ஈரானின் அணுசக்தி மையங்களை தாக்கப்போகும் இஸ்ரேல்.. அமெரிக்கா கொடுத்த வார்னிங்
நியூயார்க்: ஈரானின் அணுசக்தி மையங்கள் மற்றும் அதன் உள்கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த உள்ளது. இதற்கான நடவடிக்கைகளுக்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது என்று அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே மோதல் போக்கு என்பது உள்ளது. ஈரான் தனது ஆதரவு அமைப்புகள் மூலம் இஸ்ரேலுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறது. காசாவில் ஹமாஸ் அமைப்பு என்பது ஈரான் ஆதரவில் செயல்பட்டு வருகிறது. இப்படியான சூழலில் ஹமாசுக்கு எதிராக காசாவில் இஸ்ரேல் போரை தொடங்கி நடத்தி வருகிறது.

இதற்கு ஈரான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதோடு இஸ்ரேலுடன் எல்லையை பகிர்ந்து வரும் லெபனான் நாட்டில் செயல்பட்டு வரும் ஹெஸ்புல்லா அமைப்பினரை வைத்து இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த ஹெஸ்புல்லா அமைப்பையும் இஸ்ரேல் சமாளித்து வருகிறது.
அதுமட்டுமின்றி இஸ்ரேல் மீது ஈரான் நேரடியாக ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல், ஈரான் மீது போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதனால் ஈரான் - இஸ்ரேல் இடையே கடும் மோதல் போக்கு உள்ளது. இதற்கிடையே தான் தற்போது ஈரானின் அணுசக்தி மையங்களின் உள்கட்டமைப்புகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை சார்பில் வார்னிங் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் கூறியுள்ளதாக சிஎன்என் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், ‛‛ஈரானின் அணுசக்தி மையங்கள் மற்றும் அதனை சார்ந்த உள்கட்டமைப்புகளை இஸ்ரேல் குறிவைத்துள்ளது. இதுதொடர்பான நடவடிக்கைகளில் இஸ்ரேல் இறங்கி உள்ளது. விரைவில் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது. ஆனாலும் தற்போது வரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‛‛ஈரான் அணுசக்தி மையங்களின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்பு சமீபத்திய மாதங்களில் கணிசமாக அதிகரித்துள்ளது. இருநாடுகள் இடையே அதிகரித்து வரும் பதற்றம் தான் இதற்கு முக்கிய காரணம்' என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ஈரான் அணுஆயுதம் தயாரிக்க முயன்று வருகிறது. இந்த அணுஆயுத தயாரிப்பை கைவிட வேண்டும். அணுசக்தி திட்டத்தின் கீழ் அணுஆயுதம் தயாரிக்க மாட்டோம் என்பது தொடர்பாக தங்களுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானிடம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இருநாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்த விஷயத்தில் ஈரான் முடிவெடுக்க 60 நாள் காலக்கெடுவை அமெரிக்கா வழங்கியது. இந்த காலக்கெடு முடிவடைந்தும் ஈரான் இன்னும் தாமதித்து வருகிறது. ஈரான் ஒருவேளை ஒப்பந்தம் செய்யாவிட்டால் அமெரிக்காவும், ஈரானை குறிவைக்கலாம். இருப்பினும் தற்போதைய சூழலில் ஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தையில் இணக்கம் நிலவி வருவதால் ஒப்பந்தம் வரை ஈரானை அமெரிக்கா அணுசரித்து செல்லாம் என்றும் சர்வதேச வல்லுநர்கள் கூறுகின்றனர். இருப்பினும் இது இன்னும் சில வாரங்கள் மட்டும் தான் நீடிக்கும். அதன்பிறகும் ஈரான் மவுனம் காத்தாலும் இஸ்ரேலும், ஈரானும் கைகோர்த்து அதிரடி நடவடிக்கைகளை துவங்கலாம் என்கின்றனர் சர்வதேச வல்லுநர்கள்.












Click it and Unblock the Notifications