நேரு சொன்னதை.. மேற்கோளிட்டு பேசிய நியூயார்க் மேயர் மமதானி! என்ன சொல்லியிருக்காருன்னு பாருங்க!
நியூயார்க்: நியூயார்க் நகர மேயர் தேர்தலில் இடதுசாரி ஆதரவாளராக அறியப்படும், ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோஹ்ரான்மம்தானி வெற்றி பெற்றிருக்கிறார். வெற்றியையடுத்து நியூயார்க் மக்களிடையே பேசிய அவர், ஜவஹர்லால் நேருவின் வார்த்தகளை மேற்கோளிட்டு பேசியுள்ளார்.
நேற்றிரவு நடந்த வெற்றி விழாவில் அவர் பேசியதாவது, "நண்பர்களே, நாம் குடும்ப அரசியலை வீழ்த்திவிட்டோம். ஆண்ட்ரூ கியூமோவுக்கு வாழ்த்துகள். ஆனால் இன்று அவரது பெயரை உச்சரிக்கும் கடைசி நாளாக இருக்கும். ஒரு சிலருக்கு மட்டும் பலனளித்து, பலரை புறக்கணிக்கும் அரசியலுக்கு நாம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறோம். இன்று இரவு நியூயார்க் மக்கள் ஒருதலைப்பட்சமான அரசியலுக்கு முற்றுப்புற்றி வைத்துவிட்டார்கள்.

நியூயார்க் மக்கள் சாத்தியமற்றதை சாத்தியமாக்கலாம் என்ற நம்பிக்கைக்கு இடமளித்ததாலேயே நான் வெற்றி பெற்றிருக்கிறேன். அரசியல் நமக்கு ஏதாவது செய்யும் என்று எதிர்பார்த்திருந்த காலம் மாறியிருக்கிறது. அரசியலுக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று இறங்கி அதிகாரத்தை கைப்பற்றியிருக்கிறோம்.
உங்கள் முன் நின்று கொண்டிருக்கும் நான், ஜவஹர்லால் நேருவின் வார்த்தைகளை எண்ணிப் பார்க்கிறேன். வரலாறு ஒரு அரிதான தருணத்தில், பழையதில் இருந்து புதியதுக்குள் காலடி எடுத்து வைக்கும், ஒரு சகாப்தம் முடிந்து, நீண்டகாலமாக ஒடுக்கப்பட்ட மக்களின் கோபம் வெளிப்படும். இன்று இரவு, நாம் பழையதை விட்டு புதியதில் அடியெடுத்து வைத்துள்ளோம்" என்று கூறியுள்ளார்.
அமெரிக்கா முழுவதும் பின்பற்றக்கூடிய பொருளாதார கொள்ளை வித்தியாசமானது. இதனை முதலாளித்துவ பொருளாதார கொள்கை என்று கூறுவார்கள். இந்த கொள்கைகளை பின்பற்றும் நாடுகளில் மானியம், இடஒதுக்கீடு, பாதிக்கப்பட்டவர்களுக்கான முன்னுரிமை, பொதுத்துறை நிறுவனங்கள் போன்றவை மற்ற நாடுகளுடன் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருக்கும். இப்படி இருக்கையில்தான் மாற்று பொருளாதார கொள்கைகளை முன்வைத்தார் மம்தானி.
நியூயார்க் நகரத்தில் வீட்டு வாடகை உயர்த்தப்படாது, பேருந்து போன்ற பொது போக்குவரத்து அதிகரிக்கப்படும், அடுத்த 10 ஆண்டுகளில் 1 லட்சம் புதிய வீடுகளை கட்டி அவற்றை வாடகைக்கு விடுவது, மளிகை பொருட்களின் விலையை கட்டுப்படுத்துவது, குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிப்பது என மக்களின் வாழ்வாதாரத்தை எளிதாக்கும் சமூக பொருளாதார வாக்குறுதிகளை கொடுத்திருந்தார். கார்ப்பரேட் நிறுவனங்கள் மீதான வரியை 9% லிருந்து 11.5% ஆக உயர்த்துவதன் மூலமும், பெரும் பணக்காரர்களுக்கு 2% வரியை விதித்து இதற்கான நிதியை திரட்டுவது என்று புதிய பொருளாதார கொள்கையை முன்வைத்திருந்தார்.
இது ஒரு காலத்தில் காங்கிரஸ் முன்வைத்த கொள்கைகளை போன்றே இருப்பததாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். பொதுத்துறையை பலப்படுத்துவது, தனியார் துறையை பயன்படுத்திக்கொள்வது, தொழிலாளர் நலன்கள், சமூக நலன்களில் அக்கறை செலுத்துவது போன்றவை காங்கிரஸின் இடதுசாரி பாணி சிந்தனை என்றும் கூறுகின்றனர். இந்தியாவில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பாஜக, நேருதான் எல்லாவற்றிற்கும் காரணம் என்று தொடர்ந்து விமர்சித்து வருகிறது. ஆனால், தற்போது நியூயார்க் மேயர் நேருவின் கருத்துக்களை மேற்கோளிட்டு பேசியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.












Click it and Unblock the Notifications