மக்களுக்கு வழங்கயிருந்த 4,500 விலையில்லா கோழிக்குஞ்சுகள்... அலேக்காக தூக்கிய தேர்தல் அதிகாரிகள்!
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னுர் பகுதியில் பொதுமக்களுக்கு வழங்க இருந்த 4,500 விலையில்லா கோழிக்குஞ்சுகளை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கவே இந்த கோழிக்குஞ்சுகள் கொண்டுவரப்பட்டன.தேர்தல் விதிமுறை மீறல் என்பதால் திருப்பி அனுப்பி விட்டோம் என்று கால்நடைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் இதை மறுத்துள்ள அப்பகுதியை சேர்ந்த எதிர்க்கட்சியினர், ஆளுங்கட்சியினர் வேண்டுமென்றே இதை பொதுமக்களுக்கு வழங்க கொண்டு வந்ததாக குற்றம்சாட்டியுள்ளனர்.

தேர்தல் பறக்கும் படை கண்காணிப்பு
தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் ஒருமாதமே உள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் ஏற்கனவே அமலுக்கு வந்து விட்டன. இதில் பொது மக்களுக்கு பணம் பரிசு பொருள்கள் மற்றும் விலையில்லா பொருட்களை வழங்கக் கூடாது என்பதும் அடங்கியுள்ளது. பொதுமக்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

4,500 கோழிக்குஞ்சுகள் பறிமுதல்
இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னுர் பகுதியில் விலையில்லா கோழிக்குஞ்சுகளை வீடு வீடாக வழங்கி வருவதாக தேர்தல் அதிகாரிகளுக்கு எதிர்க்கட்சியினர் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அங்கு விரைந்து சென்று ஆய்வு செய்த தேர்தல் அதிகாரிகள் 4,500 கோழிக்குஞ்சுகளை பறிமுதல் செய்து பண்ணைகளுக்கே திருப்பி அனுப்பி வைத்தனர்.

ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள்
ஆளுங்கட்சியினர் சார்பில் வாக்காளர்களுக்கு வழங்கவே இவை கொண்டுவரப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ''ஒரு குடும்பத்திற்கு 25 கோழிக்குஞ்சுகள் வீதம், ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கவே இந்த கோழிக்குஞ்சுகள் கொண்டுவரப்பட்டன.தேர்தல் விதிமுறை மீறல் என்பதால் திருப்பி அனுப்பி விட்டோம் என்று கால்நடைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

எதிர்க்கட்சியினர் வேண்டுகோள்
ஆனால் இதை மறுத்துள்ள அப்பகுதியை சேர்ந்த எதிர்க்கட்சியினர், ஆளுங்கட்சியினர் வேண்டுமென்ற இதை பொதுமக்களுக்கு வழங்க கொண்டு வந்ததாகவும் தற்போது கால்நடைத்துறை அதிகாரிகள் இதனை மாற்றி பேசுவதாகவும் குற்றம்சாட்டினார்கள். விதிகளை மீறி மக்களுக்கு இலவசமாக கோழிக்குஞ்சுகளை வழங்க முயற்சித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.












Click it and Unblock the Notifications