பாஜகவின் செயல்பாடுகளுக்கும் இந்து மதத்திற்கும் தொடர்பே இல்லை- பாரிசில் சரமாரியாக பேசிய ராகுல் காந்தி
பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மத்தியில் ஆளும் பாஜகவையும் அதன் கொள்கைகளையும் சரமாரியாக தாக்கி பேசினார்.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில், பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள INALCO பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாடிய ராகுல் காந்தி, இந்தியாவின் அரசியல் நிலவரம், பாஜகவின் செயல்பாடுகள் ஆகியவற்றை கடுமையாக சாடி பேசினார். ராகுல் காந்தி பேசியதாவது:-

இந்தியாவில் ஆளும் அரசு அதிகாரத்திற்காக எந்த விலையையும் கொடுக்க தயாராக இருக்கிறது. 40 வருடங்களில் இல்லாத வகையில் வேலையின்மை விகிதம் மிக அதிகளவில் உயர்ந்துள்ளது. இந்து என்று பாஜக சொல்லும் எவையும் உண்மையில் இந்து மதத்தில் இல்லை. தங்களை விட பலவீனமானவர்களை துன்புறுத்த வேண்டும் என இந்து மதத்தில் சொல்லப்படவில்லை.
ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் செயல்பாடுகளுக்கும் இந்து மதத்திற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. கீதையை நான் படித்து விட்டேன். என்னிடம் பல உபநிடதங்கள் உள்ளன. பல இந்து புத்தகங்களை படித்து விட்டேன். நாட்டில் மிகப்பெரிய அளவில் சமத்துவமின்மை நிலவுகிறது.
ஆட்சி அதிகாரம் பட்டியலினத்தை சேர்ந்தவருக்கு எந்த இடமும் வழங்கப்படுவதில்லை. பட்டியலினத்தோர், ஒபிசி, சிறுபான்மை, பழங்குடியினர் ஒடுக்கப்படுகின்றனர். எந்த விலை கொடுத்தாவது அதிகாரத்தை கைப்பற்றி ஆதிக்கம் செலுத்த வேண்டும் என நினைக்கின்றனர். நாட்டின் ஜனநாயக கட்டமைப்பை பாதுகாப்பதற்கான போராட்டம் தொடரும். என்று கூறினார்.
தொடர்ந்து மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த ராகுல் காந்தி கூறியதாவது:- நாட்டில் 60 சதவீத மக்கள் எதிர்க்கட்சிகளுக்குதான் வாக்களித்து இருக்கிறார்கள். வெறும் 40 சதவீதத்தினர் மட்டுமே ஆளும் அரசுக்கு வாக்களித்துள்ளனர். எனவே பெரும்பான்மை சமூகம் பாஜகவிற்கு வாக்களித்தது என்ற சிந்தனை தவறானது. பெரும்பான்மை சமூகம் உண்மையில் பாஜகவை விட எங்களுக்கே அதிக வாக்குகளை அளித்துள்ளது.
இந்தியா - பாரத் விவகாரத்தை பொறுத்தவரை அரசியல் அமைப்பில் இந்தியா, பாரத் என இரண்டுமே உள்ளது. மாநிலங்களின் ஒன்றியம் இந்தியா அதாவது பாரதம் என இடம் பெற்றுள்ளது. எனவே, இந்த மாநிலங்கள் ஒருங்கிணைந்து இந்தியா அல்லது பாரதத்தை அமைத்துக் கொள்ளலாம். முக்கியமான விஷயம் என்னவென்றால் அனைத்து மாநிலங்களின் குரல்களையும் கேட்க வேண்டும். எந்த ஒரு குரலையும் ஒடுக்கவோ நசுக்கவோ கூடாது" என்றார்.












Click it and Unblock the Notifications