Say my name.. எலான் மஸ்க்! உலகின் பெரும் பணக்காரரார்! ஒரே ஒரு தீர்ப்பில் கிடுகிடுவென உயர்ந்த சொத்து!
நியூயார்க்: டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரியான எலான் மஸ்க், மீண்டும் உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். சமீப காலத்தில் அவரது சொத்து மதிப்பு 700 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டியுள்ளதுடன், இது உலக வரலாற்றில் இதுவரை யாரும் எட்டாத ஒரு புதிய உச்சமாகவும் பார்க்கப்படுகிறது. இந்திய மதிப்பில் கணக்கிட்டால், இது சுமார் 58 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் ஆகும்.
உலகின் மிகப் பெரிய தொழிலதிபர்களில் ஒருவராக விளங்கும் எலான் மஸ்க், தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி ஆராய்ச்சியில் தனது கவனத்தை முழுமையாக செலுத்தி வருகிறார்.
குறிப்பாக, இணைய சேவைகளை உலகின் எந்த மூலையிலும் கொண்டு செல்லும் நோக்கில் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவது, மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டுகளை உருவாக்குவது போன்ற திட்டங்களில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

எலான் மஸ்க்
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் ராக்கெட்டுகள் தற்போது நிலவை நோக்கி பயணித்து வருவதும், எதிர்காலத்தில் மனிதர்களை செவ்வாய்க்கு அனுப்பும் கனவுத் திட்டங்களும் உலகளவில் பெரும் கவனம் பெற்றுள்ளன. ஆரம்ப காலங்களில் பல தோல்விகளை சந்தித்தாலும், தொடர்ந்து முயற்சி செய்து மறுபயன்பாட்டு ராக்கெட் சோதனைகளில் எலான் மஸ்க் வெற்றியை பதிவு செய்து வருகிறார். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார்லிங் என்ற செயற்கைக்கோள் இணைய திட்டத்தின் மூலம் நூற்றுக்கணக்கான செயற்கைக்கோள்களை ஏவியுள்ளது.
டெஸ்லா
இந்த நெட்வொர்க் மூலம் உலகின் தொலைதூர பகுதிகளிலும் இணைய சேவை கிடைக்கத் தொடங்கியுள்ளது. எதிர்காலத்தில் இன்னும் ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்கான திட்டங்களும் தயாராக உள்ளன. இதற்கிடையே, டெஸ்லா நிறுவனத்தின் சைபர் ட்ரக் வாகனம் உலக சந்தையில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பாரம்பரிய கார் வடிவமைப்புகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட தோற்றம் கொண்ட இந்த வாகனம், தொழில்நுட்ப ஆர்வலர்கள் மற்றும் இளம் தலைமுறையினரிடையே அதிக கவனம் பெற்றுள்ளது. இதுவும் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
ட்விட்டர் - எக்ஸ்
சில ஆண்டுகளுக்கு முன்பு ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கி, அதன் பெயரை 'எக்ஸ்' என மாற்றினார். இதற்கு முன்பு ட்விட்டர் தளத்தில் இருந்து நீக்கப்பட்டிருந்த முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கணக்கை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்ததும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, எலான் மஸ்க் மற்றும் ட்ரம்ப் இடையே நெருக்கம் அதிகரித்தது. அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, எலான் மஸ்க் வெளிப்படையாக டொனால்ட் ட்ரம்புக்கு ஆதரவு தெரிவித்ததுடன், எக்ஸ் தளத்தின் மூலம் பிரச்சார நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
சொத்து மதிப்பு
ஆனால், தேர்தலுக்கு பிறகு எலான் மஸ்க் மற்றும் ட்ரம்ப் இடையே கருத்து வேறுபாடுகள் உருவானதாக கூறப்பட்டது. இதற்கிடையில் சில நீதிமன்ற வழக்குகள் காரணமாக எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு ஒரு கட்டத்தில் சரிவை சந்தித்தது. கடந்த அக்டோபர் மாதத்தில் அவரது சொத்து மதிப்பு சுமார் 500 பில்லியன் டாலராக மட்டுமே இருந்தது.
இந்நிலையில், டெஸ்லா நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு முக்கிய வழக்கில் எலான் மஸ்க்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது நிகர சொத்து மதிப்பு வேகமாக உயர்ந்தது.
உலக செல்வந்தர்
இதன் மூலம் அது 749 பில்லியன் டாலர் அளவுக்கு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் எதிர்காலத்தில் 800 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படலாம் என்ற தகவல்களும் வெளியாகின. இதன் தாக்கமாக டிசம்பர் இரண்டாவது வாரத்தில் அவரது சொத்து மதிப்பு 600 பில்லியன் டாலரை எட்டியது. அதன் பிறகு, ஒரே வாரத்தில் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 700 பில்லியன் டாலரை கடந்துள்ளது.












Click it and Unblock the Notifications