அந்தப் பக்கம் மருமகன்.. இந்தப் பக்கம் மாமனார்.. மாறி மாறி முன்னிலை.. கலகலக்கும் பீகார்!
தேஜ் பிரதாப் யாதவ் முன்னிலையில் உள்ளார்
பாட்னா: மாமனாரும், மருமகனும் ஆளுக்கு ஒரு தொகுதியில் மாறி மாறி முன்னிலை வகித்து வருகின்றனர். இவர்கள் இருவருமே ஜாம்பவான்கள் என்பதால் செய்தியாகியுள்ளனர்.
பீகாரில் உள்ள அரசியல் குடும்பங்களில் முக்கியமானது தாரகா ராய் குடும்பம். இந்தக் குடும்பத்தின் தாரகா ராய் முன்னாள் முதல்வர் ஆவார்... அவரது மகன் தான் சந்திரிகா ராய்.. இவர் வேறு யாருமல்ல. இன்னொரு பெரும் அரசியல் குடும்பமான லாலு பிரசாத் யாதவின் சம்பந்தி ஆவார்.
ஆமா, சந்திரிகா ராயின் மகள் ஐஸ்வர்யாவைத்தான் லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவுக்குக் கட்டிக் கொடுத்தனர். ஆனால் கட்டி கொடுத்தும் இருவரும் சந்தோஷமாக வாழவில்லை.. புருஷன் பொண்டாட்டிக்கு இடையே பெரும் சண்டை மூண்டது. ஐஸ்வர்யாவும் வீட்டை விட்டு போய் விட்டார்.

மோதல்
மகள் இப்படி வாழாவெட்டியானதால் பெரும் வருத்தமும் கோபமும் அடைந்தார் சந்திரிகா ராய். அதேபோல மாமனார் மீது தேஜ் பிரதாப் யாதவும் கோபமாகவே இருந்தார்.. இவர்களது மோதல் இந்த சட்டசபை தேர்தலில் பிரச்சார வடிவிலும் எதிரொலித்தது.

பிரச்சாரம்
சந்திரிகா ராய் பர்ஸா தொகுதியில் போட்டியிட்டார்.. தேஜ் பிரதாப் யாதவும் ஹசன்பூர் தொகுதியில் போட்டியிட்டார்... முழு பலத்துடன் களத்தில் இருந்தார்.. தீவிரமாக செலவும் செய்தார், பிரச்சாரமும் அனல் பறந்தது.. அதை விட முக்கியமாக பர்ஸா தொகுதிக்குப் போய் தனது மாமனாருக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்தார்.

லாலு
சந்திரிகா ராய் ஐக்கிய ஜனதாதளம் சார்பில் தேர்தல் களத்தில் இருந்தார். இவர் ஆறுமுறை எம்எல்ஏவாக இருந்து பழம் தின்று கொட்டை போட்டவர். 1985ம் ஆண்டு முதல் முறையாக பர்ஸா தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனவர் சந்திரிகா ராய். ஆரம்பத்தில் காங்கிரஸில் இருந்தவர்.. பின்னர் லாலுவுக்காக ஆர்ஜேடிக்கு வந்தார். ஆனால் மகளுக்கு ஏற்பட்ட கதியால் கோபமடைந்து அதிலிருந்து விலகி நிதீஷ் குமாருடன் கை கோர்த்தார்.. லாலு, தேஜஸ்வி யாதவுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வந்தார்.

தோல்வி
2019 லோக்சபா தேர்தலில் சரண் தொகுதியில் போட்டியிட்டார்... ஆனால் பாஜகவின் ராஜீவ் பிரதாப் ரூடியிடம் தோல்வியடைந்தார்... இவர் போட்டியிட்டுள்ள பர்ஸா தொகுதியில் ஆர்ஜேடிதான் பலம் வாய்ந்தது. யாதவ சமுதாயத்தினர் ஆர்ஜேடி பக்கம்தான் பலமாக உள்ளனர். அதை உடைக்கும் முயற்சியில் சந்திரிகா ராய்க்கு எப்படி வெற்றி கிடைக்கும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் தற்போது அவர் முன்னிலை வகுத்து வருவதால் ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications