நடு இரவில் எமர்ஜென்சி அறைக்கு சென்ற பிடன்.. காபூலில் நடந்தது தொடக்கம்தான்.. எச்சரிக்கும் அமெரிக்கா!
நியூயார்க்: காபூலில் நேற்று நடந்த பயங்கர குண்டு வெடிப்பில் 90 பேர் வரை பலியானார்கள். இந்த குண்டுவெடிப்பு என்பது வெறும் தொடக்கம்தான், இனியும் இதேபோல் தாக்குதல்கள் நடக்க வாய்ப்பு உள்ளது என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த தாக்குதலை யார் நடத்தி இருந்தாலும் சரி.. அமெரிக்காவிற்கு எதிராக யார் களமிறங்கினாலும் சரி.. ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நாங்கள் இதை மன்னிக்க மாட்டோம், மறக்க மாட்டோம்.. நாங்கள் உங்களை தேடி வருவோம்.. உங்களை வேட்டையாடுவோம்.. அமெரிக்க அதிபர் பிடன் நேற்று நடந்த காபூல் தாக்குதலுக்கு பின் செய்தியாளர்கள் சந்திப்பில் சொன்ன வார்த்தைகள் இவை. ஆம் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி புரிந்த போது 2001ல் அப்போது அதிபர் ஜார்ஜ்புஷ் சொன்ன அதே வார்த்தைகள்.
திருப்பூரில் ரைஸ்மில் ஓனர் மகன் கடத்தல்.. ரூ.3 கோடி பேரம்.. 6 மணி நேரத்தில் கும்பலை பிடித்த போலீஸ்
தாலிபான்களை தேடி செல்வோம்.. அவர்களை வேட்டையாடுவோம் என்று ஜார்ஜ் புஷ் சொன்ன அதே வார்த்தைகளை தற்போது பிடன் சொல்லி இருக்கிறார். ஆனால் இந்த முறை அமெரிக்காவின் எதிரி தாலிபான் கிடையாது.. இப்போது அமெரிக்காவின் புதிய எதிரி இஸ்லாமிக் ஸ்டேட் கோரஷான். அதிகபட்சம் 2000 வீரர்கள் கூட இல்லாத மிக மோசமான ஐஎஸ் அமைப்பு!
பிடன்
நேற்று இந்த தாக்குதல் நடந்த போது தொடக்கத்தில் பலரும் தாலிபான்கள் மீதே சந்தேகம் கொண்டு இருந்தனர். ஆப்கான் மக்கள் வெளியேறுவதை விரும்பாமல் தாலிபான்கள் இப்படி செய்வதாக எண்ணம் தோன்றியது. ஆனால் அமெரிக்காவிற்கும், பென்டகனுக்கும் இது ஐஎஸ் அமைப்பின் வேலை என்பது முன்கூட்டியே தெரியும், இப்படி ஒரு குண்டு வெடிப்பு நடக்க போகிறது என்பதை பென்டகன் எதிர்பார்த்துதான் காத்திருந்தது. ஆனால் பென்டகன் ஏமாற்றம் அடைந்த இடம்.. தாக்குதல் நடந்த பகுதி. அமெரிக்கா கொஞ்சமும் எதிர்பார்க்காத ஒரு இடத்தில் இஸ்லாமிக் ஸ்டேட் கோரஷான் தாக்குதல் நடத்தி உள்ளது.
எங்கே?
காபூல் விமான நிலையத்திற்கு வெளியே அபே கேட் மற்றும் பரோன் ஹோட்டல் கேட் அருகே இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இதில் பரோன் ஹோட்டல் கேட் முழுக்க முழுக்க அமெரிக்க படைகள் இருந்த பகுதி. மிக சொற்ப எண்ணிக்கையில் ஆப்கானிஸ்தான் மக்கள் இருந்த இடம். அதோடு இங்கே பாதுகாப்பும் அதிகம். இப்படிப்பட்ட ஒரு இடத்தில் திட்டமிட்டு ஊடுருவிய ஐஎஸ் அமைப்பினர் குண்டுவெடிப்பை நிகழ்த்தி உள்ளனர். அமெரிக்காவை குறி வைத்தே இந்த குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. இதை அமெரிக்கா கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ஆப்கானிஸ்தானை விட்டு வேக வேகமாக வெளியேறிக்கொண்டு இருந்த அமெரிக்க படைகளை இந்த குண்டுவெடிப்பு சீண்டி உள்ளது.
பெரியது
ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளில் போருக்கு பின்பாக அமெரிக்க படைகள் மீது நிகழ்த்தப்பட்ட பெரிய தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது. 13 அமெரிக்க வீரர்கள் இப்படி ஒரே நேரத்தில் இறப்பது அமெரிக்காவை வெகுவாக சீண்டி உள்ளது. நேற்று இந்த சம்பவம் நடந்ததும் அதிபர் பிடன் அவசர அவசரமாக situation room எனப்படும் அவசரகால அறைக்கு சென்றார். இந்த அறையில்தான் அதிபரின் அணு ஆயுத புட் பால் கட்டுப்பாடு பகுதி தொடங்கி அவசர டிரோன் அட்டாக் நடத்துவதற்கான கட்டுப்பாடு பகுதி வரை எல்லாம் அடங்கி உள்ளது. காபூலில் திடீரென நிகழ்ந்த இந்த குண்டுவெடிப்பை அடுத்து பிடன் நேற்று பின்னிரவு வரை இங்கே ஆலோசனை மேற்கொண்டார்.
