இதுதான் மிக ஆபத்தான காலகட்டம்.. WHO தலைவர் டெட்ரோஸ் எச்சரிக்கை!
நியூயார்க்: உலகம் முழுக்க 100 நாடுகளில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவி இருப்பதால் இது மிக ஆபத்தான காலகட்டம் என்று எச்சரிக்கை பிறப்பித்து உள்ளது உலக சுகாதார அமைப்பு.
கொரோனா வைரஸ் ஒவ்வொரு காலகட்டத்திலும் உருமாற்றம் அடைந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட டெல்டா வகை உருமாற்றம் அடைந்த கொரோனா நமது நாட்டில் இரண்டாவது அலை மிக மோசமாக பாதிக்க காரணமாகும்.
ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படவும் காரணமாக இருந்தது.

நாட்டு நிலவரம்
டெல்டா வகை வைரஸ் தற்போது நமது நாட்டில் கட்டுப்பாட்டுக்குள் வந்து இருக்கிறது. இருப்பினும் டெல்டா பிளஸ் என்ற மற்றொரு உருமாற்றம் அடைந்த கொரோனா காணப்படுவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இருப்பினும் ஏற்கனவே அது சமுதாயத்தில் பரவி இருப்பதாகவும் புதிதாக பரவி பெரிய ஆபத்தை ஏற்படுத்தாது ஏற்கனவே போதிய அளவுக்கு சேதங்களை ஏற்படுத்தி விட்டது என்றும் சில வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

இலக்கு நிர்ணயிங்கள்
இது ஒரு பக்கம் என்றால், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அட்னோம் அளித்த பேட்டி: அடுத்த வருடம் இந்த காலகட்டத்துக்கு முன்பாக உலகின் 70% மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு இருக்க வேண்டும் அப்போதுதான் இந்த பெரும் தொற்று நோயிலிருந்து விடுதலை ஆக முடியும் என்று உலக தலைவர்களை எச்சரித்து உள்ளேன்.

தடுப்பூசி அளவு
உலகம் முழுக்க ஏற்கனவே 3 பில்லியன் அளவுக்கு தடுப்பூசிகள் சப்ளை செய்யப்பட்டுள்ளன. ஏழை நாடுகளில் தடுப்பூசி போடப்படும் விகிதம் குறைவாக இருக்கிறது. அந்த நாடுகளில் இரண்டு சதவீதத்திற்கும் குறைவான மக்கள் தான் தடுப்பூசி போட்டிருக்கிறார்கள். அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், கனடா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகள் ஒரு பில்லியன் அளவுக்கு தடுப்பூசிகளை தானம் செய்வதாக அறிவித்துள்ளன.

எப்படி போட வேண்டும்
ஏதாவது ஒரு நாடு தடுப்பூசியை முழுமையாக செலுத்தவில்லை என்றாலும் அது உலகின் பிற நாடுகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை அனைத்து நாடுகளும் உணர்ந்து கொள்ள வேண்டும். வரும் செப்டம்பர் மாதத்திற்கு முன்பாக அந்தந்த நாடுகள் தங்கள் மக்கள் தொகையில் 10% அளவுக்காவது தடுப்பூசிகளை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த வருட இறுதிக்குள் 40 சதவீதம் பேருக்கு ஒவ்வொரு நாடும் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். அடுத்த ஆண்டு நடுப்பகுதிக்கு முன்பாக 70% அளவுக்கு தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.

எல்லோருக்கும் எல்லாமும்
அனைத்து நாடுகளுக்கும் சரிசமமாக தடுப்பூசி கிடைக்க செய்யப்பட வேண்டும். இது நோயை குணப்படுத்துவதுடன் ஒட்டுமொத்தமாக உலக பொருளாதாரத்தை வளர்ச்சியடைய செய்யலாம். ஏதோ ஒரு நாட்டில் மட்டும் முழுமையாக தடுப்பூசி போட்டு விட்டால் பிரச்சினை சரியாகி விடாது அனைத்து இடங்களிலும் போடப்பட வேண்டும். ஏதாவது ஒரு இடத்தில் நோயை குணப்படுத்த விட்டால் அந்த நோய் எல்லா இடங்களிலும் பரவும் என்பதுதான் யதார்த்த நிலை.

ஆபத்தான காலகட்டம்
டெல்டா வகை வைரஸ் தற்போது 100 நாடுகளில் பரவி இருக்கிறது எனவே இது மிகவும் ஆபத்தான காலகட்டம். அந்தந்த நாட்டு அரசுகள் சரியான நடவடிக்கைகளை எடுத்து நோய் பரவலை கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்தார்.

டெல்டா வைரஸ் பிரச்சினை
நமது நாட்டில் டெல்டா வைரஸ் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி விட்ட நிலையில் தற்போது பிரிட்டன் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் அது பரவி வருகிறது. ஏற்கனவே அங்கு 50 விழுக்காடு மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு இருந்தாலும்கூட இந்த நோய் பாதிப்பு மிக மோசமாக இருக்கும் என்பதை இந்தியாவைப் பார்த்து அவர்கள் தெரிந்து வைத்திருப்பதால் அச்சத்தில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications