கொடநாடு கொலை வழக்கு.. கனகராஜ் சகோதரர் தனபால் ஜாமீன் மனு தள்ளுபடி.. தீவிர விசாரணை
ஊட்டி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைது செய்யபட்டு கூடலூர் கிளை சிறையில் உள்ள கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் உறவினர் ரமேஷ் ஆகியோரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கொடநாடு கொலை, கொள்ளை சதி திட்டம் குறித்து இவர்கள் இருவருக்கும் தெரிந்திருந்தும் போலீஸ் விசாரணையின் போது மறைத்ததாலும், கனகராஜின் செல்போன் பதிவுகளை அழித்ததாலும் இருவரையும் கடந்த மாதம் 25-ந்தேதி தனிபடை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 2ம் தேதி இருவரும் ஜாமீன் கோரி உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இன்று அந்த மனு விசாரணைக்கு வந்தது.

சாட்சியங்களை கலைக்க வாய்ப்பு
ஆனால், தனபால் மற்றும் ரமேஷ் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கினால் மற்ற சாட்சிகளை கலைக்க வாய்ப்பு உள்ளதாகவும் இது வரை கனகராஜின் வீட்டில் இருந்து 3 செல்போன்கள் மற்றும் 6 சிம்கார்டுகளை கைப்பற்றபட்டு இருப்பதால், மேலும் விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் ஜாமீன் வழங்க கூடாது என்று அரசு தரப்பில் வாதிடபட்டது.

தள்ளுபடி
மேலும் கோடநாடு கொலை கொள்ளை காரணமாக, தனபால் மற்றும் ரமேஷை போல மேலும் சிலரை விசாரிக்க வேண்டி உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து தனபால் மற்றும் ரமேஷின் ஜாமீன் மனுவை மாவட்ட நீதிபதி சஞ்ஜை பாபா தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

புதிய தகவல்
இதனிடையே, போலீசார் இதுவரை நடத்திய விசாரணையில் புதிய தகவல் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொடநாடு கொள்ளை முடிந்ததும் சேலத்துக்கு வந்த கனகராஜுக்கு ரமேஷம் தனபாலும் சேர்ந்து புதிய செல்ஃபோனை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். அந்த செல்ஃபோனை கனகராஜின் மரணத்திற்குப் பிறகு ரமேஷ் வைத்திருந்துள்ளார் என்றும் அதைப் போலீசார் கைப்பற்றியிருக்கிறார்கள் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

செல்போன்
கொடநாடு கொள்ளை நடந்தபிறகு புதிய செல்போனில் கனகராஜ் யாரையெல்லாம் தொடர்புகொண்டுள்ளார் என்ற எலக்ட்ரானிக் தகவல்களைப் போலீசார் திரட்டி, அதை வைத்தும் ரமேஷிடம் விசாரணையை நீட்டித்து வருவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications