பீகார்: நிதிஷ்குமார் வசம் உள்துறை; நிதி அமைச்சராக பாஜகவின் தர்கிஷோர் பிரசாத்!
பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வசம் உள்துறையும் துணை முதல்வர்களில் ஒருவரான தர்கிஷோர் பிரசாத்துக்கு நிதி அமைச்சகமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
பீகார் முதல்வராக 4-வது முறையாக நிதிஷ்குமார் நேற்று பதவியேற்றார். அவருடன் 14 அமைச்சர்களும் பதவியேற்றனர். பாஜகவில் 7 பேர், ஜேடியூவில் 5, கூட்டணி கட்சிகள் சார்பில் 2 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
இதனையடுத்து இன்று அமைச்சரவை இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி முதல்வர் நிதிஷ்குமார் வசம் உள்துறை இலாகா, பொது நிர்வாகம், லஞ்ச ஒழிப்பு ஆகியவை தற்போது இருக்கும்.

பாஜகவுக்கு நிதி துறை
மூத்த பாஜக தலைவரும் துணை முதல்வர்களில் ஒருவருமான தர்கிஷோர் பிரசாத்திடம் நிதி அமைச்சகம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வனத்துறை, தகவல் தொழில்நுட்பத் துறை, பேரிடர் மேலாண்மை மற்றும் நகர்ப்புற இலாகாக்களும் தர்கிஷோர் பிரசாத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

துணை முதல்வர் ரேணு தேவி
மற்றொரு துணை முதல்வரான ரேணு தேவியிடம் பஞ்சாயத்து ராஜ் இலாகா கொடுக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர் மேம்பாடு, தொழில்துறை, மிக மிக பிற்படுத்தப்பட்டோர் நலன் ஆகிய இலாகாக்களும் ரேணு தேவியிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

மஞ்சி மகன் இலாகா
முன்னாள் முதல்வர் மஞ்சியின் மகன் சந்தோஷ் மஞ்சிக்கு சிறு நீர்ப்பாசன திட்டங்கள், எஸ்சி, எஸ்டி நலத்துறை வழங்கப்பட்டிருக்கிறது. மற்றொரு கூட்டணி கட்சித் தலைவரான முகேஷ் சஹானியிடம் கால்நடைத்துறை அமைச்சகம் தரப்பட்டுள்ளது.

கல்வித்துறை இலாகா
ஜேடியூ மூத்த தலைவரான முன்னாள் சபாநாயகர் விஜய் சௌத்ரிக்கு ஊரக வளர்ச்சித் துறை, நீர்வளத்துறை, தகவல் ஒலிபரப்பு துறை கொடுக்கப்பட்டுள்ளது. ஜேடியூவின் பிஜேந்திர யாதவுக்கு உணவுத் துறை, மதுவிலக்குத் துறை அளிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சராக ஜேடியூவின் மேவாலால் செளத்ரி, பாஜகவின் மங்கள் பாண்டே சுகாதாரத் துறை அமைச்சராக இருப்பர். வருவாய்த்துறை அமைச்சராக பாஜகவின் ராம் சுரத், சுற்றுலாத்துறை அமைச்சராக ஜிவேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications