நெருங்கும் பிரதமர் தேர்தல்.. பாஜகவின் அடித்தளத்தையே அசைத்த பீகார்! “மோடி 3.O” அரசமைவதில் 4 சிக்கல்
பாட்னா: 2024 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், பீகாரில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியில் பிளவு ஏற்பட்டு நிதீஷ் குமார் - தேஜஸ்வியுடன் இணைந்து இருப்பது தேசிய அரசியலில் எந்த வகையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை விரிவாக காண்போம்.
2017 ஆம் ஆண்டு ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணியை முறித்துக்கொண்டு பாஜக ஆதரவோடு ஆட்சியை தொடர்ந்த நிதீஷ் குமார், 2020 தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். அதில், ஐக்கிய ஜனதா தளம் கட்சி 45 இடங்களில் மட்டுமே வென்றது.
பாஜக 77 தொகுதிகளில் வெற்றிபெற்றது. மறுபக்கம் காங்கிரஸ் இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேஜஸ்வி யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் 79 இடங்களில் வென்று அதிர்ச்சி கொடுத்தது. ஆனாலும் நிதீஷ் குமாரை முதலமைச்சராக்கி கூட்டணியில் அங்கம் வகித்தது பாஜக.

புறக்கணிப்பு
இந்த நிலையில் பாஜகவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் நிதீஷ் குமார். இதனை தொடர்ந்து பிரதான எதிர்க்கட்சியாக இருந்த தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகியவை நிதீஷ் குமாருக்கு ஆதரவளிக்க முன்வந்தன. உடனே முதலமைச்சர் பதவியை விட்டு விலகிய நிதீஷ் குமார் ஆர்.ஜே.டி., காங்கிரஸ் ஆதரவுடன் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார். தேஜஸ்வி யாதவ் துணை முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
பீகார் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதுடன், 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மோடி ஆட்சியை தொடர்வதில் 4 சிக்கல்களை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.

1. மதவாத அரசியல்
குறிப்பாக கடந்த 2019 தேர்தலில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி 40-ல் 39 இடங்களில் வென்றது. அதற்கு முன்பாக பாஜக அரசு மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் புல்வாமா தாக்குதல் வெற்றிக்கான ஒரு காரணமாக பார்க்கப்பட்டது. இந்தியாவில் பாகிஸ்தானுக்கு எதிரான அரசியல் பாஜகவுக்கு கைகொடுத்ததைபோல் இஸ்லாமியர்கலுக்கு எதிரான அரசியல் அதிகம் உதவவில்லை. குறிப்பாக உத்தரப்பிரதேசத்தைபோல் பீகாரில் பாஜகவால் இதன் மூலம் சாதிக்க முடியவில்லை.

2. கூட்டணி
உத்தரப்பிரதேச ஃபார்முலா பீகாரில் வெற்றிபெறாததால் பாஜக மாநில கட்சிகளை நம்பியே இருக்கிறது. ஆனால், தற்போது அக்கட்சி ஐக்கிய ஜனதா தளத்துடனும் பகைத்துக் கொண்டுள்ளது. லாலு பிரசாத் மீதான மாட்டுத்தீவன ஊழல் வழக்கு போன்றவற்றால் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தோடும் அக்கட்சி சேர்வதற்கான வாய்ப்புகள் இல்லை. லோக் ஜனசக்தி கட்சியை உடைத்து சிராக் பாஸ்வானுடனும் பகையை சம்பாதித்து இருக்கிறது பாஜக. 2024 ஆம் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், பீகாரின் 40 தொகுதிகள் தேர்தல் முடிவையே புரட்டிப்போட வாய்ப்புள்ளது.

3. பிற்படுத்தப்பட்டோர்
இந்தியாவில் அதிக சதவீதத்தில் வாழும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மக்களை சுற்றியே அரசியல் இயங்குகிறது. பிரதமர் நரேந்திர மோடியும் தன்னை ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த தலைவராகவே காட்டிக்கொண்டார். நிதீஷ் குமாரும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் தலைவராகவே உள்ளார். இந்த சூழலில் நிதீஷ் குமார் உடனான பிளவு பாஜகவின் பிற்படுத்தப்பட்டோர் வாக்கு வங்கியை சரிவடைய செய்வதுடன் ஆர்.ஜே.டி. - ஜேடியு கூட்டணிக்கு கூடுதல் பலத்தை ஏற்படுத்தும்

4. எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கை
தொடர்ந்து வெற்றிகளை மட்டுமே பாஜக பார்த்துக்கொண்டிருக்க மறுபக்கம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் அரசியல் தொய்வடைந்து வருகிறது. பாஜக ஆட்சியை இழக்கும் முதல் பெரிய மாநிலமாக பீகார் உள்ளது. இந்த ஆட்சி மாற்றம் எதிர்க்கட்சிகளுக்கு புதிய எழுச்சியை அளித்து இருக்கிறது. மோடிக்கு மாற்றான ஒரு தலைவரை தேடும் இந்திய மக்கள் மத்தியில் எதிர்க்கட்சியின் முகமாக இருப்பது யார் என்ற கேள்வி உள்ளது. தற்போது பீகார் அரசியல் மாற்றங்கள் இதற்கான விடையாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications