டிரம்பிடம் ஷெபாஸ் காட்டிய பொக்கிஷம்! வெள்ளை மாளிகை மீட்டிங்..அமெரிக்காவுடன் ஜோடி போடும் பாகிஸ்தான்?
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இடையேயான முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு கடந்த வியாழக்கிழமை வெள்ளை மாளிகையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஆசிம் முனீர் கலந்து கொண்டு, அதிபர் டிரம்பிடம் அரிய வகை கனிமங்களை காட்சிப்படுத்தியது உலக அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
கடந்த சில மாதங்களாகவே அமெரிக்கா - இந்தியா உறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில், அமெரிக்காவுடன் பாகிஸ்தான் நெருக்கம் காட்டி வருகிறது. குறிப்பாக, கடந்த சில மாதங்களில் மட்டும் பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி அசிம் முனீர் 3 முறை அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்
இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், வெள்ளை மாளிகைக்கு சென்றார். கடந்த 6 ஆண்டுகளில் முதல்முறையாகப் பாகிஸ்தான் பிரதமர் அமெரிக்க அதிபரைச் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டொனால்ட் ட்ரம்ப்
முன்னதாக 2019ம் ஆண்டு அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்பைச் சந்தித்தார். பின்னர் தற்போது தான் ஷெரீப் வெள்ளை மாளிகை சென்றுள்ளார்.இந்நிலையில், இந்த சந்திப்பின் போது, பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் கலந்து கொண்ட இந்த சந்திப்பில், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் வெளியுறவு செயலர் மார்கோ ரூபியோ உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அரிய வகை கனிமங்கள்
ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த பேச்சுவார்த்தையின் போது, ஆசிம் முனீர் ஒரு மரப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த அரிய வகை கனிமங்களை திறந்து ட்ரம்பிடம் காட்டினார். ட்ரம்ப் ஆர்வத்துடன் அவற்றை பார்த்துக்கொண்டிருந்தார். சந்திப்பின் போது, ஷெஹ்பாஸ் ஷெரீப், உலகில் பல நாடுகளுக்கிடையேயான மோதல்களை முடிவுக்கு கொண்டு வர ட்ரம்ப் எடுத்துவரும் முயற்சிகளை பாராட்டி, அவரை "சமாதானத்துக்கான மனிதர்" என குறிப்பிட்டார்.
அமெரிக்கா-பாகிஸ்தான்
மேலும், கடந்த ஜூலை மாதத்தில் கையெழுத்தான அமெரிக்கா-பாகிஸ்தான் வர்த்தக ஒப்பந்தத்திற்காக ட்ரம்புக்கு நன்றியையும் ஷெபாஷ் தெரிவித்தார். அந்த ஒப்பந்தத்தின் படி, பாகிஸ்தானிலிருந்து வரும் பொருட்களுக்கு 19% சுங்க வரி விதிக்கப்படுவதோடு, அமெரிக்கா பாகிஸ்தானின் எண்ணெய் வளங்களை மேம்படுத்த உதவ ஒப்புக்கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ட்ரம்ப் தலைமையில் இருநாட்டு உறவுகள் இன்னும் வலுவாகும் என நம்பிக்கை தெரிவித்ததுடன், அமெரிக்க நிறுவனங்களை பாகிஸ்தானின் வேளாண்மை, தகவல் தொழில்நுட்பம், சுரங்கங்கள் மற்றும் ஆற்றல் துறைகளில் முதலீடு செய்ய அமெரிக்காவுக்கு அழைப்பு விடுத்தார்.
பாகிஸ்தான் வர்த்தகம்
பாகிஸ்தானில் டிரில்லியன் டாலர்கள் மதிப்பிலான கனிம வளங்கள் இருப்பதாக கூறியதோடு, இந்த வளங்களில் வெளிநாட்டு முதலீடு வந்தால், நாட்டின் நீண்டகால நிதி நெருக்கடியை சமாளித்து வெளிநாட்டு கடன்களின் சுமையிலிருந்து விடுபட முடியும் எனவும் அவர் தெரிவித்தார். ஆனால், பெரும்பாலான கனிம வளங்கள் உள்ள தென்மேற்கு பலோசிஸ்தான் மாகாணத்தில் பிரிவினைவாதிகள் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுரங்க நிறுவனங்களின் நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா உறவு
ஏற்கெனவே, பாகிஸ்தானுக்கு 19 சதவீதம் மட்டுமே வரி விதித்த ட்ரம்ப், பாகிஸ்தானுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். அதன்படி, பாகிஸ்தானில் இருக்கும் முக்கிய கனிமங்கள், அரிய மண் வகைகள் மற்றும் பெரிய எண்ணெய் இருப்புக்களை மேம்படுத்த 500 மில்லியன் டாலர்களை அமெரிக்கா முதலீடு செய்கிறது. முன்னதாக, ஆப்கானில் உள்ள பக்ராம் விமானத் தளத்தைத் தலிபான்கள் அமெரிக்காவுக்கு கொடுக்க வேண்டும். இல்லையென்றால் விளைவு மோசமாக இருக்கும் என்று ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், ஆப்கானில் கால் பதிக்க பாகிஸ்தானை ஒரு நுழைவு வாயிலாக ட்ரம்ப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளார் என கூறப்படுகிறது. இது ஒருபுறம் என்றால், காஷ்மீர் விவகாரத்தில், தனக்கு ஆதரவாக அமெரிக்காவைக் கொண்டுவர பாகிஸ்தான் காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications