அய்யோ அம்மா விட்டுவிடுங்க..கதறி துடித்த திருடன்.. ரயிலில் 10 கிமீ தொங்கவிட்ட பயணிகள்.. பரவும் வீடியோ
பாட்னா: பீகாரில் ரயில் புறப்படும் போது ஜன்னல் ஓரத்தில் அமர்ந்தவரிடம் இருந்து பிளாட்பாரத்தில் நின்றபடி நைசாக செல்போனை பறிக்க முயன்ற திருடனை 10 கிலோ மீட்டர் தூரம் ரயில் வெளியே தொங்கவிட்ட சம்பவம் தற்போது சமூக வலைத்தளத்தில் டிரெண்டாகி வருகிறது.
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற பாடல் மிகவும் பிரபலம்.
இது நூற்றுக்கு நூறு உண்மையும் கூட... ஏனென்றால் எத்தனை சட்டங்கள் போட்டு திருடர்களை பிடித்தாலும் இன்றளவும் திருட்டு சம்பவங்கள் நீடித்து கொண்டேதான் இருக்கின்றன.
பதை பதைக்கும் தண்டனை
அதுவும் தற்பொதெல்லாம் தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்டதால், அந்த தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அதன் மூலமாகவும் திருட்டில் ஈடுபடுகின்றனர். அப்படி கைதேர்ந்த திருடர்களும் அதிகளவில் பெருகிவிட்டனர் என்றே சொல்லலாம். அப்படி ஒருசில நேரங்களில் திருட்டில் ஈடுபட்டு மாட்டிக்கொள்பவர்களை போலீசில் பிடித்து கொடுப்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால் பீகாரில் ரயிலில் செல்போன் திருட முயன்ற ஒரு திருடனை கையும் களவுமாக பிடித்த பயணிகள், அவனுக்கு கொடுத்த தண்டனை தற்போது பதை பதைக்க வைத்துள்ளது.
செல்போன் திருட முயற்சி
பீகாரின் பெகுசராரி நகரிருந்து காகாரியாவுக்கு பயணிகள் ரயில் வந்து கொண்டிருந்தது. திருடர்கள் நடமாட்டம் இந்த ரயில் நிலையங்களில் அதிகம் என்று சொல்லப்படுகிறது. இப்படிதான் நேற்று சஹேப்புர் கமல் ரயில் நிலையத்தில் ரயில் நின்றது. அப்போது பயணி ஒருவரின் செல்போனை ஜன்னலுக்கு வெளியே பிளாட்பார்மில் நின்ற ஒரு திருடன் லாவகமாக திருட முயற்சித்து இருக்கிறான். மெதுவாக ஜன்னலின் வழியே கையை விட்டு செல்போனை எடுக்கவும், ஏதோ நடப்பதை அறிந்த அந்த பயணி உஷாராகி திரும்பினார்.
கையை கெட்டியாக பிடித்துக்கொண்ட பயணி
அப்போது திருடன் செல்போனை திருட முயன்றதை பார்த்து திடுக்கிட்டு அப்படியே திருடனின் கையை இறுக்கமாக அந்த பயணி பிடித்துக்கொண்டார். இதை சற்றும் எதிர்பாராத திருடன் தப்பிக்க முயற்சித்து கையை இழுத்தான். ஆனால் அந்த பயணி கையை கெட்டியாக பிடித்துக்கொண்டார். ரயிலும் அந்த நிலையத்தில் இருந்து நகரத்தொடங்கியது. இதனால் எப்படியும் பயணி விட்டு விடுவார் என்று நினைத்த அந்த திருடனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
கையை விடுமாறு கதறல்
அந்த பயணி திருடனின் கையை விடவே இல்லை... திருடனும் கையை ரயிலின் வேகத்திற்கு பிளாட்பார்மில் ஓடிக்கொண்டு கையை இழுக்க முயற்சித்தான். இதற்கிடையே பிளாட்பாரம் முடிய தொடங்கியதாலும், ரயில் வேகமாக செல்ல ஆரம்பித்ததாலும் கையை விடுமாறு பயணியிடம் திருடன் மன்றாடினான். ஆனால் கொஞ்சமும் அசராத அந்த பயணி கையை கெட்டியாக பிடித்துக்கொண்டார். இதனால் பயந்து போன திருடன் மற்றொரு கையால் ரயில் ஜன்னல் கம்பியை பிடித்தான்.
மன்னித்துவிடுங்கள்.. விட்டுவிடுங்கள்..
அப்போது அவரது மற்றொரு கையையும் சக பயணிகள் பிடித்துக்கொண்டனர். இதனால் ரயில் ஜன்னலில் கையை விட்ட படி வெளியே அந்தரத்தில் தொங்கிக்கொண்டு வந்த திருடன்.. ஐயா தெரியாமல் பண்ணிட்டேன்... மன்னித்துவிடுங்கள்.. என்னை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சி கரைகிறார். வலி ஒருபக்கம், உயிர் பயம் ஒருபக்கம் என அஞ்சி அலறிய திருடன் அய்யோ அம்மா என்னை விட்டு விடுங்கள் என கூச்சல் இட்டான். ஆனால், பயணிகள் கொஞ்சமும் இரக்கம் காட்டவில்லை.
தொங்கியபடியே 10 கி.மீ பயணம்
பெட்டியின் வெளியே தொங்க விட்ட படி 10 கி.மீட்டர் திருடனை தவிக்க விட்டனர். பின்னர் அடுத்த ரயில் நிலையத்தில் பயணிகள் அவனை விடுவித்தனர். விட்டதும் தான் தாமதம் அப்பாடா? உயிர் பிழைத்தோம் என்று எண்ணி ஓட்டம் பிடித்தான்.. சிறிது நேரத்தில் அங்கிருந்து ஓடி மறைந்துவிட்டான். திருடன் கைகளை கெட்டியாக பிடித்துக்கொண்டு அவன் கீழே விழுந்துவிடாமல் அவனது உயிருக்கு ஆபத்தின்றி.. ஒவ்வொரு நிமிடமும் திக் திக் என திருடன் மனதில் பயத்தை அந்த பயணிகள் விதைத்தனர்.
நெட்டிசன்கள் கிண்டல்
தற்போது திருடன் ரயிலில் தொங்கிக்கொண்டு உயிர் பயத்தில் கெஞ்சும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. செல்போன் திருட முயற்சித்து இப்படி மாட்டிக்கொண்ட இந்த திருடனின் கதறல்களை பார்த்து நெட்டிசன்கள் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர். எனினும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்ததாக தெரியவில்லை.