வீதிக்கு வரும் குடும்ப சண்டை..லாலு மகன்களுக்கிடையே முற்றும் அதிகார போட்டி.. இரண்டாக உடையும் ஆர்ஜேடி?
பாட்னா; பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்குள் யார் பெரியவர் என்ற அதிகார போட்டி லாலு பிரசாத் யாதவின் இரு மகன்களுக்கு இடையை உச்சமடைந்துள்ளது. இது கட்சியின் பெயரை டேமேஜ் செய்யும் வகையில் அமைந்துள்ளது.
பீகார் மாநிலத்தில் கடந்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இதில் லாலு பிரசாத் யாதவின் இளைய மகன் தேஜஷ்வி யாதவ், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை வழிநடத்தினார்.
ஊரக உள்ளாட்சித் தேர்தல்.. ஆதிக்கம் செலுத்தப் போவது யார்? காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்கு எண்ணிக்கை
இந்தத் தேர்தலில் 75 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக ராஷ்டிரிய ஜனதா தளம் உருவெடுத்தது. இருப்பினும், பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைப் பெற முடியவில்லை. இதனால் பாஜக கூட்டணி ஆட்சியே பீகாரில் தொடர்ந்தது,
பாத யாத்திரை
இந்நிலையில் பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்குள் யார் பெரியவர் என்ற அதிகார போட்டி உச்சத்தை அடைந்துள்ளது. அதுவும் லாலு பிரசாத் யாதவின் இரு மகன்களுக்கு இடையே இந்த உள்கட்சி மோதல் அடுத்த கட்டத்திற்குச் சென்றுள்ளது. லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் அங்குள்ள காந்தி மைதானத்தில் இருந்து மறைந்த மூத்த சோசலிஸ்ட் தலைவர் ஜெயபிரகாஷ் நாராயணன் வீட்டை நோக்கி பாத யாத்திரையைத் தொடங்கினர். இந்த யாத்திரையில் கலந்து கொள்ளும்படி சகோதரர் தேஜஷ்வி யாதவுக்கு தேஜ் பிரதாப் யாதவ் அழைப்பு விடுத்திருந்தார். இருப்பினும் தேஜஷ்வி யாதவ் தரப்பில் இருந்து இதற்கு எந்த பதிலும் வரவில்லை.
தாய் பேச்சுக்கு மதிப்பில்லை
கடந்த சில காலமாகவே தேஜ் பிரதாப் யாதவ் மற்றும் தேஜஷ்வி யாதவ் ஆகியோருக்கு இடையே அதிகார போட்டி உச்சமடைந்துள்ளது. தேஜ் பிரதாப் கட்சியை தன்வசப்படுத்தும் நோக்கில் தனது பலத்தை நிரூபித்து கட்சிக்குள் தனது செல்வாக்கை அதிகரிக்கும் அதிகாரப் போட்டியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இந்தச் சூழலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, இருவருக்கும் இடையே சமாதானத்தை ஏற்படுத்த, தாயார் ராப்ரி தேவி பாட்னாவில் உள்ள தனது தேஜ் பிரதாப் இல்லத்திற்குச் சென்றார். இருப்பினும், அவர் வருவதாகத் தகவல் கிடைத்ததுமே தேஜ் பிரதாப் தனது வீட்டிலிருந்து வெளியே சென்றுவிட்டார்.
விலகி இருங்கள்
இன்று நடைபெற்ற பாத யாத்திரையின் போதும். தேஜ் பிரதாப் தனது தாயார் இருக்கும் வீட்டைத் தாண்டியே சென்றார். இருப்பினும், தேஜ் பிரதாப் அங்கு நின்று அவரது தாயைச் சந்திக்கவில்லை. இந்த பாத யாத்திரையின் இறுதியில் செய்தியாளர்களிடம் பேசிய தேஜ் பிரதாப், விரைவில் தனது தாயைச் சந்தித்து ஆசீர்வாதம் பெறவுள்ளதாகக் குறிப்பிட்டார். ஆர்ஜேடி மாநில தலைவர் ஜக்தானந்த் சிங்கை தேஜ் பிரதாப் பல சந்தர்ப்பங்களில் மிக மோசமான கருத்துகளால் விமர்சித்துள்ளார். இதனால் அவரை கட்சி விவகாரங்களில் இருந்து ஒதுங்கி இருக்கும்படி ஆர்ஜேடியின் மூத்த தலைவர் சிவானந்த் திவாரி அறிவுறுத்தியுள்ளார்.
பிணைக்கைதியாக லாலு?
தேஜ் பிரதாப்பின் இது போன்ற பொறுப்பற்ற பேச்சுகள் அவரது தந்தை லாலு பிரசாத் யாதவையும் கோபப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. சிறையில் இருந்து விடுதலை ஆகியுள்ள லாலு பிரசாத் யாதவ் தற்போது டெல்லியில் உள்ள தனது மகள் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். சமீபத்தில் தேஜ் பிரதாப் தனது தந்தையைச் சந்திக்க டெல்லி சென்றிருந்தார். இருப்பினும், லாலு பிரசாத் யாதவ் அவரை சந்திக்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் செய்தியாளர்களிடம் பேசிய தேஜ் பிரதாப், தனது தந்தையை டெல்லியில் பிணைக்கைதியாக உள்ளதாகக் கூறி பரபரப்பைக் கிளப்பினார். இதை முற்றிலும் மறுத்த தேஜஸ்வி, "லாலு பிரசாத் போன்ற ஒருவரை யாராவது பிணைக்கைதியாக வைத்திருக்க முடியுமா?" என்று பதிலுக்குக் கேள்வி எழுப்பினார்.
உள்ளாட்சி தேர்தல்
பீகார் மாநிலத்தில் காலியாக உள்ள 3 தொகுதிகளில் வரும் அக்டோபர் 30ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஆர்ஜேடி வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்ய லாலு பிரசாத் யாதவ், அக்டோபர் 3ஆவது வாரத்தில் பீகார் வருவார் எனக் கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர். அவரது வருகை ஆர்ஜேடி கட்சிக்கு நிச்சயம் பலம் சேர்க்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
அடுத்த தலைவர் யார்
அதேநேரம் வயது காரணமாக லாலு பிரசாத் யாதவால் முன்பு போல அரசியலில் ஆக்டிவாக செயல்பட முடியாது. எனவே, அடுத்த கட்சியின் முகமாக இருக்கத் தலைவர் தேவை. இதற்குத் தான் லாலு பிரசாத் யாதவ் இரு மகன்களுக்கு இடையே போட்டி நிலவுகிறது. இதில் பெற்றோரின் ஆசியும் சரி கட்சியின் ஆதரவும் சரி இளைய மகன் தேஜஷ்வி யாதவுக்கே கிடைத்துள்ளது. தொடர்ந்து மூத்த தலைவர்களை விமர்சிப்பது, பொறுப்பற்ற நடவடிக்கை ஆகியவற்றில் ஈடுபடும் தேஜ் பிரதாப் யாதவ் தனது நடவடிக்கையை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவரது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என எச்சரிக்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
சீக்கிரம் முடிய வேண்டும்
அதேபோல பொறுப்பான மற்றும் முதிர்ச்சியான அரசியல் நடவடிக்கைகளை எடுத்து வரும் தேஜஷ்வி யாதவ் கட்சியின் அடுத்த முகமாக மாறும் வாய்ப்புகள் மிக மிக அதிகம். அதேநேரம் அதிகாரப் போட்டிக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்றால் ஆர்ஜேடி கட்சியில் உட்கட்சி குழப்பம் அதிகரிக்கலாம். இது கட்சிக்கு நல்லதல்ல என்றும் அரசியல் விமர்சகர்கள் எச்சரித்துள்ளனர்.