ஜனநாயகம் குறித்து எங்களுக்கு யாரும் பாடம் நடத்த வேண்டாம்.. ஐ.நா.வில் இந்தியா 'பொளேர்' பதில்
நியூயார்க்: ஜனநாயகம் குறித்து இந்தியாவுக்கு யாரும் பாடம் எடுக்க வேண்டிய அவசியமில்லை என்று ஐ.நா.வுக்கான இந்திய நிரந்தரத் தூதர் ருச்சித்ரா கம்போஜ் தெரிவித்தார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் டிசம்பர் மாதத்துக்கான தலைவராக இந்தியா சார்பில் ருச்சித்ரா கம்போஜ் பொறுப்பேற்ற நிலையில், இந்தக் கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் காஷ்மீர் விவகாரம், சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பேச்சுகள் உள்ளிட்ட விவகாரங்களை மையப்படுத்தி சர்வதேச தளங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், ருச்சித்ரா கம்போஜின் இந்த பதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
எமெர்ஜென்சி காலத்தில் ஜனநாயகம் காக்க போராடிய முக்கிய படைவீரர் முலாயம் சிங் - பிரதமர் மோடி இரங்கல்
இந்தியா மீதான விமர்சனங்கள்
சமீபகாலமாக, இந்தியா மீது பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள் சர்வதேச தளங்களில் சில குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன்வைத்து வருகின்றன. காஷ்மீரில் மனித உரிமை மீறல் நடைபெறுவதாகவும், இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரங்கள் அதிகரித்து வருவதாகவும் அந்நாடுகள் தெரிவிக்கின்றன. ஐ.நா.விலும் முன்பு இதுபோன்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதற்கு இந்தியா சார்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.
பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்படுகிறதே..
இந்நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் டிசம்பர் மாதத்துக்கான தலைவராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த தலைவர் பதவியில் இந்தியா சார்பில் ருச்சித்ரா கம்போஜ் நேற்று பொறுப்பேற்றார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், "இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்படுவதாக கூறப்படுகிறதே.." எனக் கேள்வியெழுப்பட்டது. அதற்கு பதிலளித்து ருச்சித்ரா கம்போஜ் கூறுகையில், "உலகிலேயே முதன்முறையாக நாகரீக வளர்ச்சி அடைந்த நாடு இந்தியா தான் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.
ஜனநாயகத்துக்கு முக்கியத்துவம்
ஜனநாயகம் என எடுத்துக்கொண்டால் இந்தியாவில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே அதன் வேர் இருக்கிறது. இந்தியா எப்போதுமே ஜனநாயகத்துக்கு முக்கியத்துவம் அளித்து வரும் நாடாக இருக்கிறது. இது இப்போதும் தொடர்கிறது.. எதிர்காலத்திலும் தொடரும். இதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஜனநாயகத்தின் நான்கு தூண்களாக கருதப்படும் நாடாளுமன்றம், சட்டங்களை செயல்படுத்தும் அமைப்புகள், நீதித்துறை மற்றும் பத்திரிகைத் துறை ஆகியவை இந்தியாவில் முழுமைப்படுத்தப்பட்டுள்ளன. அவை சுதந்திரமாக இயங்க வழிவகை செய்யப்பட்டுள்ளன.
"யாரும் பாடம் எடுக்க வேண்டாம்"
அவ்வளவு ஏன்.. சமூக வலைதளங்கள் கூட இந்தியாவில் சுதந்திரமாக இயங்குகின்றன. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜனநாயகத் திருவிழாவாக கருதப்படும் தேர்தல் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்தை தெரிவிக்க நாங்கள் அனுமதிக்கிறோம். எனவே, ஜனநாயகம் குறித்து இந்தியாவுக்கு யாரும் சொல்லத் தர வேண்டியதில்லை" இவ்வாறு ருச்சித்ரா கம்போஜ் கூறினார்.