பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களுக்கு பேச என்ன தகுதி இருக்கிறது? பாகிஸ்தானை பந்தாடிய ஜெய்சங்கர்
நியூயார்க்: "சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்த உங்களுக்கு, ஐ.நா.வில் பேச என்ன தகுதி இருக்கிறது?" என்று பாகிஸ்தானை குறிப்பிட்டு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சரமாரியாக கேள்வியெழுப்பினார்.
காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனைக் கூட்டத்தில் பாகிஸ்தான் பேசியதால், ஆவேசமடைந்த ஜெய்சங்கர் இவ்வாறு பேசினார்.
காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினை என்றும், அதை சர்வதேச தளங்களில் எந்த நாடும் பேசக்கூடாது எனவும் இந்தியா பல முறை தெரிவித்த போதிலும், பாகிஸ்தான் தொடர்ந்து இந்த விவகாரத்தை எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் ஜிந்தாபாத்.. ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரையில் கிளம்பிய கோஷம்? பாஜக வெளியிட்ட வீடியோ
இந்தியாவை சீண்டிய பாகிஸ்தான்
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சில் ஆலோசனைக் கூட்டம் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. தற்போது ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு இந்தியா தலைமை வகித்து வருகிறது. இந்நிலையில், நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவால் பூட்டோ கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் காஷ்மீர் விவகாரத்தை முன்வைத்து பேசினார்.
"காஷ்மீரில் மனித உரிமை மீறல்"
அவர் பேசுகையில், "காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கு எதிராக அங்கு இந்திய அரசு செயல்பட்டு வருகிறது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியதன் மூலம் அங்கு வசிக்கும் மக்கள் பல்வேறு உரிமைகளை இழந்து தவிக்கின்றனர். மேலும், அமைதியை நிலைநாட்டுகிறோம் என்ற பெயரில் அங்கு மனித உரிமை மீறல்களில் இந்திய ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரத்தை ஐ.நா. கைக்கட்டி வேடிக்கை பார்ப்பது சரியல்ல" எனக் கூறினார்.
"பின்லேடனுக்கு அடைக்கலம்"
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பேசியதாவது: காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினை என்று பல முறை தெரிவித்துவிட்டோம். அதன் பிறகும், வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் அந்த விவகாரத்தை ஒரு நாடு சர்வதேச தளங்களில் பேசி வருகிறது. மனித உரிமை மீறல் பற்றி கவலைப்பட்டு பேசும் அந்த நாடு தான், சர்வதேச தீவிரவாதியான ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்த தங்க வைத்தது. இந்தியாவின் நாடாளுமன்றத்தின் மீது தீவிரவாதிகள் மூலம் தாக்குதல் நடத்தியதும் அந்த நாடு தான். இவ்வாறு தீவிரவாதத்துக்கு துணைபோகும் உங்களுக்கு ஐ.நா.வில் பேச என்ன தகுதி இருக்கிறது?
"தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும்"
தற்போதைய சூழலில் தீவிரவாதம், பருவநிலை மாறுபாடு, வைரஸ் நோய் தாக்குதல் ஆகியவையே உலகுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இவற்றுக்கு எதிராக ஐ.நா. சபை உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, ஐநா மீது உலக நாடுகளுக்கு நம்பகத்தன்மை ஏற்படும். நாம் எந்தெந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சிக்கிறோமோ, அதே பிரச்சினைகளை ஏற்றுக்கொள்ளும் விதமாக நமது பேச்சுகள் இருக்கக்கூடாது. இது தீவிரவாதத்துக்கும் பொருந்தும். இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார்.