ஆலோசனை
எப்படி தாக்குதல் நடந்தது, அதிலும் அமெரிக்க படைகள் இருந்த பகுதிக்குள் ஐஎஸ் தீவிரவாதிகள் நுழைந்தது எப்படி? ஏற்கனவே தாக்குதல் நடக்கும் என்று கணித்தும் கூட தாக்குதலை தடுக்க முடியாமல் போனது எப்படி என்று பல விஷயங்களை இதில் ஆலோசனை செய்து இருக்கிறார்கள். இந்த தாக்குதலை இஸ்லாமிக் ஸ்டேட் கோரஷான்தான் நடத்தியது என்று தாக்குதல் நடந்த சில நிமிடத்திலேயே உறுதியாகிவிட்டது. அவர்கள்தான்.. அமெரிக்க படைகள் உடனே வெளியேறவில்லை என்றால் தாக்குதல் நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்தது. அவர்கள் கூறியது போலவே நேற்று தாக்குதலும் நடத்தப்பட்டது.
Recommended Video
புதிய எச்சரிக்கை
இதனால் அமெரிக்காவிற்கு எதிராக புதிய எதிரியாக இஸ்லாமிக் ஸ்டேட் கோரஷான் என்ற குட்டி அமைப்பு உருவெடுத்துவிட்டது. அமெரிக்க அதிபர் பிடனுடனான ஆலோசனைக்கு பின் பென்டகன் புதிய எச்சரிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த தாக்குதல் என்பது தொடக்கத்தம்தான். இன்னும் வரும் நாட்களில் ஐஎஸ் அமைப்பு அதிக தாக்குதல்களை நடத்தலாம். காபூலில் நடந்தது போன்று ஐஎஸ் அமைப்பு மேலும் பல தாக்குதல்களை நடத்தும் வாய்ப்பு உள்ளதாக பென்டகன் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது ஒரு வகையில் அமெரிக்க படைகளுக்கு சிக்கல் என்றால் இன்னொரு பக்கம் தாலிபான்களுக்கும் சிக்கலை ஏற்படுத்தும்.
தாலிபான்கள் சிக்கல்
தாலிபான் படையினர் தங்களை அரசியல் கட்சியாக நிறுவ முயன்று கொண்டு இருக்கிறார்கள். சர்வதேச அளவில் சீனா, ரஷ்யா போன்ற நாடுகளின் அங்கீகாரத்தை பெற முயன்று கொண்டு இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது தங்களின் 12 நாள் ஆட்சியிலேயே இப்படி ஒரு தாக்குதல் நடப்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அமெரிக்காவிற்கு இந்த தாக்குதல் எவ்வளவு அழுத்தம் கொடுக்குமோ அதே அழுத்தத்தை அந்நாட்டின் புதிய ஆட்சியாளர்களான தாலிபான்களுக்கும் கொடுக்கும். இந்த தாக்குதலுக்கு பழி தீர்க்க கண்டிப்பாக தாலிபான்களும் திட்டங்களை தொடங்கி இருக்கும். ஏற்கனவே இஸ்லாமிக் ஸ்டேட் கோரஷான் அமைப்பிற்கும் தாலிபானுக்கும் மோதல் உள்ளது. தாலிபானின் ஆட்சி பலத்தை குறைத்து மதிப்பிடும் வகையில் இஸ்லாமிக் ஸ்டேட் கோரஷான் அட்டாக் அமைந்துள்ளது.
தாலிபான் அமெரிக்கா
இந்த தாக்குதல் ஆப்கானிஸ்தானின் அரசியல் வரலாற்றில் வரும் காலத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தும் என்று அரசியல் வல்லுனர்கள் கணித்துள்ளனர். அமெரிக்கா மீண்டும் ஆப்கானிஸ்தானில் நேரடியாகவோ மறைமுகமாகவோ தாக்குதல்களை நடத்த இந்த குண்டுவெடிப்பு பாதை போட்டுக்கொடுத்துவிட்டது என்று கூறுகிறார்கள். ஐஎஸ் அமைப்பை பழி வாங்குகிறேன் என்ற பெயரில் அமெரிக்கா மீண்டும் ஆப்கானிஸ்தானில் கால் பாதிக்கும் வாய்ப்புகளும் அதிகம் உள்ளது. ஏன் தாலிபானோடு கூட்டணி அமைத்து ஐஎஸ் அமைப்பை அமெரிக்கா எதிர்த்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை, ஆப்கானிஸ்தானின் வரலாறு அப்படி!
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற்றம் என்பது அமைதிக்கான தொடக்கமோ, போருக்கான முடிவோ கிடையாது.. அதுதான் இன்னொரு மோதலுக்கான பெரிய தொடக்கம்!
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற்றம் என்பது அமைதிக்கான தொடக்கமோ, போருக்கான முடிவோ கிடையாது.. அதுதான் இன்னொரு மோதலுக்கான பெரிய தொடக்கம்!