வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ஒரு மாத குட்டி யானை.. பத்திரமாக மீட்ட வனத்துறையினர்!
நீலகிரி: நீலகிரி மாவட்டம் மசினகுடி வனப்பகுதி அருகே உள்ள ஆற்றில் அடித்து செல்லப்பட்ட ஒரு மாதமே ஆன குட்டி யானையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். தற்போது அந்த யானையை தாய் யானையுடன் சேர்க்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருவதால் பல இடங்களில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியையொட்டி அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்திலும் தொடர் மழை பெய்து வருகிறது.
சில நாட்கள் மழை குறைந்த நிலையில் மீண்டும் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால், அப்பகுதியில் உள்ள நீர் வீழ்ச்சிகள் மற்றும் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதேபோல் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு, பாறைகளும், மரங்களும் சாய்ந்து விழுந்த வண்ணம் உள்ளது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மழையினால் மனிதர்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அங்குள்ள வன விலங்குகளும் பாதிக்கப்பட்டு வருகின்றன.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி வனப்பகுதியில் ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் அந்த வனப்பகுதியில் உள்ள ஒரு குட்டி யானை ஒன்று தண்ணீர் குடிப்பதற்காக ஆற்றில் இறங்கிய போது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. தாய் யானையுடன் வந்து கொண்டிருந்த போது ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக குட்டி யானை நிலைகொள்ள முடியாமல் ஆற்றில் அடித்து செல்லப்பட்டுள்ளது.
யானை-மனித எதிர்கொள்ளல்: பாதுகாப்பில் பெரிய பிரச்னையாக உருவெடுத்து வருவது ஏன்?
ஆற்றில் குட்டி யானை அடித்து செல்லப்படுவதை பார்த்த ஒருவர் இது குறித்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் குறிப்பிட்ட பகுதிக்கு விரைந்து வந்த வனத்துறையினர் அந்த யானையின் தாய் யானை அருகில் நிற்கிறதா என பார்த்தனர். கண்ணுக்கு எட்டிய தூரம் யானை தென்படாததால், தொடர்ந்து வனத்துறையினர் ஆற்றில் இறங்கி குட்டி யானையை மீட்க முயன்றனர். அந்த யானை சேற்றில் சிக்கியதாக தெரிகிறது.
இதையடுத்து குட்டி யானையை பத்திரமாக மீட்ட வனத்துறையினர் யானைக்கு உணவு வழங்கினர். அந்த குட்டி யான பிறந்து ஒரு மாதமே இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தன. மேலும் அந்த யானையை அதன் தாயுடன் சேர்பதற்காக தாய் யானையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ''தாய் யானையுடன் அந்த குட்டி யானை வந்திருக்கும். அப்போது தண்ணீர் குடிப்பதற்காகவோ அல்லது ஆற்றை கடப்பதற்கான முயற்சியில் குட்டியானை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம்" என்றனர்.