ஒன்னு இல்ல.. மொத்தம் 3.. இன்று பூமியை நெருக்கமாக கடக்கும் விண்கற்கள்!
நியூயார்க்: விண்கற்கலால் பூமிக்கு ஆபத்து இருக்கிறது என்று விண்வெளி ஆய்வாளர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று 3 விண்கற்கள் பூமியை நெருக்கமாக கடந்து செல்ல இருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் ஏதாவது ஒரு பஞ்சாயத்து வந்துவிடுகிறது. போன வருஷம் கடும் மழை, வெள்ளம். அதற்கும் முன்னர் கொரோனா தொற்று.. இப்படி இந்த பஞ்சாயத்து வரிசையில் தற்போது புதியதாக ஒன்று இணைந்திருக்கிறது. அது வேறு ஒன்றுமில்லை விண்கல்தான். ஆம் விண்கற்களால்தான் பூமிக்கு மிகப்பெரிய ஆபத்து காத்திருக்கிறது. எங்கிருந்து வருகிறது, எப்படி வருகிறது என்றே தெரியாது. அதுபாட்டுக்கு வந்து போட்டு தள்ளிவிட்டு போய்விடும்.

ஆனால் தொடர் ஆய்வு மூலம் விண்கற்களை விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர். இந்த கண்காணிப்புகள் மூலம் இன்று 3 விண்கற்கள் பூமியை நெருக்கமாக கடக்க இருப்பதை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது 2018 XU3, 2024 XZ11 மற்றும் 2024 XL11 ஆகிய விண்கற்கள்தான் இன்று இரவு பூமியை நெருக்கமாக கடக்கின்றன.
இதில் 2018 XU3 விண்கல் ஒரு பெரிய விமானம் சைஸ் கொண்டதாகும். மொத்தம் 89 அடி விட்டம் கொண்ட இது, பூமியை 40 லட்சம் கி.மீ தொலைவில் கடந்து செல்கிறது. இந்த தூரம் அதிகமாகத்தானே இருக்கிறது, எதற்கு பயப்பட வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், விண்வெளியில் 40 லட்சம் கி.மீ அவ்வளவு பெரிய தூரம் எல்லாம் ஒன்னும் கிடையாது. நமக்கு பக்கத்து கிரகமான செவ்வாய் 2 கோடி கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது. எனவே, 40 லட்சம் எம்மாத்திரம் என்பதை கற்பனை செய்து பாருங்கள்.
ஒருவேளை இது பூமியில் மோதினால் 10-15 மெகா டன் வெடிபொருள் ஒரே நேரத்தில் வெடித்தால் எவ்வளவு சக்தி வெளிவருமோ அந்த அளவுக்கு சேதத்தை ஏற்படும். இக்கல் விழுந்த இடத்தில் பெரிய பள்ளம் ஏற்படும். கடலில் விழுந்தாலும் சுனாமி ஏற்படும். மட்டுமல்லாது இந்த விண்கல் மோதல் எரிமலை வெடிப்பையும் ஏற்படுத்தும். தவிர காட்டு தீயும், வளிமண்டல மாசும் கட்டுக்கடங்காமல் ஏற்படும். காட்டுத் தீ மற்றும் எரிமலை புகை இரண்டும் சேர்த்து நமது வளிமண்டலத்தை முழுமையாக மூடிவிடும். இது செயற்கையான பனிகாலத்தை உருவாக்கும்.
சூரிய ஒளி பூமிக்குள் வராது என்பதால் தவாரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிய தொடங்கும். பின்னர் அதை நம்பி இருக்கும் கால்நடைகளும் மற்ற உயிர்களும் அழியும். இது சங்கிலி தொடர்போல மனிதர்களையும் பாதிக்கும். முதலில் வயதானவர்களும், நோயாளிகளும், குழந்தைகளும் மூச்சு திணறல் காரணமாக உயிரிழப்பார்கள். இதனையடுத்து ஆரோக்கியமான மனிதர்களும் உயிரிழப்பார்கள்.
இரண்டாவது விண்கல் 71 அடி விட்டம் கொண்டதுதான். மூன்றாவதும் 20 அடி மட்டுமே உள்ள சிறிய விண்கல்தான். எனவே இது இரண்டும் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது. முதல் விண்கல்லும் கூட பூமியில் மோதுவதற்கு வாய்ப்புகள் மிகக்குறைவு என்றே ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications