5 மாநில தேர்தல்தான் முக்கியமா? காங்கிரஸை வெளுத்த நிதிஷ்குமார்! “இந்தியா” கூட்டணிக்கு ”கொள்ளி”?
பாட்னா: லோக்சபா தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் கட்சி அக்கறை செலுத்தாமல் 5 மாநில தேர்தலில் மட்டுமே மூழ்கிக் கிடக்கிறது; இந்தியா கூட்டணி பற்றி காங்கிரஸ் கவனம் செலுத்தவில்லை என ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஆர்ஜேடி மூத்த தலைவரும் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் இருவரும்தான் இந்தியா முழுவதும் பயணம் செய்து அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்து "இந்தியா" கூட்டணியை கட்டமைத்தனர். இதனால் காங்கிரஸ் கட்சியும் மறுவாழ்வு பெற்றது. பாட்னா, பெங்களூர், மும்பை நகரங்களில் அடுத்தடுத்து "இந்தியா" கூட்டணி கூட்டங்கள் நடந்தன.

தற்போது 5 மாநில தேர்தல்களில் "இந்தியா" கூட்டணி என்பது இல்லாமலேயே போய்விட்டது. "இந்தியா" கூட்டணி கட்சிகளுடன் இணக்கான தொகுதி பங்கீட்டை மேற்கொள்ள காங்கிரஸ் முன்வரவில்லை. இதனால் இந்தியா கூட்டணியில் இருந்தாலும் சமாஜ்வாதி கட்சி, இடதுசாரிகள் தனித்தனியே போட்டியிடுகின்றன.
இந்த நிலையில் பீகாரில் இடதுசாரிகள் நடத்திய கூட்டம் ஒன்றில் பங்கேற்ற நிதிஷ்குமார், தேசத்தின் வரலாற்றை சிலர் மாற்ற முயலுகின்றனர். அந்த சக்திகளுக்கு எதிராக அனைவரும் ஒன்று திரள வேண்டிய தேவை உணர்த்தி அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்து இந்தியா கூட்டணியை அரும்பாடுபட்டு உருவாக்கினோம். பாட்னா, பெங்களூர், மும்பை கூட்டங்களுக்குப் பின்னர் இந்தியா கூட்டணியில் எந்த வித செயல்பாடுமே இல்லை.
அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் குறித்து காங்கிரஸுக்கு அக்கறை இல்லை. காங்கிரஸுக்கு முழு கவனமும் இப்போதைய 5 மாநில தேர்தலில்தான் இருக்கிறது. அனேகமாக 5 மாநில தேர்தல் முடிவடைந்த பின்னர் இந்தியா கூட்டணி தலைவர்களை காங்கிரஸ் அழைக்கக் கூடும் என காட்டமாக சாடினார் நிதிஷ்குமார்.
ஏற்கனவே இந்தியா கூட்டணி எங்கே இருக்கிறது என தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பி இருந்தார். இப்போது இந்தியா கூட்டணியை உருவாக்கிய நிதிஷ்குமாரே அந்த கூட்டணியின் எதிர்காலம் என்னவாகுமோ? என விரக்தியையும் கோபத்தையும் காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications