்தாத சிவபிரகாசத்தை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட எஸ்பி கலைச்செல்வன் உத்தரவிட்டுள்ளார். தேசிய கீதத்தை மதிக்காமலிருந்த சிவபிரகாசத்தை இடைநீக்கம் செய்த நடவடிக்கையைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.