நொய்டா கொலைகள்... பூட்டிய வீட்டில் பெண் வக்கீல் - அபார்ட்மெண்ட் நடுவே இளம் பெண் சடலம்
நொய்டாவில் அடுக்குமாடி குடியிருப்பிற்கு இடையே இருந்த இடைவெளியில் கிடந்த இளம் பெண்ணின் சடலத்தை தேசிய பேரிடர் மீட்புப்பணியினர் மீட்டுள்ளனர்.
நொய்டா: அடுத்தடுத்த மரணங்களால் நொய்டாவில் பீதி அதிகரித்துள்ளது. பலாத்கார கொலைகள் அதிகரித்து வருகின்றன. தனியாக இருக்கும் மூத்த பெண்களுக்கும் பாதுகாப்பற்ற நிலைதான் உள்ளது. பூட்டிய வீட்டிற்குள் பெண் வக்கீலின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அடுக்குமாடி குடியிருப்பின் சந்துக்குள் இளம் பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நொய்டாவில் அமரப்பலி என்ற 120 அடி உயரம் கொண்ட 2 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. மிகப்பெரிய அந்த அபார்ட்மெண்டுக்கு இடையே இளம் பெண்ணின் சடலம் இருந்துள்ளது.
உயிரிழந்த பெண் பீகார் மாநிலத்தின் கத்தியார் பகுதியைச் சேர்ந்தவர் 19 வயதுடைய அந்த இளம் பெண்ணின் பெயர் சோனாமுனி என்பதாகும். அமரப்பலி சிலிக்கான் சிட்டி அடுக்குமாடி குடியிருப்பில் பணியாற்றி வந்த அந்தப்பெண்ணை கடந்த 28ஆம் தேதி முதல் காணவில்லை என்று அந்த பெண்ணை வேலைக்கு அமர்த்தியிருந்தவர் புகார் அளித்திருந்தார்.
இந்த நிலையில் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டு பிளாக்குகளுக்கும் இடையே உள்ள சிறிய கேப்பில் இருந்து கடுமையான நாற்றம் வருவதை அறிந்து எட்டிப் பார்த்தனர். அப்போது ஒரு சடலம் சிக்கியிருக்கவே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரால் சடலத்தை மீட்க முடியவில்லை காரணம் குடியிருப்பின் 12வது மாடியில் அது சிக்கியிருந்தது. இதனையடுத்து தேசிய பேரிடர் மீட்புப்படையினருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக வந்த மீட்புப் படையினர் இயந்திரங்களின் மூலம் நீண்ட நேரம் போராடி பெண்ணின் சடலத்தை மீட்டனர். அப்போதுதான் அது காணாமல் போன பணிப் பெண் சோனாமுனியின் சடலம் என அடையாளம் காணப்பட்டது. உடல் முழுவதும் காயங்கள் இருந்துள்ளன. அந்த பெண் தடுக்கு விழுந்தாரா? தற்கொலையா? கொலையா என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பூட்டிய அறைக்குள் பெண் கொலை
இதே போல நொய்டாவில் பூட்டிய வீட்டில் பெண் வக்கீல் ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். சடலமாக மீட்கப்பட்ட அந்த பெண்ணின் பெயர் குல்ஜித் கவுர் என்பதாகும். 60 வயதான அந்த பெண்மணி வழக்கறிஞர். அவரது கணவர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். நொய்டாவில் 31ஆம் நம்பர் வீட்டில் தனியாக வசித்து வந்த அவரது வீட்டின் கதவு கடந்த செவ்வாய்கிழமை முதல் திறக்கவேயில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசில் புகார் கொடுத்தனர்.
போலீஸ் உதவியிடன் வீட்டின் பூட்டை உடைத்து பார்த்த போது வாயில் துணி கட்டப்பட்ட நிலையில் அவர் மரணமடைந்திருந்தார். சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யும் போது சத்தம் கேட்காமல் இருப்பதற்காக வாயில் துணியை வைத்து அடைத்துள்ளர்.
ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான நவ்ஜோத் சிங் என்பவரை திருமணம் செய்திருந்தார். சொத்தில் பங்கு வேண்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. குல்ஜித் கவுர் மரணமடைவதற்கு ஒரு வாரத்திற்கு முன்புதான் இளம் தம்பதியரை வேலைக்கு அமர்த்தியிருந்தனர். அவர்களையும் கடந்த ஒருவாரமாகவே காணவில்லை. அதே நேரத்தில் அவர்களின் கார் மட்டும் வீட்டில் இருந்துள்ளது.
சொத்துக்காக குல்ஜித்தின் கணவரே வீட்டு வேலைக்காக வந்த தம்பதியினரின் உதவியுடன் இந்த கொலையை செய்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகமடைந்துள்ளனர். வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. நொய்டாவில் அடுத்தடுத்து பெண்கள் மர்மமான முறையில் மரணமடைவது மக்களிடையே பீதியை அதிகரித்துள்ளது.