நீலகிரியில் புரோட்டீன் பவுடரை சாப்பிட்டு அவலட்சணமாய் போன முகம்.. குன்னூர் நிகழ்வில் திடீர் திருப்பம்
ஊட்டி: நீலகிரி மாவட்டம் குன்னூரில், அதிமுக நகர மன்ற உறுப்பினர் குருமூர்த்தியின் மகன் ராஜேஷ் கண்ணா ஜிம்மில் வழங்கப்பட்ட புரோட்டின் பவுடரால் அலர்ஜி ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சல் காரணமாக உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.. இந்த சம்பவம் நீலகிரியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், தற்போது போலீசார் இதுசம்பந்தமான விசாரணையை துரிதமாக நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர், அட்டடி பகுதியைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. அதிமுகவை சேர்ந்த இவர் தற்போது குன்னூர் நகர மன்றத்தின் உறுப்பினராகப் பதவி வகித்து வருகிறார்.

நீலகிரி - குன்னூர்
கோத்தகிரியில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார் இவரது 17 வயது மகனான மகன் ராஜேஷ் கண்ணா.. இவர் குன்னூர் மவுண்ட் ரோட்டில் சிவக்குமார் (35) என்பவர் நடத்தி வந்த ஜிம்மில் சேர்ந்து கடந்த சில நாட்களாகவே உடற்பயிற்சி மேற்கொண்டு வந்திருக்கிறார்.
அப்போது உடல் எடையை கூட்டவும், கட்டுகோப்பான உடற்கட்டை பெறவும் ஜிம் மாஸ்டர் புரோட்டின் பவுடர் எடுத்து கொள்ள வேண்டும் என்று சொல்லி ரூ.4 ஆயிரம் மதிப்பிலான புரோட்டின் பவுடரை வாங்க வைத்துள்ளார். அந்த புரோட்டின் பவுடரை சாப்பிட ஆரம்பித்ததிலிருந்தே ராஜேஷ்கண்ணாவின் முகத்திலும், உடம்பிலும் ஏராளமான கொப்புளங்கள் வர துவங்கிவிட்டது..
ராஜேஷ் கண்ணா - ஜிம்
இதனால் ராஜேஷ் கண்ணாவின் உருவமே மாறிவிட்டது., தான் மிகவும் அவலட்சணமாக காட்சி அளிப்பதாக நினைத்த, ராஜேஷ்கண்ணா கடந்த 1ம் தேதி வீட்டில் யாருமில்லாதபோது, தீக்குளிக்க முயற்சித்துள்ளார்.. இதனால் உடம்பெல்லாம் நெருப்பு பற்றி அலறியிருக்கிறார்.. இதைப்பார்த்து கதறிய பெற்றோர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கடுமையான தீக்காயங்களுக்கு தீவிர சிகிச்சை தந்தபோதும், கடந்த 12ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உருவமே மாறியது
உடற்பயிற்சிக் கூடத்தில் வழங்கப்பட்ட புரோட்டின் பவுடர் ஏற்படுத்திய ஒவ்வாமையின் காரணமாகவே ராஜேஷ் கண்ணா தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் சொல்லும்போது, "தற்கொலை செய்து கொண்ட ராஜேஷ் கண்ணா 2023ம் ஆண்டில் இருந்து குன்னூர் மவுன்ட் ரோட்டில் உள்ள ஜிம் ஒன்றில் உடற்பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். ஜிம்மில் வழங்கப்பட்ட புரோட்டின் பவுடரை உட்கொண்டு வந்த காரணத்தால் சருமத்தில் கடுமையான அலர்ஜி ஏற்பட்டுள்ளது. முகம் மற்றும் உடலில் ஏற்பட்ட பாதிப்புகளால், வெளியில் சகஜமாக நடமாட முடியாமல் தவித்து வந்துள்ளார்.
புரோட்டீன் பவுடரால் அவலட்சணம்
இதனால், மன உளைச்சலுக்கு ஆளாகி தவறான முடிவை எடுத்திருக்கிறார். உரிய விசாரணை நடத்தி ஜிம் உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் 4 நாட்களுக்கு முன்பு கூறும்போது, "ஜிம்மில் தந்த புரோட்டின் பவுடரை எந்த அளவில் எடுக்க வேண்டும்? எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது குறித்தும் மருத்துவ நிபுணர்களிடம் கேட்டறிந்து வருகிறோம். போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்ததுமே, அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.
திடீர் திருப்பம் - குருமூர்த்தி தந்த புகார்
இந்நிலையில் திடீர் திருப்பமாக ராஜேஷ் கண்ணாவின் அப்பா குருமூர்த்தி, தன்னுடைய மகன் சாப்பிட்டு வந்த புரோட்டீன் பவுடர் குறித்து டாக்டர்களிடம் விசாரித்துள்ளார்..
அப்போது, உடலில் அதிக அளவு புரோட்டின் சேர்ந்துவிட்டால் பல்வேறு உபாதைகளை ஏற்படுத்தும் என்பது தெரியவந்துள்ளது.. இதைக்கேட்டு அதிர்ந்துபோன குருமூர்த்தி, தன்னுடன் மகன் மரணம் குறித்து குன்னூர் போலீசில் புகார் செய்துள்ளார்.., இதையடுத்து, தற்கொலைக்கு தூண்டியதாக ஜிம் மாஸ்டர் சிவக்குமார் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.. ஆனால் ஜிம் மாஸ்டரை காணவில்லை.. தலைமறைவாக உள்ளதால் அவரை தீவிரமாக குன்னூர் போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications