இந்தியாவுக்கு என்ன தேவையோ அதை பீகாரில் செய்திருக்கிறோம் -ஜேடியூவுடனான கூட்டணி குறித்து தேஜஸ்வி யாதவ்
பாட்னா: இந்தியாவுக்கு இப்போது என்ன தேவையோ அதைத்தான் நாங்கள் பீகாரில் செய்திருக்கிறோம் என்று அம்மாநில துணை முதல்வரும் ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
பீகாரில் பாஜகவுடனான கூட்டணியை ஜேடியூ முறித்துக் கொண்டது. பாஜக கூட்டணி அரசின் முதல்வர் பதவியில் இருந்தும் நிதிஷ்குமார் விலகினார். இதன் பின்னர் ஆர்ஜேடி-காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணியில் ஜேடியூ இணைந்தது.

ஆர்ஜேடி-காங்கிரஸ்- இடதுசாரிகள் ஆதரவுடன் நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராகி உள்ளார். ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், மீண்டும் துணை முதல்வராகி உள்ளார்.
பீகாரில் பாஜகவுக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரண்டுள்ளன. அரசியல் கட்சிகளின் இந்த முயற்சிக்கு பெரும்பாலான மாநில கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மே.வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஆகியோரும் இதனை வரவேற்றுள்ளனர்.
பீகார் அரசியல் மாற்றம் தொடர்பாக துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கூறியதாவது: வேலைவாய்ப்பின்மைக்கு எதிரான எங்கள் போராட்டம் தொடரும். ஏழைகள் மற்றும் இளைஞர்களின் வலி என்ன என்பதை நமது முதல்வர் நிதிஷ்குமார் உணர்ந்துள்ளார். ஏழைகள், இளைஞர்களுக்கு ஒரே மாதத்தில் பல வேலைவாய்ப்பு அறிவிப்புகளை முதல்வர் நிதிஷ்குமார் வெளியிட உள்ளார். இதற்கு முன்னர் இப்படியான ஒரு அறிவிப்பு வெளியாகவில்லை.
பீகார் மாநிலத்தில் மெகா கூட்டணி மிக வலிமையாக உள்ளது. பீகார் சட்டசபையில் பாஜக மட்டுமே ஒரே ஒரு எதிர்க்கட்சியாக உள்ளது. பாஜகவினரால் நாட்டில் மத மோதல்கள் உருவாக்கப்படுகின்றன. மாநில கட்சிகளை அழித்து ஒழிப்பதையே நோக்கமாக வைத்திருக்கிறது பாஜக. இவ்வாறு தேஜஸ்வி யாதவ் கூறினார்.
முன்னதாக பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறியதாவது: துணை ஜனாதிபதி பதவிக்கு நான் ஆசைப்பட்டதாக பாஜகவின் சுஷில் மோடி கூறியுள்ளார். அது முட்டாள்தனமானது. நகைச்சுவையாக இருக்கிறது. அப்படி ஒரு போதும் துணை ஜனாதிபதி பதவிக்கு நான் ஆசைப்பட்டதே கிடையாது. இவ்வாறு நிதிஷ்குமார் கூறினார்.
அதேபோல் 2024 லோக்சபா தேர்தலில் நிதிஷ்குமார் தம்மை எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த விரும்புகிறார்; அதனால்தான் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து புதிய ஆட்சி அமைத்துள்ளார் என்பதும் பாஜகவின் குற்றச்சாட்டு.












Click it and Unblock the Notifications