நீலம் vs சிவப்பு.. டிரம்ப்பால் பிளவுபட்டு நிற்கும் மக்கள்.. சிவில் வாரை நோக்கி செல்கிறதா அமெரிக்கா?
நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்போ, பிடனோ யார் வெற்றிபெற்றாலும் சரி.. அமெரிக்காவிற்குள் மக்கள் இடையே ஏற்பட்டு இருக்கும் பிளவை மட்டும் அவ்வளவு எளிதாக சரி செய்துவிட முடியாது. சிவில் வாருக்கு பின் அமெரிக்காவில் மிகப்பெரிய பிளவு மக்கள் இடையே ஏற்பட்டுள்ளது.
1860.. அமெரிக்காவின் தெருக்கள் தீ பற்றி எரிந்த சமயம். தெற்கு - வடக்கு என்று அமெரிக்க மாகாணங்கள் அடித்துக் கொண்ட காலம் அது. அடிமைத்தனத்தை ஆதரித்தும், எதிர்த்தும் மக்கள் இரண்டு பிரிவாக பிரிந்து அடித்துக் கொண்ட காலகட்டம் அது.
1860ல் ஆபிரஹாம் லிங்கன் அதிபர் ஆனவுடன் அடிமைத்தனத்தை ஒழிப்பேன் என்று குரல் கொடுத்தார். இதை எதிர்த்த தென்மாகாண மக்கள் போராட்டத்தில் குதிக்க அது அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய சிவில் வாராக மாறியது.

சிவில் வார்
அமெரிக்க அரசுக்கு எதிராக குடியரசு கட்சியின் முன்னாள் அதிபர் ஜேம்ஸ் பச்னன் மற்றும் 7 தெற்கு மாகாணங்கள் கடுமையான போராட்டத்தில் குதித்தது. அடிமைத்தனத்தை ஒழிப்பது.. எங்களின் அடிப்படை உரிமையை ஒழிப்பதற்கு சமம் என்று இந்த 7 மாகாணங்களில் இருக்கும் வெள்ளை இன அமெரிக்க மக்கள் போராட்டத்தில் இறங்க.. அது உள்நாட்டு போராக மாறியது.

4 வருடம்
மொத்தம் 4 வருடங்கள் இந்த மோசமான சிவில் வார் நடந்தது. தற்போது அமெரிக்கா இதேபோல் ஒரு சிவில் வாரை எதிர்நோக்கி உள்ளது. 160 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அமெரிக்காவின் மக்கள் மிகப்பெரிய அளவில் தெற்கு - மேற்கு , சிவப்பு - நீலம், கறுப்பினத்தவர் - வெள்ளையர் என்று பிளவுபட்டு இருக்கிறார்கள். கடந்த 4 வருடமாக டிரம்ப் மெல்ல மெல்ல விதைத்து வந்த வெறுப்பு பிரச்சாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

விஸ்வரூபம்
டிரம்ப் தோல்வியை எதிர்கொண்டு இருக்கிறார். ஆனால் டிரம்போ அவரது ஆதரவாளர்களோ தோல்வியை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று டிரம்ப் பல முறை அறிவித்துவிட்டார். டிரம்ப் ஆதரவாளர்களும் தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்ள மறுத்து சாலையில் இறங்கிவிட்டனர். மொத்தமாக தேர்தல் முடிந்த பின் என்ன மாதிரியான மோதல்கள் வேண்டுமானாலும் ஏற்படலாம் என்று கூறுகிறார்கள்.

மோதலுக்கு காரணம்
டிரம்ப் இந்த தேர்தலில் தோல்வியை ஏற்றுக்கொள்ளாமல் போனால் அது பெரிய கலவரத்திற்கு கூட வழி வகுக்கும். அமெரிக்கா மீண்டும் நீலம் - சிவப்பு என்று பிரியும். அதேபோல் கறுப்பின மக்களுக்கு எதிராக நாளுக்கு நாள் வெள்ளையர்களின் ஆதிக்கம் அதிகமாகி வருவதால்.. கருப்பு - வெள்ளை மோதல் அதிகமாக ஏற்படும். டிரம்ப் தனக்கென்று உருவாக்கி வைத்து இருக்கும் மூர்க்கத்தனமான பின்தொடர்பாளர்களால் இந்த மோதல்கள் விஸ்வரூபம் எடுக்கும் என்கிறார்கள்.

தேர்தல்
அமெரிக்க தேர்தலின் போதும், தேர்தலுக்கு முன்பும், ஜார்ஜ் பிளாய்டின் கொலைக்கு எதிரான போராட்டத்தின் போதும் இந்த கறுப்பின - வெள்ளையர் மோதலுக்கான டிரைலரை அமெரிக்கா பார்த்துவிட்டது. அதிலும் டிரம்பின் ஆதரவாளர்கள் துப்பாக்கிகளோடு வாக்கு எண்ணும் மையம் முன் கூடி வருவது இந்த பதற்றத்தை அதிகரிக்க தொடங்கி உள்ளது.

முடியாது
டிரம்ப் தோல்வி அடைய வாய்ப்பே இல்லை.. அவர் தோல்வி அடைந்தால் அதற்கு முறைகேடு மட்டுமே காரணமாக இருக்கும் என்று டிரம்ப் ஆதரவாளர்கள் தீர்க்கமாக நம்புகிறார்கள். இதனால் டிரம்பின் தோல்வியை கண்டிப்பாக அவர்கள் ஏற்க வாய்ப்பே இல்லை. மீண்டும் வெள்ளை மாளிகை செல்ல டிரம்ப் எவ்வளவு தூரத்திற்கு வேண்டுமானாலும் செல்வார். இதனால்தான் அமெரிக்கா மீண்டும் ஒரு சிவில் வாரை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

டிசம்பர் மாதம்
தனது வெற்றியை தக்க வைக்க டிரம்ப் தனது ஆதரவாளர்களை தூண்டி விட கூட வாய்ப்புள்ளது. அதோடு டிசம்பர் மாதம் இரண்டாம் வாரம்.. தற்போது வெற்றிபெறும் அதிபரை உறுதி செய்ய வாக்கெடுப்பு நடக்கும். காங்கிரஸ் முன்னிலையில் தற்போது தேர்வான எலக்டர்கள் எல்லோரும் வாக்களிப்பார்கள். இதில் டிரம்ப் ஏதாவது மோசடி செய்வார், ஒவ்வொரு மாகாணத்திலும் தன்னுடைய கட்சியின் சார்பில் இவர் தோல்வி அடைந்த எலக்டர்களை கூட காங்கிரசுக்கு அனுப்ப வாய்ப்புள்ளது..எங்களின் எலக்டரல்தான் வென்றார் என்று டிரம்ப் உரிமை கோர வாய்ப்புள்ளது.

விடுவார்
எப்படியாவது இந்த தேர்தல் முடிவை மாற்ற டிரம்ப் முயல்வார் என்கிறார்கள். இதற்கு டிரம்பின் ஆதரவாளர்களும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரவு தெரிவிக்க வாய்ப்புள்ளது. இதனால்தான் அமெரிக்கா எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது மிகப்பெரிய பிளவை சந்தித்துள்ளது என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 2021 ஜனவரியில் புதிய அதிபர் பதவி ஏற்கும் வரை.. அமெரிக்காவில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று அரசியல் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications