யார் பெருசுனு அடிச்சுக் காட்டு! ஆர்ஜேடியின் சாதி அரசியலும்..பாஜகவின் மத அரசியலும்! ஜெயிச்சது இதுதான்
பாட்னா: பீகார் சட்டசபைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) முன்னிலையில் உள்ளது. 243 தொகுதிகளில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் என்.டி.ஏ. முன்னிலையில் இருக்கும் நிலையில், மீண்டும் பாஜக-நீதீஷ் குமார் கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், ஆர்ஜேடி நீண்டகாலமாக ஜாதி அரசியலை தூக்கிப் பிடித்த நிலையில், பாஜக மத அரசியலை கையிலெடுத்ததோடு, அதில் வெற்றியையும் பெற்றிருக்கிறது.
பீகார் அரசியலில் லாலி பிரசாத் யாதவ் உருவாக்கிய ஆர்ஜேடி கட்சி நீண்டகாலமாக யாதவ் மற்றும் முஸ்லிம் சமூக வாக்குகளால் வலிமையாக திகழ்ந்து வருகிறது என்பது அரசியல் ஆய்வாளர்கள் கோடிட்டுக் காட்டும் ஒரு முக்கிய தகவல்.
பீகார் மாநிலத்தின் பின்தங்கிய மற்றும் மிகப் பின்தங்கிய (BC-MBC) சமூகங்களுக்கு குரல் கொடுப்பதாக ஆர்ஜேடி தன்னை காட்டிக் கொண்டாலும், யாதவ் சமூகத்தின் ஆதரவு மிக அதிக அளவில் அந்தக் கட்சிக்கே சென்று வருகிறது.

ஆர்ஜேடி ஜாதி அரசியல்
பீகாரில் யாதவ் சமூக மக்கள் சுமார் 14 முதல்16% உள்ள நிலையில், அவர்களின் வாக்கு பெரும்பாலும் ஆர்ஜேடிக்கே சென்றிருக்கிறது. இந்தத் தேர்தலிலும் 50க்கும் மேற்பட்ட ஆர்ஜேடி வேட்பாளர்கள் யாதவ் சமூகத்தைச் சேர்ந்தவர்களே என்ற குற்றச்சாட்டு எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலாக, பாஜக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி, பல்வேறு சாதி மற்றும் சமூகப் பிரிவுகளுக்கு சமமான வாய்ப்பு வழங்கியதாகவும், குறிப்பாக தலித் -மகாத்- எம்பிசி - ஓபிசி - இபிசி வாக்குகளை 'இந்து' மதம் என்ற குடையில் ஒன்றிணைத்துள்ளது என்றும் அரசியல் கணிப்புகள் கூறுகின்றன.
பாஜக இந்து அரசியல்
பீகாரில் இம்மக்கள் தொகை 50%க்கு அதிகம் என்பதையும் கவனிக்க வேண்டும். இந்த வாக்குகளே என்.டி.ஏ.வின் தற்போதைய முன்னிலைக்கு இது தான் காரணம் எனவும் சுட்டிக் காட்டுகின்றனர். இதற்கிடையில், நக்சல் பாதிப்பு மிகுந்த மாநிலமாக இருந்தாலும், எதிர்ப்பார்த்த அளவில் ஆட்சிக்கு எதிரான எதிர்மறை வாக்குகள், ஆர்ஜேடிக்கு செல்லவில்லை என வாக்கு எண்ணிக்கை சுட்டிக்காட்டுகிறது. ஆர்ஜேடி மீது பொதுவாக முன்வைக்கப்பட்ட "ஜாதி அரசியல்" குற்றச்சாட்டு இந்தத் தேர்தலிலும் தாக்கம் ஏற்படுத்தியிருக்கலாம் என அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
பீகார் தேர்தல் நிலவரம்
பீகார் மாநிலத்தில் நடைபெற்ற 243 தொகுதிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடந்தது. நவம்பர் 6 ஆம் தேதி முதல் கட்டமாக 121 தொகுதிகளில் 65% வாக்குகள் பதிவானது. நவம்பர் 11 ஆம் தேதி இரண்டாம் கட்டமாக நடைபெற்ற 122 தொகுதிகளில் 67% வாக்குகள் சேகரிக்கப்பட்டன. மொத்தம் 66.91% என்ற அதிக வாக்குப்பதிவு பீகாரின் சமீபத்திய தேர்தல் வரலாற்றில் அதிகமாகும். பாட்னா உள்ளிட்ட 46 வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்புடன் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
நிதீஷ் பாஜக கூட்டணி
முதலில் தபால் ஓட்டுகள், பின்னர் EVM இயந்திர வாக்குகள் எண்ணப்பட்டன. இதுவரை கிடைத்த தகவலின்படி, NDA 170-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதில் பாஜக 90க்கும் மேற்பட்ட இடங்களில், ஜேடியு 80-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் உள்ளன. எல்ஜெபி (ராம் விலாஸ்) 22 இடங்களில், பிற எண்டிஏ கூட்டணி சுமார் 5க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையிலுள்ளன.
இந்தியா கூட்டணி பின்னடைவு
மறுபுறம், இந்தியா கூட்டணியில் ஆர்ஜேடி 25-க்கும் மேற்பட்ட தொகுதிகளில், காங்கிரஸ் 5-க்கும் மேற்பட்ட இடங்களில், CPI(ML) 4 இடங்களில் முன்னிலையில் உள்ளது. மொத்தத்தில், அரசை அமைக்க 122 இடங்கள் தேவையான நிலையில், என்.டி.ஏ 200-ஐ தாண்டும் நிலையில் உள்ளதால், பீகாரில் மீண்டும் பாஜக-நிதீஷ் கூட்டணி ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications