கவுண்டமணி - செந்தில் லாட்டரி காமெடி மாதிரியே.. அமெரிக்காவில் நடந்த ருசிகர சம்பவம்!
நியூயார்க்: தான் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ரூ.72.68 லட்சம் பரிசு விழுந்தது தெரியாமல், அந்த சீட்டை பெண் ஒருவர் தூக்கி வீசிய சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.
மணிவாசம் இயக்கத்தில் செல்வா, கஸ்தூரி நடிப்பில் கடந்த 1993ம் ஆண்டு வெளியான படம் ராக்காயி கோயில். அந்த படத்தில் வரும் கவுண்டமணி செந்தில் காமெடி காட்சிகள் சூப்பர் டூப்பர் ஹிட். அதிலும் குறிப்பாக அந்த லாட்டரி சீட்டு காமெடி இன்றளவும் மீம்ஸ் மேக்கர்களின் ஆதர்ச டெம்பிளேட்.
அந்த காட்சியில் முடி திருத்தும் தொழிலாளியான கவுண்டமணி ஊர் பெரியவரான விஜயகுமாருக்கு சேவிங் செய்து கொண்டிப்பார். அப்போது அங்கு வரும் செந்தில், கவுண்டமணி வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ரூ.15 லட்சம் பரிசு விழுந்திருப்பதாக கூறி ஆச்சரியப்படுத்துவார். மகிழ்ச்சியில் திழைக்கும் கவுண்டமணி, விஜயகுமாருக்கு முழுமையாக சேவிங் செய்யாமல் பாதியிலேயே கிளம்பி விடுவார். வீட்டுக்கு செல்லும் வழியில் தனது சவரப் பெட்டியை செந்திலின் கட்டாயத்தின் பேரில் ஆற்றில் வீசி விடுவார்.

காமெடி
"நான் ஒரு லட்சாதிபதி... என் வீடு இப்டி இருக்கலாமா.. இந்த தெரு என்ன விலை.. இந்த ஊர் என்ன விலை...", என ஓவர் டயலாக் பேசுவார். கடைசியில் அவரது மனைவி அந்த லாட்டரி சீட்டை ஆற்றில் தூக்கி வீசப்பட்ட சவரப் பெட்டியில் தான் வைத்திருந்திருப்பார். அது ஆற்றோடு போனது தெரிந்ததும் நொந்துபோய்விடுவார். பின்னர் வழக்கம் போல் செந்திலை பின்னியெடுப்பார்.

அமெரிக்க சம்பவம்
இந்த கவுண்டமணி செந்தில் காமெடி போலவே ஒரு சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. மாசசூசெட்ஸ் மாகாணத்தை சேர்ந்த லியோ ரோஸ் பிகா எனும் பெண் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் (அதாவது இன்றைய இந்திய மதிப்புபடி ரூ.72,68,290) பரிசு சீட்டை ஒரு கடையில் இருந்து வாங்கியுள்ளார். வேலைக்கு செல்லும் அவசரத்தில் இருந்த அவர் அந்த லாட்டரியை முழுமையாக சுரண்டி பார்க்காமல் அரைகுறையாக பார்த்துவிட்டு கடைகாரரிடமே தூக்கி வீசிவிட்டு சென்றுவிட்டார்.

பரிசு
சுமார் 10 நாட்கள் அந்த லாட்டரி சீட்டு அந்த கடைகாரரின் கல்லாப் பெட்டி அருகிலேயே கிடந்திருக்கிறது. கடை உரிமையாளரின் மகன் கண்ணில் அந்த லாட்டரி சீட்டு எதேர்ச்சையாக பட்டிருக்கிறது. அவர் அந்த சீட்டை எடுத்து முழுமையாக சுரண்டி பார்த்தபோது தான் பிகாவுக்கு ரூ.72.68 லட்சம் பரிசு விழுந்திருப்பது தெரிந்தது.

நேர்மைக்கு பாராட்டு
பிகா தங்கள் கடைக்கு நீண்டகாலமாக வரும் வாடிக்கையாளர் என்பதால் அவரை ஏமாற்ற விரும்பாத கடை உரிமையாளர், பிகாவை தேடிச் சென்று விஷயத்தை கூறி லாட்டரி சீட்டை ஒப்படைத்திருக்கிறார். இதனால் அளவற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளார் பிகா. இதைக் கேள்விப்பட்ட லாட்டரி சீட்டு நிறுவனம், கடை உரிமையாளரின் நேர்மைக்கு பரிசாக கூடுதல் கமிஷன் தொகையை அளித்து பாராட்டியிருக்கிறது.

கூடுதல் அன்பளிப்பு
அதுமட்டுமின்றி தனது பங்கிற்கு ஒரு கூடுதல் தொகையை கடைகாரருக்கு அன்பளிப்பாகத் தந்திருக்கிறார் பிகோ. அதுபோக, மீதமுள்ள பரிசுப் பணத்தை வங்கியில் போட்டு வைத்து, தனது ஓய்வூதிய திட்டத்துக்கு பயன்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கவுண்டமணி கதை போல் இல்லாமல், கைநழுவிய லாட்டரி சீட்டு மீண்டும் பிகாவின் கைகளில் வந்து விழுந்தது உண்மையிலேயே அவரது அதிர்ஷ்டம் தான்.












Click it and Unblock the Notifications