கர்நாடகா குக்கர் குண்டு வெடிப்பு..தமிழக எல்லைகள் உஷார்..தீவிரமடையும் வாகன சோதனை
நீலகிரி: கர்நாடகாவில் நிகழ்ந்த குக்கர் குண்டுவெடிப்பு சம்பவம் எதிரொலியாக தமிழக- கர்நாடக எல்லையான ஓசூரில் இருக்கக்கூடிய ஜூஜூவாடி பகுதியில் தமிழக போலீசார் கர்நாடகாவில் இருந்து தமிழக நோக்கி வரக்கூடிய வாகனங்கள் அனைத்தையும் பலத்த சோதனைக்கு உள்ளாக்கி வருகின்றனர். நீலகிரியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கேரளா தமிழக கர்நாடகா எல்லையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் கடலோர பகுதியில் அமைந்துள்ள மங்களூருவில் சனிக்கிழமை மாலை ஆட்டோ திடீரென வெடித்துச் சிதறியது. ஆட்டோவில் இருந்த இரண்டு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கர்நாடகா மாநில காவல்துறையினர், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல், தேசிய புலனாய்வு துறையின் அதிகாரிகளும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மங்களூர் ஆட்டோ குக்கர் குண்டுவெடிப்பு- பயங்கரவாதியின் தமிழக கூட்டாளிகள் யார்? வலைவீசி தேடும் என்.ஐ.ஏ
பயங்கரவாத செயல்
கர்நாடக டிஜிபி பரிவீன் சூட் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "இப்போது உறுதியாகி விட்டது. ஆட்டோ வெடிப்பு எதிர்பாராத விதமாக நடந்த வெடி விபத்து இல்லை. கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நடந்த பயங்கரவாதச் செயல் என்று பதிவிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் கர்நாடக மாநில காவல்துறையினர், மத்திய அமைப்புகளுடன் இணைந்து, இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது என்று பதிவிட்டுள்ளார்.
தீவிரமடையும் விசாரணை
மங்களூரு காவல்துறை ஆணையர் சசிகுமாரும், உயர் போலீஸ் அதிகாரிகரும் குண்டு வெடித்த நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அத்துடன் ஆட்டோவில் வெடித்த சிதறிய வெடிகுண்டு பொருட்களையும் தடயவியல் நிபுணர்கள் கைப்பற்றி விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். பயங்கரவாத செயல் என விசாரணையில் தெரியவந்துள்ளதால் பதற்றம் உருவாகியுள்ளது. குண்டுவெடிப்பில் காயமடைந்த 2 பேர் மட்டுமின்றி, மேலும் 2 பேரையும் பிடித்து கர்நாடகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
என்ஐஏ விசாரணை
கோயம்புத்தூரில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்துடன் இச்சம்பவம் ஒத்துப்போனதால் அந்த கோணத்திலும் என்ஐஏ அதிகாரிகளும், கர்நாடக போலீசாரும் விசாரித்து வருகின்றனர்.
போலி பெயரில் வலம் வந்த நபர்
ஆட்டோவில் நடந்த குக்கர் குண்டு வெடிப்பில் காயமடைந்த பயணியின் பெயர் மோகன் குமார் என்று முதலில் கூறப்பட்டது. அது குறித்து மேற்கொண்ட விசாரணையில், அது போலி பெயர் என்பது உறுதியானது. அவனின் உண்மையான பெயர் முகமது ஷாரிக்,24 குக்கர் குண்டுவெடிப்பின் முக்கிய குற்றவாளியாக இவன் கருதப்படுகிறான். சில மாதங்களுக்கு முன் ஷிவமொக்காவில் நடந்த குண்டுவெடிப்பு முன்னோட்டத்திலும் இவன் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
எங்கெங்கு பயணம்
முகமது ஷாரிக், ஷிவமொக்கா மாவட்டத்தில் உள்ள தீர்த்தஹள்ளியை சேர்ந்தவன் என்று கூறப்படுகிறது.
மேலும், கோயம்புத்தூர், கேரளா ஆகிய இடங்களுக்கும் இவன் பயணம் செய்துள்ளான் என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆட்டோ டிரைவரும், ஷாரிக்கும் சுயநினைவின்றி சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு சுயநினைவு திரும்பிய பிறகே முழு விவரமும் தெரியவரும் என்று போலீசார் கூறினர்.
உதகையில் சிம் கார்டு
முகமது ஷாரிக் பயன்படுத்திய செல்போன் சிம்கார்டு, போலி ஆதார் கார்டு மூலம் வாங்கப்பட்டு உள்ளது. ஊட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த வாலிபரின் பெயரில் இந்த ஆதார் கார்டு உள்ளது. எனவே, அவரை கோவைக்கு அழைத்து வந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், வட இந்தியாவை சேர்ந்த ஒருவர் தனது ஆதார் கார்டு திருடப்பட்டு உள்ளதாக புகார் அளித்துள்ளார். எனவே, இந்த சம்பவத்தின் ஆணி வேர் எங்கே இருக்கிறது என்பதை கண்டு பிடிக்கும் முயற்சியில், பல்வேறு மாநில போலீசாரின் உதவியுடன் என்ஐஏ விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
போலி ஆதார் காட்டுகள்
ஆட்டோவில் நடந்த குக்கர் குண்டு வெடிப்பில் காயம் அடைந்துள்ள முகமது ஷாரிக், மைசூரு, லோக நாயகன நகர் 10வது கிராசிலுள்ள ஒரு வீட்டில் ஒரு மாதத்திற்கு முன்னர் வாடகைக்கு வசித்துள்ளான். வீட்டு உரிமையாளரிடம் செய்த ஒப்பந்தத்தில் அவன் பெயர் மோகன் குமார் என உள்ளது. ஹூப்பள்ளி அவனது சொந்த ஊர் என்று கூறப்படுகிறது. அவன் வசித்த அறையில் 2 ஆதார் கார்டுகள், பான் கார்டு, குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்படும் சர்க்யூட் போர்டு, போல்டு, பேட்டரி, அலுமினியம், மல்டி மீட்டர், மின்சார வயர்கள், குக்கர் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த 2 ஆதார் கார்டுகளும் போலியானவை என தெரிய வந்துள்ளது.
செல்போன் சிக்னல்கள்
முகமது ஷாரிக்கின் செல்போன் சிக்னல்களை வைத்து விசாரித்து வரும் போலீசாருக்கு பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. கடந்த 2 மாதங்களில் கோயம்புத்தூர் மட்டுமின்றி, கேரளா உள்ளிட்ட வெவ்வேறு பகுதிகளுக்கு சாரிக் பயணித்துள்ளான். கோவை சிங்காநல்லூரில் இவன் 15 நாட்கள் தங்கியுள்ளான். இந்த இடங்களுக்கு ஏன் சென்றான் என்பது குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
தீவிர வாகன சோதனை
இதனிடையே தமிழக கர்நாடாக எல்லையான ஜூஜூவாடி, நீலகிரி மாவட்டத்திலும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு நீலகிரி மாவட்டத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதே போல கேரளா தமிழக எல்லைப்பகுதியான புளியறையிலும் வாகன சோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது.