நடுவானில் விமானத்திலிருந்த வந்த தீ! ஒரே நொடியில் பைலட் எடுத்த முக்கிய முடிவு! உண்மையில் என்ன நடந்தது
நியூயார்க்: கடந்த சில காலமாகவே விமானங்களில் ஏற்படும் திடீர் சிக்கல்கள் குறித்த தகவல்கள் வெளியாகி பகீர் கிளப்புவதாகவே இருக்கிறது. அப்படியொரு சம்பவம் தான் இப்போது மீண்டும் நடந்துள்ளது. நடுவானில் விமானம் பறந்து கொண்டு இருந்தபோது, அதில் திடீரெனத் தீப்பற்றி இருக்கிறது. இதனால் விமானம் அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ வெளியாகி இணையத்தில் பகீர் கிளப்பியுள்ளது.
கடந்த மாதம் அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விபத்தைச் சீக்கிரம் யாரும் மறக்க மாட்டோம். சமீபத்தில் நமது நாட்டில் நடந்த மிக மோசமான ஒரு விபத்தாக இது அறியப்படுகிறது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஆங்காங்கே விமானங்களில் நடக்கும் சிக்கல்கள் குறித்த தகவல்கள் வெளியாகி பகீர் கிளப்பி வருகிறது.

நடுவானில் விமானத்தில் தீ
இதற்கிடையே மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது திடீரென விமான எஞ்சினில் தீப்பிடித்தது. இதையடுத்து உடனடியாக அந்த விமானம் அருகே உள்ள விமான நிலையத்தில் அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. இதனால் உள்ளே இருந்த பயணிகள் அனைவரும் மிரண்டு போனார்கள்.
நேற்று ஜூலை 19ம் தேதி இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவின் டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த விமானம், அட்லாண்டாவிற்குச் சென்றபோது புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இடது எஞ்சினில் தீப்பிடித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த விமானம் அவசரமாக லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு (LAX) திரும்பியது.
விமானம் தரையிறக்கம்
போயிங் 767-400 என்ற மாடல் விமானத்தில் தான் இந்தச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. டெல்டாவின் DL446 விமானத்தின் இடது எஞ்சினில் தீப்பிழம்புகள் வெளியேறும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. விமானம் அவசரமாக லாஸ் ஏஞ்சல்ஸில் தரையிறக்கப்பட்டது. விமானம் தரையிறங்கும்போது தீயணைப்பு வீரர்களும் தயாராக இருந்தனர். அவர்கள் ஓடுபாதையில் தீயை அணைத்தனர். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
விமானம் புறப்பட்ட உடனேயே எஞ்சினில் தீப்பிடித்ததாகக் கூறப்படுகிறது. விமானக் குழுவினர் எமர்ஜென்சியை அறிவித்து, விமானத்தை மீண்டும் விமான நிலையத்திற்குத் திருப்பினர். விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு அமைப்பும் விமானத்தைப் பத்திரமாக விமான நிலையத்தில் இறங்க அனுமதி அளித்தது. மேலும் தீயணைப்பு வீரர்கள் உட்பட அவசரப் பிரிவினரும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டது.
என்ன நடந்தது
விமானத்தில் தீ எரிந்த போதும், முதலில் பசிபிக் பெருங்கடலில் கொஞ்ச நேரம் சென்று பிறகு, பின்னர் அது லாஸ் ஏஞ்சல்ஸில் தரையிறங்குவது பிளையிட்ரேடார்24ல் தெரிகிறது. விமான பைலட்கள் பாதுகாப்பாகத் தரையிறங்குவதற்கான தேவையான நடவடிக்கைகளை எடுத்தனர். அப்போது விமானத்தின் வேகமும் உயரமும் நிலையாகக் கட்டுப்படுத்தப்பட்டது. தரையிறங்கிய உடனேயே தீயணைப்பு வீரர்கள், விமானத்தில் எரிந்த தீயை அணைத்தனர்.
பெடரல் ஏவியேஷன்
இந்த தீ விபத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. இது குறித்து பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. விபத்துக்குள்ளான விமானம் சுமார் 25 ஆண்டுகள் பழமையானது. மேலும், அது இரண்டு ஜெனரல் எலக்ட்ரிக் CF6 இயந்திரங்களால் இயக்கப்படுகிறது. இது குறித்து டெல்டா ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "டெல்டா விமானம் 446 இடது இயந்திரத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாகப் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே லாஸ் ஏஞ்சல்ஸுக்குத் திரும்பியது" என்றார்.
முதல்முறை இல்லை
இந்த ஆண்டு டெல்டா ஏர்லைன்ஸ் இதுபோன்ற பிரச்சனையை எதிர்கொள்வது இது முதல் முறையல்ல. ஏப்ரல் மாதம், ஓர்லாண்டோ சர்வதேச விமான நிலையத்தில் மற்றொரு டெல்டா விமானத்தில் தீப்பிடித்தது. அட்லாண்டாவிற்கு புறப்படத் தயாராக இருந்த ஏர்பஸ் ஏ330 விமானத்தின் எஞ்சினில் திடீரெனத் தீப்பிடித்தது. விமானத்தில் 282 பயணிகள், 10 விமானப் பணிப்பெண்கள் மற்றும் இரண்டு விமானிகள் இருந்தனர். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications