இங்கேதான் இறங்கணும்! 50 ஆண்டுகளுக்கு பிறகு நிலவுக்கு செல்லும் மனிதர்கள்.. இடங்களை அறிவித்த நாசா
நியூயார்க்: நிலவில் மனிதன் இறங்குவதற்கு சாத்தியமுள்ள இடங்கள் குறித்து நாசா தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
Recommended Video
மனிதர்களை நிலவில் தரையிறக்கும் திட்டமான 'ஆர்ட்டெமிஸ்' திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த நிலவின் தென் துருவ பகுதி சரியாக இருக்கும் என்று 'நாசா' கணித்துள்ளது.
ஆர்ட்டெமிஸ் திட்டம் என்பது சந்திரனை ஆராய்வதற்காக நாசா தலைமையிலான மனித விண்வெளிப் பயணத் திட்டமாகும்.
மனிதனுக்கும் நிலவுக்குமான தொடர்பு என்பது ஏறத்தாழ மனித இனம் உருவான காலத்திலிருந்தே தொடர்ந்து வருகிறது. அதாவது மனித இனத்தின் வயது தோராயமாக 3 லட்சம் வருடங்களாகும். அதேபோல மனிதனுக்கும் நிலவுக்கும் இடையேயான தொடர்பின் வயதும் 3 லட்சம் வருடங்களாக இருக்கும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஏனெனில், ஆதி மனிதன் நிலவை புரிந்துகொள்ள மேற்கொண்ட முயற்சிகள் குறித்து அவனுடைய வாழ்விட எச்சங்களிலிருந்து நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்த 3 லட்சம் ஆண்டுகளின் தீரா தாகம் எதிர்வரும் 2025ம் ஆண்டுகளில் சாத்தியமாகும் என நாசா தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்ட்ரின் தொடக்கி வைத்த இந்த பயணத்தின் தொடர்ச்சியாக தற்போது வரை 12 பேர் நிலவுக்கு சென்று திரும்பியிருக்கிறார்கள். இந்த பயணத்தை 1972ல் அமெரிக்கா முடித்துக்கொண்டது. அப்போதிலிருந்து சுமார் 50 ஆண்டுகளாக 2022 வரை யாரும் நிலவுக்கு செல்லவில்லை.
தற்போது நாசாவின் இந்த புதிய அறிவிப்பால் இந்த 50 ஆண்டு இடைவெளி ஒரு வழியாக முடிவுக்கு வர இருக்கிறது. 'ஆர்ட்டெமிஸ் III' எனப்படும் இந்த திட்டத்தில் விண்வெளி வீரர்கள் நிலவில் தரை இறங்குவதற்கு சரியான இடத்தை நாசா கண்டுபிடித்து இன்று அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், ஒவ்வொரு பிராந்தியத்திலும், பல தரையிறங்கும் தளங்கள் உள்ளன என நாசா கூறியுள்ளது. இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பகுதிகள் அடுத்தடுத்த ஆய்வுகளுக்கு ஏற்றதாக இருக்கும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.
ஆர்ட்டெமிஸ் திட்டங்களில் முதல் திட்டம் அதாவது, 'ஆர்ட்டெமிஸ் I' இம்மாதத்தில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின்படி ஆளில்லாத விண்கலம் ஒன்று ஆகஸ்ட் 29ம் தேதி பூமியிலிருந்து நிலவுக்கு சென்று 42 நாட்கள் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு அக்டோபர் மாதம் 10ம் தேதி மீண்டும் பூமிக்கு திரும்பும். நாசாவின் இந்த திட்டம் வெறும் நிலை பற்றியது மட்டுமல்ல. இது எதிர்கால செவ்வாய் கிரகத்தின் ஆய்வை பற்றியது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.