நியூயார்க் மேயர் தேர்தல்! டிரம்புக்கு எதிராக புயல்! இந்திய வம்சாவளியிடம் இப்படி சிக்கிட்டாரே!
வாஷிங்டன்: நியூயார்க் மேயருக்கான தேர்தல் இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இதற்கான மேயர் வேட்பாளர் போட்டியில் ஜனநாயக கட்சியை சேர்ந்த, இந்திய வம்சாவளியினரான பாலஸ்தீன ஆதரவாளர் 'ஜோர்ஹான் மம்தானி' வெற்றி பெற்றிருக்கிறார். இது டிரம்பை கலக்கமடைய வைத்திருக்கிறது. தற்போது ஜோர்ஹான் மீது டிரம்ப் விமர்சனங்களை அடுக்க தொடங்கியுள்ளார்.
ஜோர்ஹான், BDS எனும் இயக்கத்தை தீவிரமாக ஆதரித்து வருகிறார். அதாவது இஸ்ரேலுக்கு எதிராக பாலஸ்தீன-தலைமையிலான, வன்முறையற்ற இயக்கம்தான் இந்த BDS.

ஹார்வார்ட் முதல் மேயர் வரை
இஸ்ரேலிய பொருட்களை புறக்கணித்தல், அங்கு முதலீடு செய்வதை தவிர்ப்பது, அந்நாட்டு பொருட்களை முற்றிலுமாக தடை செய்வது என்பதை இந்த இயக்கம் முன்வைத்து வலியுறுத்துகிறது. ஏற்கெனவே, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் இஸ்ரேலுக்கு எதிராக போராடினார்கள் என்பதால் தற்போது வரை அவர்கள் பழிவாங்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இப்படி இருக்கையில், மேயர் தேர்தலுக்கு பாலஸ்தீனத்திற்கு ஆதரவான ஒருவர் தேர்வாகியிருப்பது டிரம்ப் தரப்பை அதிர்ச்சியில் தள்ளியிருக்கிறது.
தேர்வில் வெற்றி
வேட்பாளருக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் ஜோர்ஹான், 44% வாக்குகளுடன் முன்னிலையில் இருந்தார். ஆனால், 50%க்கும் அதிகமான வாக்குகளை பெற்றால்தான் வெற்றிபெற முடியும். இந்நிலையில் இவருக்கு அடுத்தபடியாக 36% வாக்குகள் பெற்றிருந்த ஆண்ட்ரூ என்பவர். தனது தோல்வியை ஒப்புக்கொண்டு, ஜோர்ஹானுக்கு ஆதரவு கொடுக்க.. மேயர் வேட்பாளராக ஜோர்ஹான் அதிகாரப்பூர்வமாக தேர்வாகியுள்ளார்.
கம்யூனிஸ்ட் ஒவ்வாமை
இந்த வெற்றியை துளியும் ரசிக்காத டிரம்ப், ஜோர்ஹானை மனநலம் பாதித்தவர் என்று விமர்சித்திருக்கிறார். அதாவது, "இறுதியாக அது நடந்துவிட்டது, ஜனநாயகக் கட்சியினர் எல்லையைத் தாண்டிவிட்டார்கள். 100% கம்யூனிஸ்ட் பைத்தியக்காரரான ஜோஹ்ரான் மம்தானி, டெம் பிரைமரியை வென்று மேயராகப் போகிறார். இதற்கு முன்பும் தீவிர இடதுசாரிகள் இருந்திருக்கிறார்கள், ஆனால் இது கொஞ்சம் அபத்தமாகி வருகிறது" என்று தனது சோஷியல் மீடியாவில் டிரம்ப் பதிவிட்டு புலம்பி வருகிறார்.
புலம்பி தள்ளும் டிரம்ப்
இத்துடன் அவர் நிற்கவில்லை, "ஜோஹ்ரான் பார்த்தாலே பயங்கரமா இருக்காரு, அவருடைய குரல் எரிச்சலூட்டுகிறது. அவருக்கு அவ்வளவு அறிவு இல்லை. அவருக்குப் பின்னால் AOC+3 இருக்கிறார்கள். எல்லாரும் முட்டாள்கள். ஏன் நம்முடைய 'கிரேட் பாலஸ்தீன செனட்டர்' சக் ஷூமர் கூட அவருக்கு ஆதரவாகக் குழைந்து பேசுகிறார். ஆம், இது நம் நாட்டின் வரலாற்றில் ஒரு பெரிய மோசமான தருணம்" என்று விமர்சித்திருக்கிறார்.
அமெரிக்கப் பிரதிநிதி சபையின் உறுப்பினரான அலெக்சாண்ட்ரியா ஒகாசியோ-கார்டெஸையும், அவரது மூன்று ஆதரவாளர்களையும்தான் டிரம்ப இதில் AOC+3 என குறிப்பிட்டிருக்கிறார். இவர்கள் இடதுசாரி கொள்கையாளர்களாக அறியப்படுகின்றனர்.
யார் இந்த ஜோஹ்ரான்?
உகாண்டாவில் பிறந்த இந்திய மார்க்சிய அறிஞர் மஹ்மூத் மம்தானிதான், ஜோஹ்ரான் மம்தானியின் தந்தை. புகழ்பெற்ற இந்திய-அமெரிக்க திரைப்பட இயக்குநர் மீரா நாயர்தான் அவரது தாய். இவரது குடும்பப் பின்னணி, சர்வதேச கலாச்சார மற்றும் அறிவுசார் தாக்கங்களைக் கொண்டிருக்கிறது.
ஜோஹ்ரான் மம்தானி இறுதித் தேர்தலில் வெற்றி பெற்றால், அவர் நியூயார்க் நகரத்தின் வரலாற்றிலேயே முதல் முஸ்லிம் மேயர் என்ற பெருமையைப் பெறுவார். இவருக்கு அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள் கட்சி ஆதரவளித்திருக்கிறது. பாலஸ் தீனம் மீது இஸ்ரேல் நடத்திய போர், ஓர் 'இனப்படுகொலை' என்று தேஹ்ரான் விமர்சிப்பதால், டிரம்ப் உட்பட குடியரசு கட்சியின் அனைத்து தலைவர்களும் இவருக்கு எதிராக இருக்கின்றனர்.
ஜோஹ்ரானின் வாக்குறுதிகள்
தற்போது, ஜோஹ்ரான் குயின்ஸ் மாகாணத்தின் நியூயார்க் மாநில சட்டசபை உறுப்பினராகப் பணியாற்றுகிறார். மேயர் வேட்பாளராக களமிறங்கியுள்ள இவர், பல முக்கியமான வாக்குறுதிகளை மக்களுக்கு கொடுத்திருக்கிறார்.
நியூயார்க்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் வாடகை உயர்வை கட்டுப்படுத்துவது.
நகரப் பேருந்து சேவைகளை அனைவருக்கும் இலவசமாக வழங்குவது
ஜனநாயக கட்சிக்கு ஆதரவு
இவை மிக முக்கிய வாக்குறுதிகளாக இருக்கின்றன. குறிப்பாக வாடகை உயர்வை கட்டுப்படுத்தப்படும் என்று ஜோஹ்ரான் கூறியிருப்பது, நியூயார்க் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. காரணம், நியூயார்க்கில் 3BHK வீட்டின் மாத வாடகை ரூ.5 லட்சம். இது மிக அதிகம். நீண்ட காலமாக மக்கள் இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இப்படி இருக்கையில் வாடகையை உயர்த்த மாட்டோம் என்று ஜோஹ்ரான் வாக்குறுதி அளித்திருப்பதை மக்கள் வரவேற்றிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications