ஹேண்ட்ஸ் அப்.. துப்பாக்கி முனையில் அரங்கேறிய கொள்ளை! அலறிய ஊழியர்கள்.. அசால்ட்டாய் இருந்த போலீஸ்.!
பாட்னா: திரைப்படங்களில் நடப்பது போல நகைக் கடைக்குள் திடீரென துப்பாக்கியுடன் புகுந்த கும்பல் ஊழியர்களின் கைகளை தூக்கச் சொல்லி நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சுமார் 25 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் சிசிடிவி காட்சிகளை வைத்து இதுவரை தட்டி தூக்கி இருக்கின்றனர் பீகார் போலீசார். இதற்கிடையே கொள்ளை நடந்த நகைக் கடையில் இருந்து வெறும் அரை கிலோ மீட்டர் தொலைவில் காவல் நிலையம் இருப்பதாகவும், போன் போட்டும் போலீசார் எடுக்கவில்லை என்ற பகிர் தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
பீகார் மட்டுமல்ல இந்தியாவையே பரபரப்பாக்கி உள்ளது அந்த கொள்ளை சம்பவம். திரைப்படங்களில் வருவது போல ஹெல்மெட், முகமூடி அணிந்து வந்த கொள்ளை கும்பல் துப்பாக்கியை காட்டி கொள்ளையடித்து சென்றிருக்கிறது. ஆனால் வழக்கம் போல தாமதமாக போலீஸ் வந்ததால் கொள்ளையர்கள் தப்பிச் சென்றிருக்கின்றனர்.

அங்குள்ள போஜ்பூர் மாவட்டத்தில் கோபாலி சவுக்கு பகுதியில் பிரபலமான நகை கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த கடையில் மட்டுமல்ல அந்த பகுதி முழுவதுமே எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.
இந்த நிலையில் இன்று காலை கடையை திறந்த ஊழியர்கள் வழக்கம் போல பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கையில் துப்பாக்கி சகிதமாக மூன்று பைக்குகளில் வந்த ஆறு பேர் கொண்ட கொள்ளை கும்பல் திடீரென நகைக் கடைக்குள் புகுந்து நெற்றிக்கு நேரே துப்பாக்கியை காட்டியது. ஊழியர்கள் அனைவரும் அதிர்ச்சியில் அப்படியே உறைந்தனர். தொடர்ந்து அனைவரையும் கையை தூக்கி ஓரமாக நிற்குமாறு கூறிய கும்பல் நொடி பொழுதில் நகைகளை அள்ளி பைகளுக்குள் போட்டுக் கொண்டனர்.
மேலும் கடையில் இருந்த கண்ணாடிகளை உடைத்து தங்கம் வெள்ளி வைரம் என கிடைத்ததை எல்லாம் சூறையாடி விட்டு அந்த கும்பல் தப்பி ஓடியது. அப்போது வெளியே இருந்து உள்ளே வந்த ஊழியர் ஒருவரை சரமாரியாக தாக்கிய அந்த கும்பல் வரிசையில் நிற்க வைத்தது. இந்த நிலையில் கடைக்குள் கொள்ளையர்கள் புகுந்ததை கண்ட அருகில் இருந்தோர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். கொள்ளை நடந்த நகைக்கடையில் இருந்து வெறும் அரை கிலோ மீட்டர் தொலைவில் தான் அந்த காவல் நிலையம் இருப்பதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து 30 முறை அழைத்தும் போனை எடுக்கவில்லை. கடைசியாக, போனை எடுத்த காவலர் ஒருவர் கொள்ளை நடந்து விட்டதா இன்னும் அரை மணி நேரத்தில் வந்து விடுவோம் என கூறி இருக்கிறார். அரை கிலோமீட்டர் வருவதற்கு எதற்கு 30 நிமிடம் என கேட்பதற்குள் காவலர் ஃபோனை வைத்து விட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே கடையிலிருந்து நகைகளை எல்லாம் மூட்டை கட்டிக்கொண்ட கொள்ளை கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.
இதற்கிடையே கொள்ளை குறித்து தகவல் அறிந்த போலீசார் கொள்ளையர்களை பிடிப்பதற்கான நடவடிக்கையில் இறங்கினர். தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்தபோது அவர்கள் டோரிக் கஞ்ச் நோக்கி செல்வது தெரிய வந்தது. தொடர்ந்து சினிமா பாணியில் அவர்களை துரத்திச் சென்ற போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி இரண்டு கொள்ளையர்களை பிடித்தனர். அப்போது நடந்த சண்டையில் இருவருக்கு கால் மற்றும் முதுகில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து கீழே விழுந்த அவர்களை சுற்றி வளைத்த போலீசார் அவர்கள் வைத்திருந்த நகைகளை கைப்பற்றி இருக்கின்றனர். மேலும், தப்பிச் சென்ற நான்கு கொள்ளைகளை கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர். துப்பாக்கி குண்டு பட்டு காயமடைந்த இரு கொள்ளையர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கடையில் குண்டுமணி தங்கத்தை கூட விட்டு வைக்காமல் கொள்ளையர்கள் நகைகளை அள்ளிச் சென்றதாகவும் அதன் மதிப்பு 25 கோடி ரூபாய் என நகைக்கடையின் மேனேஜர் கூறி இருக்கிறார். பட்டப் பகலில் துப்பாக்கி முனையில் பீகாரில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் பகுதி வியாபாரிகளை கடும் அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications