ஒரே ஒரு வீடியோ.. இப்போ வாழ்க்கையே போச்சு.. பெண் HR-ஐ கட்டிப்பிடித்த பைரனின் சிஇஓ பதவி காலி
நியூயார்க்: அமெரிக்காவில் பாஸ்டனில் நடந்த கோல்ட் ப்ளே இசை நிகழ்ச்சியில் பெண் ஹெச்ஆர் ஊழியரை அதன் சிஇஓ ஆண்டி பைரன் கட்டிப்பிடித்தபடி இருந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இருவரும் கள்ள உறவில் இருந்ததை இந்த வீடியோ அம்பலப்படுத்தியது. ஆண்டி பைரனுக்கு எதிரான விமர்சனங்கள் அதிகரித்த நிலையில், அவர் ஆஸ்டிரானமர் சிஇஓ பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள ஏஐ நிறுவனங்களில் ஒன்று ஆஸ்டிரானமர். இந்த நிறுவனத்தின் சிஇஓவான ஆண்டி பைரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு நடந்த கோல்ட் ப்ளே இசை நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தார். அவர் தனியாகவோ அல்லது நண்பர்கள் உடனே அந்த நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தால் பிரச்சினை இல்லை. ஆனால், அவர் அதே நிறுவனத்தில் ஹெச் ஆர் தலைவராக வேலை செய்யும் கிறிஸ்டின் காபோட் என்பவருடன் அந்த நிகழ்ச்சிக்குப் போய் இருக்கிறார்.

ரகசிய உறவு
இரு ஊழியர்கள் ஒரு இசை நிகழ்ச்சிக்குச் செல்வதில் என்ன தப்பு எனக் கேட்கலாம்.. விஷயம் என்னவென்றால் இருவரும் கள்ள உறவில் இருந்துள்ளனர். ஆண்டி பைரன் ஏற்கனவே திருமணம் ஆனவர். அவர் தனது மனைவிக்குத் தெரியாமல் கிறிஸ்டின் காபோட் உடன் ரகசிய உறவை வைத்திருக்கிறார். இவர்களின் இந்த உறவு தான் கோல்ட் ப்ளே இசை நிகழ்ச்சியில் உலகிற்கே தெரிந்துவிட்டது.
பெரிய திரையில் ஷாக்
அதாவது அமெரிக்காவில் கிஸ் கேம் அதாவது முத்த கேமரா என ஒன்று இருக்கிறது. அங்கு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளில் இந்த கிஸ் கேம் ரொம்பவே பிரபலம். இதில் ஜோடியாக இருக்கும் தம்பதியை வீடியோவாக காட்டுவார்கள். அந்த ஜோடி முத்தம் கொடுத்து தங்கள் அன்பை வெளிப்படுத்துவார்கள். அந்த கிஸ் கேமில் தான் இவர்கள் மாட்டிக் கொண்டனர். இருவரும் கட்டிப்பிடித்தபடி இருப்பது பெரிய திரையில் வந்துவிட்டது.
பெரிய திரையில் இருவரும் ஒருவரையொருவர் கட்டியணைத்தபடி இருந்தனர்.. கேமரா அவர்களைக் காட்டியதும் ஒரு நொடி இருவரும் அதிர்ந்து போனார்கள், ஆண்டி பைரன் தலையில் கை வைத்தபடி அப்படியே உட்கார்ந்துவிட்டார். அதேபோல கிறிஸ்டின் முகத்தை மறைத்தபடி அங்கிருந்து ஓடிவிட்டார்.
சிஇஓ ராஜினாமா
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இதையடுத்து ஆஸ்டிரானமர் நிறுவனத்தின் சிஇஓ பதவியை ராஜினாமா செய்வதாக ஆண்டி பைரன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "ஆஸ்ட்ரானமர் நிறுவனம் எப்போதுமே தனது தொடக்க பாலிசிக்களில் உறுதியாக இருக்கும். தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் நடத்தை மற்றும் பொறுப்புணர்வில் ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நடந்த நிகழ்வுகள் இந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வதாக இல்லை.
விசாரணை
இதன் காரணமாக ஆண்டி பைரன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை இயக்குநர்கள் குழு ஏற்றுக்கொண்டது. புதிய தலைமை நிர்வாக அதிகாரியை நியமிப்பதற்கான தேடல் விரைவில் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைக்கால சிஇஓவாக நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை தயாரிப்பு அதிகாரி பீட் டிஜாய் செயல்படுவார்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த வீடியோ வெளியான உடனேயே பைரன் விடுப்பில் அனுப்பப்பட்டார். அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவும் இது தொடர்பாக விசாரணையைத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications