ஊட்டியில் பழங்குடியின பெண்கள் நடத்தும் பெட்ரோல் பங்க்.. தமிழகத்திலேயே முதல்முறை!.. சபாஷ்!
நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் தமிழகத்திலேயே முதல்முறையாக பழங்குடியின பெண்கள் நடத்தும் பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் தோடர், கோத்தர், இருளர், குறும்பர், காட்டு நாயக்கர், பயனியர் போன்ற ஆறு வகையான பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் அனைவருமே விவசாயம் மற்றும் குடிசைத் தொழிலை மட்டுமே பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.

வாழ்வாதாரம்
இந்நிலையில் பழங்குடியின பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி பழங்குடியின ஆராய்ச்சி மையம் மூலம் தமிழகத்திலேயே முதல் முறையாக நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள எம்.பாலடா பகுதியில் பழங்குடியின பெண்கள் மட்டுமே நடத்தும் பெட்ரோல் பங்க் தொடங்கப்பட்டது.

12 பேர்
இதில் ஒவ்வொரு பழங்குடியின வகுப்பில் இருந்தும் இரண்டு பேர் என மொத்தம் பன்னிரண்டு பேர் சுழற்சி முறையில் 8 மணி நேரமாக பிரித்து பணி செய்து வருகின்றனர். இந்த பெட்ரோல் பங்க் ஊராட்சி ஒன்றிய பகுதியில் இருப்பதால் நகர்புறத்தை விட பெட்ரோல் 87 பைசாவும், டீசல் 60 பைசாவும் குறைவாக உள்ளது.

பழங்குடியின நலத் துறை
இதனால் எம்.பாலடா பகுதியில் உள்ள 60க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் பயன் பெறுகின்றனர். இது குறித்து பழங்குடியின ஆராய்ச்சி மையத்தினர் கூறுகையில் மத்திய பழங்குடியின அமைச்சகம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் இத்திட்டம் தொடங்கப்பட்டு பழங்குடியின பெண்கள் முன்னேற்றத்திற்காகவும் தொடங்கப்பட்டது.

ஊதியம்
இதன் மூலம் ஈட்டும் வருமானம் ஊதியம் போக மீதி ஆறு வகையான பழங்குடியின மக்களின் மேம்பாட்டு நலனிற்காக பயன்படுத்தப்படும் என்கிறனர். இது போல் பெண்கள் வாழ்வாதாரத்தை முன்னேற்றிக் கொள்ள இது போன்ற பல நல்ல திட்டங்களை தமிழகம் முழுவதும் தொடங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications