பாதியில் நிறுத்தப்பட்ட வெள்ளை மாளிகை ஸ்பீச்.. டிரம்பிற்கு பெரிய அவமானம்.. பிளானில் விழுந்த ஓட்டை!
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று வெள்ளை மாளிகையில் பேசிக்கொண்டு இருந்த உரையை அமெரிக்காவின் பெரும்பாலான சேனல்கள் பாதியில் நிறுத்தி உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எதிராக அவரின் கட்சியினரே குரல் கொடுத்து வரும் நிலையில்... தற்போது சேனல்களும் அவரின் பேச்சை ஒளிபரப்ப மறுத்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறார். தற்போது நிலவரப்படி 264 வாக்குகளுடன் ஜனநாயக கட்சி வேட்பாளர் பிடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். குடியரசு கட்சி வேட்பாளர் அதிபர் டிரம்ப் 214 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.
வாழ்க்கையில் தோல்வியை பார்த்து வளராத டிரம்ப்.. இந்த வீழ்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாமல் கலகம் செய்ய தொடங்கி உள்ளார். தேர்தலில் முறைகேடு நடக்கிறது என்று டிரம்ப் புகார் வைக்க தொடங்கி உள்ளார். அதோடு வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடந்தால் நான்தான் வெற்றியாளர் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்
நீலம் vs சிவப்பு.. டிரம்ப்பால் பிளவுபட்டு நிற்கும் மக்கள்.. சிவில் வாரை நோக்கி செல்கிறதா அமெரிக்கா?
வெள்ளை மாளிகை
இது தொடர்பாக நேற்று வெள்ளை மாளிகையில் பேசிய டிரம்ப்.. இந்த தேர்தலில் முறைகேடான வாக்குகளை எண்ணுகிறார்கள். முறைகேடாக பதிவு செய்யப்பட்ட பொய்யான தபால் வாக்குகளை எண்ணுகிறார்கள். தேர்தல் நாளுக்கு மறுநாள் வந்த தபால் வாக்குகளை கூட எண்ணுகிறார்கள். இதனால்தான் தேர்தல் முடிவுகள் மாறுகிறது.
தேர்தல் வாக்கு
முறையான வாக்குகளை மட்டுமே எண்ண வேண்டும். தேர்தலில் பதிவான அதிகாரபூர்வ வாக்குகளை மட்டுமே எண்ண வேண்டும். அதில் நான்தான் வெற்றியாளர். இந்த கணக்குப்படி பென்சில்வேனியா, ஜார்ஜியா, மிச்சிகன் மாகாணங்களில் நான்தான் வெற்றியாளர். என்னுடைய வெற்றியை பறிக்க ஜனநாயக கட்சி சதித்திட்டம் தீட்டுகிறது என்று டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார்.
ஆனால் என்ன
ஆனால் டிரம்பின் இந்த பேச்சுக்களை அவரின் ஆதரவாளர்கள், குடியரசு கட்சியினரே நம்ப மறுத்துள்ளனர். குடியரசு கட்சியின் செனட்டர்கள் பலர் டிரம்ப் பேசுவது தவறு. அவர் பொய்யான விஷயங்களை சொல்கிறார். மக்கள் தீர்ப்பை மதிக்க வேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறார்கள். குடியரசு கட்சியின் செனட்டர்கள் மிட்ச் மெக்கனால், லிசா முர்க்கோவ்சி, ஆடம் கின்சிங்கர் உள்ளிட்ட பல குடியரசு கட்சியினர் டிரம்ப் எதிர்த்துள்ளனர். தற்போது ஊடகங்களும் டிரம்பிற்கு எதிராக திரும்பி உள்ளது.
டிரம்ப் பேச்சு
நேற்று வாக்கு எண்ணிக்கைக்கு எதிராக டிரம்ப் பேசிக்கொண்டே இருக்கும் போதே .. கட் கட் என்று ஒரு குரல் கேட்டது. அது சிஎன்பிசியில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ஷேப் ஸ்மித் குரல்.. அதிபரின் பேச்சை பாதியில் நிறுத்திவிட்டு உங்களிடம் பேசுவதற்கு மன்னிப்பு கேட்கிறேன், என்று ஸ்மித் பேச தொடங்கினார். அதில், டிரம்ப் இந்த பேச்சு முழுக்க பொய்யான விஷயங்களை பேசுகிறார். நிறைய தவறான தகவல்களை தருகிறார். அதனால் அவரின் பேச்சை நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.. என்று கூறினார்.
தவறான தகவல்
பொய்யான வாக்குகளை, முறைகேடான வாக்குகளை எண்ணுகிறார்கள் என்று டிரம்ப் பொய் சொல்கிறார். எந்த மாகாணத்திலும் டிரம்ப் சொல்வது போல முறைகேடு நடக்கவில்லை.. என்று டிரம்ப் பேச்சை உடைத்து உண்மையை வெளியே கொண்டு வந்தார். ஆனால் சிஎன்பிசி ஸ்மித் மட்டும் இப்படி பேசவில்லை. நேற்று டிரம்ப்பின் வெள்ளை மாளிகை பேச்சை ஒளிபரப்பிய எல்லா சேனலும் இதைத்தான் செய்தது.
என்ன செய்தனர்
ஏபிசி, சிபிஎஸ், என்பிசி என்று வரிசையாக எல்லா சேனல்களும் டிரம்ப் பேச்சை பாதியில் நிறுத்திவிட்டு.. அதிபர் பேசுவதை ஒளிபரப்ப மாட்டோம். ஒரு பொய்யான உரையை இதற்கு மேலும் ஒளிபரப்ப முடியாது. அமெரிக்க மக்களை அவர் ஏமாற்ற பார்க்கிறார். மக்களை ஒரு நாட்டின் அதிபர் தவறான வழி நடத்துவதை எங்களால் ஏற்க முடியாது. அவரின் பேச்சு எதற்கும் ஆதாரம் இல்லை என்று கூறி ஒளிபரப்பை பாதியில் நிறுத்தி உள்ளனர்.
சிஎன்என்
அதிலும் சிஎன்என் சேனல் ஒருபடி மேலே போய்.. டிரம்ப் பேச்சை பாதியில் நிறுத்தாமல் கடைசி வரை ஒளிபரப்பியது. ஆனால் அவர் பேசும் போதே.. கீழே ஓடிய ஸ்கோலிரிங்கில்.. டிரம்ப் பேசுவதற்கு ஆதாரம் இல்லை. அவர் பொய்யான விஷயங்களை பேசுகிறார் என்று கூறியது. இன்னொரு பக்கம் சிபிஎஸ் சேனல் பாதியில் டிரம்ப் பேசுவதை நிறுத்திவிட்டு.. தேர்தல் அதிகாரி ஒருவரிடம் டிரம்ப் பேச்சை "பேக்ட் செக்'' செய்து.. டிரம்ப் பேசுவது பொய் என்று நிரூபித்தது.
சிஎன்என்
இப்படி டிரம்பை கிட்டத்தட்ட எல்லா சேனலும் வைத்து செய்தது.. அதிலும் சிஎன்என் சேனலின் ஜேக் டேப்பர்.. அமெரிக்க அதிபர் ஒரு வார்த்தை கூட உண்மை பேசவில்லை. இது அமெரிக்க ஜனநாயகத்திற்கு சோகமான நாள். அவர் மக்களை குற்றஞ்சாட்டுகிறார். ஜனநாயகத்தை சிதைக்க பார்க்கிறார். டிரம்ப் பேசுவது பொய்.. பொய்.. பொய் மட்டுமே,.. அவரின் பேச்சு மிக மோசம்.. என்று விமர்சனம் செய்தார்.
மோசம்
அதிபருக்கு எதிராக இப்படி ஊடகங்கள் ஒன்று கூடியது பெரிய அளவில் பாராட்டப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கைக்கிற்கு எதிராக மக்களை திரட்டலாம் என்று டிரம்ப் நினைத்தார். ஆனால் அவரின் பேச்சை கூட சேனல்கள் ஒளிபரப்பவில்லை. சொந்த கட்சி ஆதரவும் டிரம்பிற்கு இல்லாத நிலையில் அவரால் வெள்ளை மாளிகை உரையையும் நிகழ்த்த முடியவில்லை.. இதனால் தோல்வி அடையும் பட்சத்தில் டிரம்ப் அதிபர் பதவியை விட்டு விலகுவதை தவிர வேறு வழியே இல்லை.