டிரம்ப்பையே அலறவிட்ட மம்தானி.. நியூயார்க்கில் மேயர் தேர்தல் விறுவிறு! உற்று பார்க்கும் அமெரிக்கா
நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் மேயர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. உள்ளூர் நேரப்படி வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வரும் சூழலில், வாக்குப்பதிவு முடிந்த கையோடு வாக்கு எண்ணிக்கையும் அங்கு நடைபெறுகிறது. அங்கு ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோஹ்ரான் மம்தானி போட்டியிடும் நிலையில், அவர் வெல்லவே கூடாது என்பதில் டிரம்ப் உறுதியாக இருக்கிறார். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
அமெரிக்காவில் மிக முக்கியமான நகரம் என்றால் அது நியூயார்க் தான்.. பொருளாதார அடிப்படையில் வேறு எந்தவொரு நகரத்தையும் விட மிகப் பெரிய நகரமாக நியூயார்க் இருக்கிறது. அந்த நகரத்தின் 111வது மேயரை தேர்வு செய்ய இப்போது அங்குத் தேர்தல் நடைபெறுகிறது. இன்றைய தினம் அதற்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

நியூயார்க் தேர்தல்
உள்ளூர் நேரப்படி காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அமெரிக்காவில் எல்லாத் தேர்தல்களையும் போலவே இதிலும் வாக்குப்பதிவு முடிந்த கையோடு வாக்கு எண்ணிக்கை ஆரம்பிக்கும். இரவு 9 மணிக்கு, அதாவது இந்திய நேரப்படி புதன்கிழமை காலை 7.15க்கு பிறகு வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இந்த முறை நியூயார்க் தேர்தலில் மூன்று முனைப் போட்டி இருக்கிறது. அங்கு எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோஹ்ரான் மம்தானி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து டிரம்ப்பின் குடியரசுக் கட்சி சார்பில் கர்டிஸ் ஸ்லிவா போட்டியிடுகிறார். அதேபோல நியூயார்க்கின் முன்னாள் கவர்னர் ஆண்ட்ரூ கியூமோ சுயேச்சையாகப் போட்டியிடுகிறார்.
யார் முன்னிலை
வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வரும் நிலையில், அனைத்து வேட்பாளர்களும் பொதுமக்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர். தற்போது வரை வெளியான சர்வேக்களில் மம்தானிக்கு முன்னிலை இருக்கிறது. அவருக்குப் பிறகு சுயேச்சை வேட்பாளர் ஆண்ட்ரூ கியூமோ வருகிறார். மூன்றாவது இடத்தில் தான் ட்ரம்ப் கட்சி வருகிறது.
டிரம்ப் திட்டவட்டம்
இந்தத் தேர்தலை டிரம்ப் கூட உற்றுக் கவனித்து வருகிறார். மம்தானி வெல்லவே கூடாது என்பதில் டிரம்ப்பும் மிகத் தெளிவாக இருக்கிறார். வெளிப்படையாகவே மம்தானிக்கு வாக்களிக்க வேண்டாம் எனச் சொல்லி வருகிறார். இதற்கிடையே தேர்தலுக்கு முந்தைய நாள் இன்னொரு படி மேலே சென்று, சர்வேக்களில் 2வது இடத்தில் வரும் சுயேச்சை வேட்பாளர் ஆண்ட்ரூ கியூமோவுக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும் எனச் சொல்லியுள்ளார். மம்தானியை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே ட்ரம்ப் தனது கட்சி வேட்பாளரைத் தாண்டி இன்னொருவருக்கு ஆதரவளிக்கிறார்.
நிதி தர மாட்டாராம்
மேலும், தேர்தலில் மம்தானி வெற்றி பெற்றால் பெடரல் அரசின் நிதியைத் தர மாட்டேன் என்றும் கூட வெளிப்படையாக மிரட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில், "நியூயார்க் நகர மேயர் தேர்தலில் ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றால்.. நான் நியூயார்க்கிற்கு பெடரல் நிதியைத் தர வாய்ப்பில்லை. ஒதுக்க வேண்டிய குறைந்தபட்ச நிதியைத் தவிரக் கூடுதல் நிதியைத் தர மாட்டேன்" என வெளிப்படையாகவே மக்களை மிரட்டும் வகையில் பதிவிட்டுள்ளார்.
இருப்பினும், தற்போதைய நிலவரப்படி மம்தானி வெல்லவே வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. ஒருவேளை மம்தானி வென்றால்.. டிரம்ப் வரும் காலங்களில் நியூயார்க் மேயருடன் மோதல் போக்கையே கொண்டிருப்பார் என தெரிகிறது. எனவே, இந்தத் தேர்தலை ஒட்டுமொத்த அமெரிக்காவும் உற்றுக் கவனித்து வருகிறது.












Click it and Unblock the Notifications