+2 கணித தேர்வில் மாணவர்களுக்கு உதவி.. காட்டிக்கொடுத்த கேமரா!உதகையில் சிக்கிய 5 அலுவலர்கள் சஸ்பெண்ட்
நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை அருகே பிளஸ் 2 கணித தேர்வில் மாணவர்களுக்கு உதவி செய்ததாக எழுந்த புகாரில் விசாரணை நடத்திய கல்வித்துறை அதிகாரிகள் 5 அலுவலர்களை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர். வகுப்பறையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவின் அடிப்படையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நடந்து முடிந்துள்ளது. பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 13ல் தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி முடிவடைந்தது. தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களை போல் நீலகிரி மாவட்டத்திலும் பிளஸ் 2 தேர்வு எழுதும் மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
நீலகிரி மாவட்டத்தை பொறுத்தமட்டில் மொத்தம் 41 மையங்களில் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். மொத்தம் 7 ஆயிரத்து 440 பேர் தேர்வு எழுதினர். தேர்வை முறைகேடு ஏதுமின்றி நடத்தும் வகையில் 44 முதன்மை கண்காணிப்பாளர்கள், 44 துறை அலுவலர்கள் உள்பட 700க்கும் அதிகமானவர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அதோடு மாவட்டம் முழுவதும் 69 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு திடீரென்று தேர்வு மையங்களில் சோதனைகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் தான் உதகையை அடுத்த மஞ்சூர் பகுதியில் காமராஜர் அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியிலும் தேர்வு மையம் அமைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் தான் கடந்த மாதம் 27 ம் தேதி கணித தேர்வு நடந்தது. அப்போது மாணவ-மாணவிகளுக்கு விடை எழுத சிலர் உதவியதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து நீலகிரி முதன்மை கல்வி அலுவலர் முனியசாமி தலைமையிலான குழு விசாரணை நடத்தியது. கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது மாணவர்களுக்கு உதவி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து விசாரணை குழு பள்ளி கல்வித்துறைக்கு அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையை ஆய்வு செய்த பள்ளி கல்வித்துறை 5 கல்வி அலுவலர்களை சஸ்பெண்ட் செய்துள்ளது. அதன்படி கணித தேர்வின்போது கண்காணிப்பாளராக பணியாற்றிய ராதாகிருஷ்ணன், வழித்தட அலுவலர் சீனிவாசன், செந்தில், தேர்வு அறை கண்காணிப்பாளர்களாக பணியாற்றிய ராம்கி, மூர்த்தி உள்ளிட்டவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
***