3 தலைமுறைகளாக மின்சாரமின்றி தவித்த பழங்குடியின மக்கள்! ஸ்டாலின் போட்ட ஒரே உத்தரவில் கிடுகிடு மாற்றம்
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கடந்த 3 தலைமுறைகளாக மின்சாரமின்றி தவித்த பழங்குடியின கிராமம் ஒன்றுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட ஒரே உத்தரவால் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்ட நிர்வாகம் மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்துக்கு இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டதை அடுத்து மளமளவென மின் இணைப்பு வழங்கும் பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன.
மின் இணைப்புகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் ராமச்சந்திரனிடம் குரும்பர் இன மக்கள் தங்கள் நன்றியை முதலமைச்சருக்கு தெரியப்படுத்துமாறு கூறியுள்ளனர்.
நீலகிரி,குமரியில் இடி மின்னலுடன் வெளுத்து வாங்கப்போகும் மழை..ரெயின் கோட் அவசியம்
நீலகிரி மாவட்டம்
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ளது பர்ளியாறு ஊராட்சி. இந்த ஊராட்சிக்குட்பட்ட சேம்புக்கரை கிராமமானது அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. அங்கு 40க்கும் மேற்பட்ட குரும்பர் இன குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த மூன்று தலைமுறைகளாக மின்சாரம் என்றால் என்னவென்றே தெரியாமல் வாழ்ந்து வந்த அந்த மக்கள் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தங்கள் குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என மனு கொடுத்தனர்.
அடர்ந்த வனப்பகுதி
இவர்கள் வசிப்பது அடர்ந்த வனப்பகுதி என்பதால் அங்கு மின் இணைப்பு கொடுப்பது பற்றி மின் வாரிய அதிகாரிகள் ஆரம்பத்தில் யோசித்துள்ளனர். மின் கம்பங்களை நடுவது உள்ளிட்ட பணிகளில் உள்ள நடைமுறைச் சிக்கல்களால் தயங்கியுள்ளனர். இதனிடையே இது குறித்த விவரத்தை முதலமைச்சர் ஸ்டாலின் அலுவலகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றது நீலகிரி மாவட்ட நிர்வாகம். இதையடுத்து இது குறித்து அறிந்த முதலமைச்சர் ஸ்டாலின் குரும்பர் இன மக்கள் குடியிருப்புகளுக்கு மின் இனைப்பு வழங்கியாக வேண்டும் என ஒரு உத்தரவு போட்டார்,
வேகமாக நடந்த பணிகள்
அதுவரை யோசித்தும், தயங்கியும் நின்ற அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும், முதல்வர் போட்ட உத்தரவுக்கு பிறகி சிட்டாய் பறந்து பணிகளை செய்து முடித்தது. இப்போது ஒரு வழியாக சேம்புக்கரை கிராமத்தில் அடர்ந்த வனப்பகுதியில் வசித்து வரும் 40 குரும்பர் இன மக்களின் குடியிருப்புகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுவிட்டன. 3 தலைமுறைகளாக கேட்டும் கிடைக்காத மின்சாரத்தை முதல்வர் ஸ்டாலின் தனது ஒரே உத்தரவால் வழங்கியது கவனிக்கத்தக்கது.
முதல்வருக்கு நன்றி
இதனிடையே குரும்பர் இன மக்களின் குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் ராமச்சந்திரனிடம், அரசுக்கும், முதலமைச்சருக்கும் தங்கள் நன்றியை தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.