Cat-டுக்கு Gate போட்ட உலக நாடுகள்.. ரஷ்யாவை எப்படி மடக்கியிருக்காங்க பாருங்க!
பாரீஸ்: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதனால் ரஷ்யாவின் பூனைகளுக்கு கேட் போட்டு தடுத்துள்ளது சர்வதேச பூனைகள் கூட்டமைப்பு.
Recommended Video
உக்ரைன் மீது ரஷ்யா 10வது நாளாக போர் புரிந்து வருகிறது. அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பையும் மீறி ரஷ்ய அதிபர் விலாடிமிர் உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை தொடர்ந்து வருகிறார்.
இதனால் உக்ரைனில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கட்டடங்கள் மீது ஏவுகணை, குண்டு வீசப்படுகிறது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்கின்றனர். அங்கு படித்து வரும் இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.

ரஷ்யா மீதான தடைகள்
உக்ரைன் மீதான போர் நடவடிக்கையை கண்டித்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பல்வேறு வகைகளில் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது. பிற நாடுகளில் உள்ள ரஷ்ய சொத்துகள், நிறுவனங்கள் முடக்கப்பட்டுள்ளன. மேலும் விளையாட்டு துறையிலும் ரஷ்யா முடக்கப்பட்டுள்ளது. அதாவது அந்த நாட்டின் வீரர்கள் ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சர்வதேச ஜூடோ கூட்டமைப்பின் கவுரவ தலைவர் பதவியும் விலாடிமிர் புதினிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது.

பூனைகளுக்கு தடை
இந்நிலையில் தான் பொருளாதாரம், விளையாட்டு துறை தடைகளை தாண்டி ரஷ்யாவின் பூனைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ள வினோதம் அரங்கேறியுள்ளது. இதுதொடர்பாக சர்வதேச பூனைகள் கூட்டமைப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில், ‛‛உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதை அறிந்து அதிர்ச்சியடைகிறோம். இதனால் உக்ரைனை சேர்ந்த ஏராளமான அப்பாவி மக்கள் உயிரிழக்கின்றனர். 1000க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். உயிரை காத்து கொள்ள பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

மே 31 வரை நீடிப்பு
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் ஏற்க முடியாதது. இதை கண்டிக்கும் வகையில் சர்வதேச பூனை கூட்டமைப்பின் கண்காட்சியில் பங்கேற்க ரஷ்ய பூனைகளுக்கு மே மாதம் 31 வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ரஷ்யாவின் பூனை பயிற்சியாளர்களும் விலக்கி வைக்கப்பட்டுள்ளனர். தடை உத்தரவில் ஏதேனும் மாற்றம் வந்தால் பின்னர் தெரிவிக்கப்படும்'' என கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்ய பூனைகள் கண்காட்சியில் பங்கேற்க முடியாத நிலை உருவாகி உள்ளது.

உதவிக்கரம்
மேலும். ‛‛உக்ரைன் நாட்டில் உள்ள பூனைகள் வளர்ப்போர், கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு நிதி உதவி செய்யப்படும். உக்ரைன் பிரச்சனையால் உதவிக்கரம் நீட்டி வரும் போலாந்து, ருமேனியா, ஹங்கேரி, ஸ்லோவாகியா, மால்டோவா நாட்டினருக்கு நன்றி'' எனவும் சர்வதேச பூனைகள் கூட்டமைப்பு கூறியுள்ளது.

கூட்டமைப்பின் பின்னணி
இந்த சர்வதேச பூனைகள் கூட்டமைப்பானது 1949ம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டில் துவங்கப்பட்டது. மார்குரிட் ராவெல் என்பவரை கூட்டமைப்பு நிறுவினார். தற்போது 39 நாடுகளை சேர்ந்த 41 பூனை சங்கங்கள் கூட்டமைப்பில் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கின்றன. ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான பூனைகள் கண்காட்சியை சர்வதேச கூட்டமைப்பு நடத்துகிறது. அமெரிக்க, ஐரோப்பிய, ஆசிய நாடுகளில் இருந்து பூனைகள் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications