மீண்டும் முருங்கை மரம் ஏறிய டிரம்ப்! ஆபத்து இந்தியாவுக்குதான்.. ஏப்ரல் 2ம் தேதி வெடிக்கும் பூகம்பம்
நியூயார்க்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவின் வரி நடைமுறை சமத்துவமற்றதாக இருப்பதாக பேசியிருக்கிறார். ஏற்கெனவே கனடா, சீனா, மெக்சிகோவுக்கு கூடுதல் வரியை விதித்துள்ள அவர், தற்போது இந்தியா குறித்து பேசியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.
ஏப்ரல் 2ம் தேதி வரி விதிப்பு குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்றும் டிரம்ப் பேசியிருப்பது இந்தியாவுக்கு எதிரானதாக பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் பேசிய டிரம்ப், "வெளிநாட்டு பொருட்கள் மீது கூடுதல் இறக்குமதி வரியை விதிப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இந்தியாவும் பிற நாடுகளும் அமெரிக்க வணிகங்களுக்கு அநியாயம் செய்கிறது. இந்தியா 100% வரியை விதித்திருக்கிறது. குறிப்பாக ஆட்டோமொபைல் பொருட்கள் மீது அதிக வரியை விதித்திருக்கிறது.
மற்ற நாடுகள் அமெரிக்காவுக்கு எதிராக பல ஆண்டுகளாக கூடுதல் வரியை விதித்து வருகின்றன. இதையே அவர்களுக்கு எதிராக பயன்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்தியா வசூலிக்கும் 100% வரி நியாயமே கிடையாது. அவர்கள் என்ன வரி விதிக்கிறார்களோ, அதையே நாங்கள் விதிக்க தயாராக இருக்கிறோம்" என்று கூறியுள்ளார். அவன் பொருளை எடுத்து அவனையே போட நாங்க ரெடி என்பதுதான் டிரம்ப் பேசியதன் அர்த்தம்.
ஆனால் டிரம்ப் பேசியது பாதி உண்மைதான் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அமெரிக்க ஆட்டோமொபைல் பொருட்களுக்கு இந்தியா 100% வரி விதிப்பது நிஜம்தான். மோட்டார் வாகனங்கள், மொபைல் போன்கள், சாக்லேட்டுகள் போன்ற பொருட்களுக்கு இந்தியாவில் உள்ள உற்பத்தியாளர்களுக்கு போட்டியாக அமெரிக்க பொருட்கள் வரக்கூடாது என்பதற்காகத்தான் அதிக வரிகள் விதிக்கப்படுகின்றன.
இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு குறைந்த பொருட்கள்தான் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால் அமெரிக்காவிலிருந்து அதிக பொருட்களை நாம் இறக்குமதி செய்கிறோம். இந்த வர்த்தக சமமின்மையை சமாளிக்கவே அமெரிக்கவுக்கு அதிக வரியை போடுகிறோம். மற்றொரு காரணம், மேக் இன் இந்தியா திட்டத்தை வெற்றிபெற செய்ய வைக்க, உள்ளூர் தயாரிப்புகளை ஊக்கப்படுத்த வேண்டும். அப்படியெனில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். இதெல்லாம்தான் கூடுதல் வரிக்கான காரணங்கள்.
இதையெல்லாம் புரிந்துக்கொள்ளாமல் கூடுதல் வரி விதிக்கிறார்கள் என்று டிரம்ப் புலம்புவது சரியில்லை. கனடா, மெக்சிகோ மற்றும் சீனா விஷயத்தில் கூடுதல் வரியை விதித்ததை போல, இந்தியா விஷயத்திலும் வரி எனும் முருங்கை மரத்தில் டிரம்ப் மீண்டும் உச்சத்தல் ஏறி அமர்ந்திருக்கிறார். வரி எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை சிறிய உதாரணம் மூலம் பார்க்கலாம்.
இந்திய மாம்பழங்கள் அமெரிக்காவில் 10 டாலருக்கு விற்கப்படுகிறது என வைத்துக்கொள்வோம். அமெரிக்கா 25% கூடுதல் வரியை விதித்தால், மாம்பழங்களின் விலை 12.5 டாலராக உயரும். எனவே அமெரிக்கர்கள் இதனை வாங்க தயக்கம் காட்டுவார்கள். இதனால் இந்தியாவின் வியாபாரம் படுத்துவிடும். இதுதான் கூடுதல் வரியின் பாதிப்புக்கான உதாரணம்.
டிரம்ப் இந்தியாவுக்கு கூடுதல் வரியை விதித்தால் நமது உள்நாட்டு உற்பத்தியில் அது பாதிப்பை ஏற்படுத்தும். அமெரிக்காவிற்கான இந்தியாவின் மொத்த ஏற்றுமதி, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 2 சதவீதமாக உள்ளது. எனவே கூடுதல் வரி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியை 0.1 முதல் 0.3 சதவிகிதம் வரை பாதிக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பை எதிர்கொண்ட கனடாவும், சீனாவும் பதில் வரியை விதித்திருக்கிறது. பதில் வரி காரணமாக, தனது வரி உத்தரவை திரும்ப பெற வேண்டிய கட்டாயத்துக்கு டிரம்ப் தள்ளப்பட்டிருக்கிறார். ஆனால் இந்தியாவுக்கு வரி விதிக்கப்பட்டால், அதை நாம் எப்படி சமாளிக்கப்போகிறோம் என்பது தெரியாது. தற்போதுள்ள மத்திய அரசு அமெரிக்காவுடன் நெருக்கம் காட்டி வருகிறது. இந்த அரசு பதில் வரியை விதிக்குமா? அல்லது அமெரிக்காவின் வரி சுமையை ஏற்குமா? என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications