நிலைமை கைமீறுது.. இந்தியாவும் - ரஷ்யாவும் டீம் சேர்ந்துட்டாங்க.. டிரம்ப்பிற்கு போன அவசர வார்னிங்
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வர்த்தக ஆலோசகரான பீட்டர் நவரோ, இந்தியா ரஷ்யாவுடன் நெருக்கமாவது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியா அமெரிக்காவுடன் நெருக்கமாக இருக்க வேண்டும், ரஷ்யாவுடன் அல்ல என்று கூறி உள்ளார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோரைச் சந்தித்ததை அவர் "வெட்கக்கேடானது" என்று வர்ணித்துள்ளார். "மோடி, ஷி ஜின்பிங் மற்றும் புடின் ஆகியோருடன் நெருக்கம் காட்டுவது வெட்கக்கேடானது. அவர் என்ன நினைக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. அவர் எங்களுடன் இருக்க வேண்டும், ரஷ்யாவுடன் அல்ல என்பதை அவர் உணர வேண்டும் என்று நம்புகிறோம்," என்று நவரோ கூறினார்.

இந்தியா ரஷ்யா நெருக்கம்
இந்தக் கருத்துகள் பிரதமர் மோடி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்று, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோரைச் சந்தித்த நிலையில் இந்த விமர்சனங்களை வைத்துள்ளார்..
அதிபர் டிரம்ப் இந்தியா மீது வரி விதிப்பு நடவடிக்கைகளை எடுத்ததிலிருந்து, வெள்ளை மாளிகையின் வர்த்தகத் தலைவர் டெல்லிக்கும் மாஸ்கோவுக்கும் இடையிலான கச்சா எண்ணெய் வர்த்தகத்தை அடிக்கடி விமர்சித்து வருகிறார். ரஷ்ய எண்ணெய் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் உக்ரைன் போருக்கு நிதி அளிக்கிறது என்று அவர் குற்றம் சாட்டுகிறார். உக்ரைன் போரை ஒருசில மணிநேரங்களில் முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்று கடந்த ஆண்டு டிரம்ப் கூறி இருந்தாலும், அவரால் அதைச் செய்ய முடியவில்லை.
வரிகளின் மகாராஜா
முன்னதாக, நவரோ இந்தியாவை "வரிகளின் மகாராஜா" என்றும் குறிப்பிட்டிருந்தார். புதுடெல்லியின் வரிகள் முக்கிய பொருளாதார நாடுகளில் மிக அதிகமாக உள்ளன என்றும், அதை இந்தியா ஒப்புக்கொள்ள மறுக்கிறது என்றும் அவர் வாதிட்டார். முன்னதாக சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்ற SCO உச்சிமாநாட்டின்போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் ஒரே வாகனத்தில் இணைந்து பயணித்தது கவனம் பெற்றுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் வர்த்தகத்திற்கு எதிராக விதித்த வரிக்கட்டணங்களுக்கு மத்தியில் இது ஒரு முக்கிய சந்திப்பாக, பயணமாக கருதப்படுகிறது.
அமெரிக்கா விதித்துள்ள தடைகள் மற்றும் கண்டனங்களுக்கு மத்தியில், இந்த சந்திப்பு இருதரப்பு உறவுகளில் உள்ள நெருக்கத்தை எடுத்துக்காட்டுகிறது. SCO உச்சிமாநாட்டின் நிகழ்வுகளுக்குப் பிறகு, நானும் அதிபர் புதினும் இருதரப்பு சந்திப்பு நடைபெறும் இடத்திற்கு ஒன்றாகப் பயணித்தோம். அவருடனான உரையாடல்கள் எப்போதும் ஆழமான புரிதலைத் தருபவை, என்று பிரதமர் மோடி X சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, புதின் உடனான புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார்.
அதிபர் புதின் - மோடி சந்திப்பு
ரஷ்ய அதிபர் புதின்தான், SCO மாநாட்டு இடத்திலிருந்து ரிட்ஸ்-கார்ல்டன் ஹோட்டலில் நடைபெற்ற இருதரப்பு சந்திப்புக்கு பிரதமர் மோடியுடன் சேர்ந்து பயணிக்க விரும்பியதாக அரசியல் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. மோடிக்காக புதின் சுமார் 10 நிமிடங்கள் காத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இரு தலைவர்களும் புதினின் காரில் பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாடியவாறு ஒன்றாகப் பயணித்தனர். சந்திப்பு நடைபெறும் இடத்தை அடைந்த பின்னரும், காரில் மேலும் 45 நிமிடங்கள் உரையாடினர். பின்னர், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இருதரப்பு சந்திப்பு நடைபெற்றது.
அதிபர் புதினின் இந்த செயல் அமெரிக்காவின் கடும் வரி விதிப்பு மற்றும் அபாரதத்திற்கு மத்தியில் முக்கியத்துவம் பெறுகிறது. ரஷ்யாவுடன் இந்தியா மேற்கொள்ளும் எண்ணெய் வர்த்தகம் குறித்து அமெரிக்கா பகிரங்கமாக கண்டித்து வருகிறது. ரஷ்யாவுடனான எண்ணெய் வர்த்தகத்தின் மூலம் உக்ரைன் போருக்கு இந்தியா நிதியளிப்பதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியிருந்தார்.












Click it and Unblock the Notifications