அமெரிக்காவின் இரட்டை வேஷம், நன்றியற்ற தன்மையால் பலியான பாகிஸ்தான்.. ஐ.நா.வில் இம்ரான் கான் ஆவேச உரை
நியூயார்க்: ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு காரணமாக பாதிக்கப்பட்ட நாடு பாகிஸ்தான் என்று தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 76வது பொதுக்குழு கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது . இந்திய நேரப்படி இன்று இரவு பிரதமர் நரேந்திர மோடி அந்த கூட்டத்தில் நேரில் உரையாற்றுகிறார்.
முன்னதாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், வீடியோ மூலமாக பேசிய உரை ஐக்கிய நாடுகள் சபையில் இன்று ஒளிபரப்பப்பட்டது.
சபாஷ்..! களத்தில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின்.. பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை திடீர் ஆய்வு
இந்தியா மீது சாடல்
அந்த வீடியோ உரையில் இம்ரான்கான் பேசுகையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசை, இந்து தேசிய அரசு என்று குறிப்பிட்டதோடு , பாசிச அரசு என்றும் கடுமையான சொற்களால் விமர்சனம் செய்தார். அமெரிக்காவுக்கு எதிராகவும் இம்ரான்கான் பேச்சில் ஆவேசம் காணப்பட்டது. ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானை அமெரிக்கா பயன்படுத்திக் கொண்டு கைகழுவி விட்டது என்று இம்ரான்கான் குற்றம்சாட்டினார்.
இம்ரான் கான் உரை
இதோ அவரது பேச்சிலிருந்து: ஆப்கானிஸ்தானில் உள்ள இப்போதைய சூழ்நிலைக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள சில அரசியல்வாதிகள் பாகிஸ்தான் மீது பழி போடுகிறார்கள். ஆனால் இந்த ஐக்கிய நாடுகள் சபை பொதுக்குழு தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக நான் அதைப் பற்றி தெரிவிக்க விரும்புகிறேன். ஆப்கானிஸ்தானை தொடர்ந்து அதிகமாக பாதிக்கப்பட்ட நாடு பாகிஸ்தான் தான். அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட பிறகு அமெரிக்கா எடுத்த நடவடிக்கைகளுக்கு உதவிகரமாக இருந்து பிற்காலத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று பாகிஸ்தான்.
அமெரிக்கா செய்த வேலை
ஆப்கானிஸ்தான் நாட்டில் சோவியத் யூனியன் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காக முஜாஹிதீன்களுக்கு பயிற்சி அளித்தது அமெரிக்கா. ஆனால் பிறகு இந்த விஷயத்தில் பாகிஸ்தான் தனியாக பழியை சுமக்க வேண்டியதாயிற்று. தாலிபான்களுக்கு எதிரான போரில் அமெரிக்காவுடன் நாங்கள் இணைந்ததால் சுமார் 80 ஆயிரம் பாகிஸ்தான் மக்களின் உயிர் பறிபோயுள்ளது. தேவையில்லாமல் உள்நாட்டு குழப்பம் ஏற்பட்டது, ட்ரோன் விமான தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிட்டது. ஆனால் இந்த போரின் இறுதியில் அமெரிக்காவுக்கு உதவிய எங்களுக்கு பழிதான் வந்து சேர்ந்ததே தவிர எந்த ஒரு நன்மையும் கிடைக்கவில்லை.
Recommended Video
அமெரிக்கா இரட்டை வேடம்
அமெரிக்காவின் நன்றியற்ற தன்மைக்கும் சர்வதேச அளவிலான அந்த நாட்டின் இரட்டை வேடத்திற்கும் பாகிஸ்தான் பலியாகி விட்டது. ஆப்கானிஸ்தானில் மீண்டும் தாலிபான்கள் எழுச்சி வருவதற்கு பாகிஸ்தான் காரணம் என்று குற்றம் சாட்டி வருகிறார்கள். ஆனால் தாலிபான்கள் ஆட்சியை சர்வதேச சமூகம் ஒதுக்கி வைப்பதற்கு பதிலாக மக்களை பாதுகாப்பதற்காக வலிமைப்படுத்த வேண்டும் என்று எங்கள் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி கூறிய அதே வார்த்தைகளை நான் இங்கு எதிரொலிக்க கடமைப்பட்டிருக்கிறேன். தாலிபான்கள் ஆட்சியில் நிச்சயம் மனித உரிமைகள் காக்கப்படும், முழுமையாக அரசு நிர்வாகம் ஏற்பட்டு தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தான் மண்ணை பயன்படுத்த முடியாத வகையில் தடுக்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இந்தியா மீது குற்றச்சாட்டு
இந்தியாவிலுள்ள இந்துத்துவா சிந்தனை கொண்ட அரசு, பாசிச சிந்தனையுடன் செயல்படுகிறது. 20 கோடி முஸ்லிம் மக்களுக்கு எதிராக வன்முறை மற்றும் அச்சத்தை அந்த அரசு கட்டவிழ்த்து விட்டுள்ளது. பாகுபாடு கொண்ட குடியுரிமை சட்டங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக அங்கு இயற்றப்படுகின்றன. ஜம்மு காஷ்மீர் பிரச்சினைக்கு இறுதி தீர்வு எட்ட இந்திய அரசு அழைப்பு விடுக்கிறது. ஆனால் காஷ்மீரில் உள்ள இந்திய படைகள் ஒட்டுமொத்தமாக திட்டமிட்டு மனித உரிமை மீறல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன . காஷ்மீரின் சிறந்த தலைவராக இருந்த சையது அலி கிலானி உயிரிழந்த பிறகு அவரது உடலை கட்டாயப்படுத்தி இந்திய படைகள் கொண்டு சென்று அடக்கம் செய்தனர் . இஸ்லாமிய முறைப்படி அந்த அடக்கம் நடைபெறவில்லை என்று சையது அலி கிலானி குடும்பத்தார் குற்றம்சாட்டுகின்றனர். அவரது உடல் இஸ்லாமிய முறைப்படி முழு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் . கார்ப்பரேட்டுகள் நலன், வணிக நலன், புவிசார் அரசியல் வியூகங்கள் போன்றவற்றை மனதில் வைத்து மனித உரிமை பிரச்சினையில் உலக நாடுகள் செயல்படும் விதம் மிகவும் துரதிருஷ்டவசமானது. இவ்வாறு இம்ரான் கான் தனது உரையில் தெரிவித்துள்ளார்.