அமெரிக்காவில் 8 அடி உயர மகாத்மா காந்தி சிலை சேதம்- இந்திய தூதரகம் கடும் கண்டனம்
நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மகாத்மா காந்தியடிகளின் 8 அடி உயர சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். இச்சம்பவத்துக்கு அமெரிக்காவுக்கான இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 1986-ம் ஆண்டு மகாத்மா காந்தியடிகள் சிலை நிறுவப்பட்டது. காந்தி நினைவு சர்வதேச அறக்கட்டளை சார்பில் இங்கு 8 அடி உயர வெண்கல சிலை நிறுவப்பட்டது. இந்த சிலைதான் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் யூனியன் சதுக்கம் பகுதியில் மகாத்மா காந்தியடிகள் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை நேற்று (சனிக்கிழமை) மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர்.
மகாத்மா காந்தியடிகள் சிலையை சேதப்படுத்திய இழிவான நடவடிக்கைக்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கிறோம். இச்சம்பவம் குறித்து அமெரிக்கா வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அமெரிக்காவுக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் மகாத்மா காந்தியடிகள் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் அங்கு வாழும் இந்தியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அமெரிக்கா போலீசார் விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கவும் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் வலியுறுத்தி உள்ளனர். ஏற்கனவே பஞ்சாப் தனிநாடு கோரும் காலிஸ்தான் இயக்கத்தினர் காந்தி சிலையை அமெரிக்காவில் சேதப்படுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications